Samstag, 23. August 2014

திரைக்கடலோடி இலக்கியம் தேடி... 9




















ஒரு பாமர இரசிகனின் இரசனைக் குறிப்புக்கள்

-இந்துமகேஷ்





உலகத்தரம் என்று ஒன்று.
இது எல்லோர்க்கும் பொது என்ற ஒன்றாக இல்லாமல் பிறநாட்டவன், பிறமொழிபேசுபவன், பிற கலாச்சாரப் பண்புகள் வாய்ந்தவன் என்று அடுத்தவனிலிருந்து நாம் எந்தளவு வித்தியாசப் படுகிறோம் என்பதைக் கணிப்பிடுகிற ஒன்றாக நோக்கப்படுகிறது.

அவனைப்போல் அல்லது அவனைவிட நான் எந்தளவு உயர்ந்தவன் என்று நோக்குகிற மனோபாவம் நமது முன்னேற்றத்துக்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இது நம்மை ஒருவித தாழ்வுச் சிக்கலுக்குள் தள்ளிவிடுகிறது.

நம்மிடமுள்ள தனித்துவத்தை அதன் சிறப்பை மறந்து அடுத்தவனைப் பார்த்து ஆதங்கப்பட ஆரம்பிக்கும்போதுதான் நமது முன்னேற்றமும் தடைப்பட்டுப் போகிறது. ஒருவித மனத்தளர்ச்சிக்குள் நாம் தள்ளப்பட்டுவிடுகிறோம். சாதனை புரியும் தகுதி நம்மிடம் இல்லையோ என்ற சந்தேகம் வலுத்துவிடுகிறது. இவ்வளவுதான் நாம் என்று ஒரு வட்டம் போட்டுக்கொண்டு அதற்குள்ளேயே சுற்றிவரத் தொடங்கிவிடுகிறோம்.

தமிழ்த்திரையுலகமும் இப்படியொரு தாழ்வுச் சிக்கலுக்குள அவ்வப்போது தள்ளப்பட்டுக்கொண்:டே வந்திருக்கிறது. அதனை மீட்டெடுக்க முனைந்தவர்களும் பலவித  சோதனைகளைச் சந்தித்தாகவேண்டியிருந்தது.
வெளிநாட்டுக்காரனைப் பார் எத்தனை அற்புதமாகப் படம் எடுக்கிறான்... நாங்களும் எடுக்கிறோமே.. படமா இது? என்று சலித்துக்கொள்வதில் நாம் சலிப்புக்கொள்வதில்லை.

உலகளாவிய ரீதியில் வெளியாகும் திரைப்படங்கள் என்று கணக்கிட்டுப் பார்த்தால் பல்லாயிரக்கணக்கான திரைப்படங்கள் இதுவரை வெளியாகிவிட்டன.
இதில் எத்தனை திரைப்படங்கள் தரமானவை என்று விமர்சகர்கள் புளுகிக்கொண்டிருக்கிறார்கள்.? பிறமொழிப் படங்களைப் பார்த்து இரசிக்கும் இரசிகர்களின் கணிப்பின்படி எத்தனை படங்கள் தரமானவை என்று கணக்கில் கொள்ளப்பட்டிருக்கின்றன? 
ஒரு நூறு? அல்லது இருநூறு?

வருடாந்தம் ஆயிரக்கணக்கான படங்களைத் தயாரித்துத் தரும் உலகத் திரைப்படத்துறை விரல்விட்டு எண்ணத்தக்க அளவுக்குத்தான் தரமானது என்று பேசப்படும் படங்களைத் தயாரிக்கிறது என்றால் உலகத் திரைப்படத் துறையில் ஒரு பகுதியான தமிழ்ப் படத்துறை எத்தனை படங்களைத் தரமுடியும்.?

தரமான பல படங்கள் வெளிவந்தும் அதைத் தரம் என்று ஒப்புக்கொள்ள மறுக்கிற மனோபாவத்துக்கு உலகத்தரம் என்று பெயரிட்டு அவற்றை ஓரங்கட்டுவதில் நமக்கு நிகரானவர்கள் நாமே.
தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன்போல், யார் என்னசொன்னாலும் தரமான படங்களைத் தயாரித்தே தீருவோம் என்று சளைக்காது பாடுபடும் கலைஞர்களும் தமிழ்த்திரையுலகில் நிறையவே இருக்கிறார்கள். சாதித்துக்கொண்டும் இருக்கிறார்கள்.

பல்வகைப்பட்ட மாந்தர்களின் வாழ்க்கையைச் சொல்லும் இலக்கியங்களின்
ஆரம்பம் அவதாரபுருசர்களைக் கதைமாந்தர்களாகக் கொண்டது. (இராமாயணம், மகாபாரதம், சிலப்பதிகாரம், இன்னோரன்ன கதைகளிலும் இவற்றிலுள்ள கிளைக்கதைகளிலுமுள்ள கதை மாந்தர்கள்)

பிறகு மன்னர்களைக் கதைமாந்தர்களாக்கியது (அக்பர், அரிச்சந்திரா, அம்பிகாபதி, வீரபாண்டிய கட்டபொம்மன், அரசிளங்குமரி, நாடோடி மன்னன், இராஜராஜசோழன் மன்னாதி மன்னன், ஆயிரத்தில் ஒருவன்போன்ற படங்கள்;) 

பிறகு மேல்தட்டு மனிதர்களைக் கதைமாந்தர்களாக்கியது. ( உயர்ந்த மனிதன், எங்க ஊர் ராஜா, பைலட் பிரேம்நாத், மோட்டார் சுந்தரம்பிள்ளை, அபூர்வ ராகங்கள் ) 

பின்னர் நடுத்தரக் குடும்பத்து மாந்தர்கள் ( கல்யாணப்பரிசு, ஆடிப்பெருக்கு, ஆலயமணி, அவள் ஒரு தொடர்கதை,) தொடர்ந்து அடித்தட்டு மக்கள் கதாபாத்திரங்களாயினர். (துலாபாரம், சுவரில்லாத சித்திரங்கள்)

திரையில் இலக்கியம் படைக்க விளைந்தவர்கள் நகரங்களிலிருந்து கிராமங்களுக்கு வந்தார்கள். (பதினாறு வயதினிலே, அலைகள் ஓய்வதில்லை, மண்வாசனை,) 
அவர்களது படக்கருவிகளின் பார்வைக்குள் இயற்கை இலக்கியமாய்ப் படிந்தது. அந்த இயற்கையோடு இரண்டறக் கலந்த மனிதர்கள் கதாபாத்திரங்களாக தமிழ்த் திரைப்படங்களில் வாழ ஆரம்பித்தார்கள்.

முடிந்துபோன காலங்களை மறுபடி மீட்டிப்பார்ப்பதில் உள்ள சுகத்தை உணர்ந்தவர்களாய் அதை இலக்கியமாக்கும் முயற்சியில் ஒரு சிலர் ஈடுபாடுகாட்டியபோது உருவான சில படங்களின் வெற்றி தமிழ்த் திரையுலகில் புதியதொரு மாற்றத்தைக் கொணர்ந்திருக்கிறது என்றே சொல்லலாம். (பாலுமகேந்திராவின் அழியாத கோலங்கள், சேரனின் -ஆட்டோகிராப், தவமாய்த் தவமிருந்து - தங்கர்பச்சானின் - அழகி, பள்ளிக்கூடம்) 

சிறந்த ஒரு நாவலைப் படித்த மனநிறைவை அண்மையில் எனக்குத் தந்த படம்- கல்லூரி.
நடிகர்களாகப் பரிச்சயம் கொள்ளாத முகங்களோடு அந்தக் கதையின் பாத்திரங்களாகவே இன்னும் மனதில் நிழலாடுகிற அந்தக் கதை மாந்தர்கள் ஒருபோதும் மறக்கவே முடியாதவர்களாய் என்னுள் நிலைத்துவிட்டார்கள்.
ஏழ்மைநிலவும் குடும்பங்களிலிருந்து கல்லூரிக் கனவுகளோடு வாழ்வைத்தொடரும் இளைஞர் யுவதிகளை அவர்தம் உணர்வுகளை யதார்த்தம் மாறாது கண்ணெதிரே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது கல்லூரி. மிகைப்படுத்தப்படாது வெளிப்படுத்தப்படும் அந்தத் தோழமை உணர்வும், வெளிப்படுத்தப்படாமலே முற்றுப்பெறுகின்ற காதலும் இந்தக்கதையில் முக்கிய பங்கு எடுத்திருந்தபோதும், நடிக்கிறார்கள் என்ற உணர்வே தோன்றாமல் எல்லாப் பாத்திரங்களும் இயல்பான மாந்தர்களாய் வாழ்ந்து முடித்திருக்கிறார்கள் என்பது இந்தப் படத்தின் சிறப்பு.



கையில் எடுத்ததும் வாசித்து முடித்துவிட்டுத்தான் வைக்கவேண்டும் என்று துடிப்பேற்படுத்துகிற ஓர் இலக்கியமாய், தொடக்கம் முதல் முடிவு வரை அந்தப் பாத்திரங்களோடு உறவாடிக்கொண்டிருக்கவேண்டும் என்ற உத்வேகத்தைத் தருகிறது கல்லூரி.
பாலாஜி சக்திவேல் என்கிற அந்தப் புதிய எழுத்தாளனுக்கென்று தமிழ்த் திரையுலகத்தில் ஒரு தனியிடத்தைத் தந்திருக்கிறது கல்லூரி.























Dienstag, 29. Juli 2014

திரைக்கடலோடி இலக்கியம் தேடி...8


ஒரு பாமர இரசிகனின் இரசனைக் குறிப்புக்கள்.
-இந்துமகேஷ்



„...வீரம் விலைபோகாது விவேகம் துணைக்கு வராவிட்டால்..!
தீட்டிய வாளும் தினவெடுத்த தோள்களிலே
தூக்கிய ஈட்டியும் போதாது தோழர்களே!
இதோ நான் தரும் அறிவாயுதத்தையும் 
எடுத்துக் கொள்ளுங்கள்!“

-மேடையில் கிரேக்கத்துத் தத்துவஞானி சாக்ரடீஸ் பேசிக்கொண்டிருக்கிறார்.
மெய்மறந்து கேட்டுக்கொண்டிருக்கிறது இரசிகர் கூட்டம்.

ஊருக்குள் அவ்வப்போது விழாக்கள் நடக்கும்.
பெரும்பாலான விழாக்களில் இடம்பெறும் முதன்மையான ஒர் அம்சம் -„ஓரங்க நாடகம்.“
அதென்ன ஓரங்கம்?
அந்தச் சொல்லும் அதன் பொருளும் அந்த நேரத்தில் எனக்குத் தெரிந்திருக்கவில்லை.


ஒரு வரலாற்றின் அல்லது ஒரு கதையின் நாடகவடிவத்தின் ஒரு பகுதிதான் அது என்பதைப் பின்னர் தெரிந்துகொண்டேன்.

ஓரங்க நாடகங்கள் மூலம் ஊருக்குள் உலாவந்த அனார்க்கலி, சாக்ரடீஸ், சாம்ராட் அசோகன் சேரன் செங்குட்டுவன், ஒதெல்லோ, சத்தியவான் சாவித்திரி போன்ற கதாபாத்திரங்கள் உள்ளூர் இளைஞர்களின் உணர்ச்சிகரமான நடிப்பில் மேடைகளை அலங்கரித்தார்கள்.


வேற்றுமொழி இலக்கியங்களிலிருந்து தமிழ் வடிவம் பெற்ற பாத்திரங்கள்கூட செந்தமிழ்பேசி சிலிர்க்க வைத்தார்கள்.
இந்தக் கதாபாத்திரங்கள் எல்லாம் தமிழ்த்திரைப்படங்களிலிருந்துதான் வெளிப்பட்டார்கள் என்பதும், இவர்கள் எல்லாம் தமிழ்த் திரைக் கதாசிரியர்களின் கைவண்ணமே என்பதும் பின்னர் நான் தெரிந்துகொண்ட செய்திகள்.

பராசக்தியின் நீதிமன்றக் காட்சியும், வீரபாண்டியக் கட்டபொம்மனின் வெள்ளைக்காரத் துரையுடனான விவாதங்களும் ஓரங்கநாடகங்களாக மாறி அந்தக்கால இளைஞர்களை வீர வசனம் பேசவைத்துக்கொண்டிருந்த போதுதான் இந்த ஓரங்க நாடகங்களும் முகம் காட்டின.

ஒரு முழுநீளத் திரைக்கதைக்குள் கிளைக்கதைகளாய் இத்தகைய ஓரங்க நாடகங்கள்  இடம்பிடித்துக் கொண்டிருந்தன. 

தூயதமிழ் வசனங்களால் இதயங்களைக் கொள்ளையிட்ட இந்தக் கதாபாத்திரங்களில் பெரும்பாலானவை நடிகர்திலகத்தின் மூலமாகவே உயிர்பெற்றிருந்தன.

அனார்க்கலியின் நாயகனான சலீம் (இல்லறஜோதி), தத்துவஞானி சாக்ரடீஸ்(ராஜா ராணி),சாம்ராட் அசோகன் (அன்னையின் ஆணை), ஒதெல்லோ(இரத்தத் திலகம்), சேரன் செங்குட்டுவன் (ராஜா ராணி), சத்தியவான் சாவித்திரி(நவராத்திரி), சகுந்தலையின் நாயகன் துஸ்யந்தன்(எங்கிருந்தோ வந்தாள்), விடுதலைவீரன் பகத்சிங், யூலியஸ் சீசர், (ராஜபார்ட் ரங்கதுரை) என்று அவர் ஏற்ற பாத்திரங்கள் ஏராளம். அந்த ஓரங்க நாடகங்கள் மூலம் என்றுமே மறக்கமுடியாத நிலையில் இன்றும் அவர்கள் நம்மிடையே உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்..







புராண இதிகாசக் கதைகளினின்று சமூகக் கதைகளுக்கு தமிழ்த் திரையுலகம் முன்னிடம் கொடுத்த அந்த ஆரம்பகாலங்களில் பெரும்பாலான கதைகளின் நாயகர்கள் ஒரு படைப்பாளியாகவோ அல்லது நாடகக் கலைஞனாகவோ அல்லது இசைக்கலைஞனாகவோதான் சித்திரிக்கப்பட்டார்கள்.
கலை இலக்கியம் சார்ந்த கதாபாத்திரங்களை முக்கியமானவர்களாகக் கொண்டு கதை பின்னப்படும்போது அவர்களது வாழ்க்கையில் நாடகம் ஒரு பங்கு வகிக்கும். அவர்கள் எழுதுவதாகவோ நடிப்பதாகவோ ஒரு ஓரங்க நாடகம் திரைக்கதைக்குள் நுழைந்துகொள்ளும்.

கே.பாலசந்:தர் எனும் ஒரு அற்புதமான நாடகாசிரியர் பின்னர் திரைக் கதை வசனகர்த்தாவாகவும் இயக்குனர் சிகரமாகவும் உயர்ந்தவர். அவரது நீர்க்குமிழி, எதிர் நீச்சல் மேஜர் சந்திரகாந்த், சர்வர் சுந்தரம் போன்ற பல நாடகங்கள் பின்னர் அவராலேயே திரைவடிவம் பெற்றன. சராசரி மனிதவாழ்வில் இடம்பெறும் சம்பவங்களைக்கொண்டு
பின்னப்பட்ட கதைகளே ஆயினும் நுண்ணிய மன உணர்வுகளை அப்படியே அற்புதமாக வெளிக்கொண்டு வரும் அவரது ஆற்றல் அவரது படைப்புக்களை இரசிகர்களிடத்தே நிலை நிறுத்திவைக்க உதவியது.

அவரது பாத்திரங்களை ஏற்று நடித்த பல புதுமுகங்கள் பின்னாட்களில் பிரபலம் பெற்றதற்கு அவரது பாத்திரப் படைப்புக்களும் ஒரு முக்கிய காரணம்.

தன்னைத்தான் தரமான இரசிகனாக எண்ணிக்கொள்ளும் ஒருவன், „நான் பாலசந்தரின் படங்களைத்தான் விரும்பிப் பார்ப்பேன்“ என்று சொல்லிக் கொள்வதன்மூலம் தன்னை உயர்த்திக்கொண்டு அவருக்கும் சிறப்பைத் தேடிக்கொண்டிருந்தான்.

திரைக்கதைகளில் மிகுந்த கவனம் செலுத்துபவர்களில் கே.பாலசந்தருக்குத் தனியிடம் உண்டு. அவரது கதைகளில் பெரும்பாலானவை  முற்றுப் பெறாதவை. ஒரு கதையின் முடிவிலிருந்து இன்னொரு கதையை நாம் ஆரம்பிக்கலாம் என்று கருதத் தக்கவகையில் அவரது கதைகள் இருக்கும். முடிவை இரசிகர்களிடமே அவர் விட்டு விடுவதும் உண்டு. 

தமிழ்த் திரையுலகில் எத்தனையோ கதைகள் யதார்த்தத்தைப் பிரதிபலித்திருக்கின்றன என்ற உண்மையைப் புரிந்துகொள்ளாமல், அல்லது புரிந்தும் புரியாதவர்களாய் தங்களைக் காட்டிக்கொள்கிற இரசிகர்கள் சிலர், தாங்கள் எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதையோ அல்லது யதார்த்தம் என்று எதைப் புரிந்தகொண்டிருக்கிறார்கள் என்பதையோ தெளிவுபடுத்துவதில்லை.

எத்தனையோ கோடிக்கணக்கான மனிதர்கள் வந்துபிறந்து வாழ்ந்து முடித்துவிட்டுப்போன இந்த உலகத்தில் ஒருசில நூற்றுக்கணக்கானவர்களே பேர்சொல்ல வாழ்ந்திருக்கிறார்கள் என்பதால் மற்றவர்கள் வாழ்வெல்லாம் அர்த்தமற்றதென்று சொல்லிவிட முடியுமா?
எல்லோரும் வாழவே முயற்சித்திருப்பார்கள். வாழ்ந்திருப்பார்கள். 

மர்மக்கதையாய் தொடங்கும் வாழ்க்கை, மாயாஜாலக்கதையாய் கற்பனைகளில்விரிந்து, பல சமயங்களில் சோகக் கதைகளாகவும் சிலசமயங்களில் நகைச்சுவைக் கதைகளாகவும் உருப்பெற்று மறுபடியும் மர்மக்கதையாகவே மடிந்துபோகிறது. இந்த இடைப்பட்ட வாழ்க்கைக் காலம் பெருமளவில் கற்பனைகளிலேயே கரைந்துபோய் விடுகிறது. அந்தக் கற்பனைகளையே திரையுலகம் பிரதிபலிக்கிறது.

கற்பனைகளில் வாழ்க்கையைக் காண்பவனுக்கு அது யதார்த்தம்.
யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளாதவனுக்கு அது கற்பனை.

Sonntag, 8. Juni 2014

திரைக்கடலோடி இலக்கியம் தேடி...7














-ஒரு பாமர இரசிகனின் இரசனைக் குறிப்புக்கள்
-இந்துமகேஷ்.


வாழும் காலத்தைப் பிரதிபலிக்கத் தவறுகிற படைப்புக்கள் அவற்றின் இலக்கியத் தன்மையையும் இழந்துவிடுகின்றன. யதார்த்தத்தைப் பேசுகிற அல்லது யதார்த்தத்தை வெளிக்கொணருகிற கதாபாத்திரங்கள் இலக்கியத் தன்மையைப் பெற்றுவிடுவதால் அவை காலகாலத்துக்கும் நிலைத்து நிற்கின்றன.

கலை, இலக்கியங்கள் எப்போதுமே இரண்டு விடயங்களைத் தம்முள் கொண்டிருக்கின்றன.
ஒன்று- மகிழ்வூட்டுவது. 
மற்றொன்று -மனித சமுதாயத்தை நெறிப்படுத்துவது.
இவற்றில் ஒன்று குறைவுபட்டாலும் அவை வெற்றிபெறுவதில்லை.

மகிழ்வூட்டும் கலையாகிய திரைப்படத்துறை வாழ்க்கையை நெறிப்படுத்தும் தன்மையையும் தன்னுள் கொண்டிருக்கும்போதுதான் அது இலக்கியத்தோடு தன்னை இணைத்துக் கொள்கிறது. வெறுமனே பொழுதுபோக்குக் கலையாகமட்டும் மாறிவிடாமல் அது நின்று நிலைக்கிறது.

திரைத்துறையின் வருகைக்கு முன்னான பண்டைய காலகட்டங்களில் தமிழ் இலக்கியம் பாக்களினூடேதான் வளர்ந்திருக்கிறது.

உரைநடைகளாக இலக்கியங்கள் மாற்றம் பெறுமுன் பாடல்களாகவே இலக்கியங்கள் படைக்கப்பட்டிருந்ததாலோ என்னவோ  ஆரம்பகாலத் தமிழ்த் திரைப்படங்கள் பாடல்களுக்கு அதி முக்கியத்துவம் அளித்திருந்தன. இன்றுவரை அது தொடர்கிறது.
இனியும் அது தொடரும்.

“காதல் வீரம் சோகம் என்று எதைச் சொல்வதானாலும் ஒரு பாட்டு. இது இயற்கைக்கு மீறிய ஒரு காரியமில்லையா? இப்படிச் சந்தர்ப்பங்களில் எல்லாம் ஒருவன் பாடிக்கொண்டா இருப்பான்?” என்று பல மேதாவிகள் இப்போதும் கூப்பாடு போட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
அவர்களின் கூச்சல்களையெல்லாம் ஓரமாக ஒதுக்கிவிட்டு தமிழ்ப்படங்களில் பாடல்கள் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றன.

இசை நமது வாழ்வோடு இணைந்துவிட்ட ஒரு காரியமாகிவிட்டது என்பதே யதார்த்தம்.

நாம் மண்ணில் வந்து வீழ்ந்தபோது அழுகுரலிலேயே கச்சேரியைத் தொடங்கிவிடுகிறோம். அம்மா பாடும் தாலாட்டுப் பாட்டில் கண்ணயர்கிறோம். நம்மைப் படைத்தவனைப் பிரார்த்திப்பதற்கென்று பள்ளிக்கூடத்தில் பாட்டுப் பாடச் சொல்கிறார்கள். தேசியகீதம் என்று தேசத்துக்கு வணக்கம் சொல்லவும் பாட்டு. உள்ளம் கவர்ந்தவனை (அல்லது கவர்ந்தவளை) நினைத்துக்கொண்டு நின்றாலும் நடந்தாலும் குளித்தாலும் மனதினுள் ஆனந்தப்பாட்டு.

எல்லாம்முடிந்து கடைசிப்பயணம் புறப்படும்போது மற்றவர்குரலில் எழும் ஒப்பாரிப் பாட்டு.
பாட்டில்லாமல் வாழ்வாவது?
அதனால்தான் தமிழ்ப் படங்களிலும் பாட்டு.


இத்தனை ஆயிரக்கணக்கான பாடல்கள் உருவாகிவிட்டன.
ஏதேனும் ஒரு பாட்டில் தனது வாழ்வின் ஒரு நிகழ்வையாவது தரிசிக்காதவன் எவனுமே இல்லை என்கிற அளவுக்கு எல்லோர் வாழ்வோடும் திரைப்படப் பாடல்களும் பின்னிப் பிணைந்துவிட்டன.

தமிழின் இனிமையை நாம் சுவைப்பதற்கு தமிழ்த் திரைப்படப் பாடல்கள் வழி வகுத்திருக்கின்றன.
பழந்தமிழ் இலக்கியங்களின் சுவையை பாமரர்களும் சுவைப்பதற்கு வழிசமைத்தவை தமிழ்த் திரைப்படப் பாடல்கள்தாம்.
இதற்கு ஏராளமான உதாரணங்கள் உண்டு.

தமிழ்த்திரைப்படப் பாடல்களில் பெரும்பாலான பாடல்கள் இலக்கியச்சுவை மிகுந்தவையே.
அன்று அமரர் கல்கி அவர்கள் எழுதி இசையரசி எம்.எஸ் சுப்புலட்சுமி அவர்கள் மீரா படத்துக்காகப் பாடிய காற்றினிலே வரும் கீதம் பாடல் அதன் இலக்கியச்சுவையாலேயே இன்றும் இளமைமாறாதிருக்கிறது.
இலக்கியச் சுவைமிகுந்த எண்ணற்ற பாடல்கள் தமிழ்த்திரையுலகில் தமக்கெனத் தனிமுத்திரையைப் பதித்துநிற்கின்றன. 










மரபுக் கவிதைகள் என்ற வகைக்குள் அடங்கும் ஏராளமான பாடல்களைத் தந்த கவியரசு கண்ணதாசன்முதல் புதுக்கவிதை என்ற வகைக்குள் அடங்கும் கவிதைகளைப் பாடல்களாகத் தந்த கவிஞர் வைரமுத்துவரை பிரபலமான கவிஞர்களோடு அவ்வப்போது ஓரிரு பாடல்களைமட்டுமே வரைந்து அழகுபார்க்கும் இளங்கவிஞர்கள்வரை தமிழ்த்திரையுகில் இலக்கியத்தை வளர்த்தெடுத்தார்கள். வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

அழகுதமிழ்ச் சொற்களை அடுக்கிவைத்து எழுத்துக்கோபுரம்கட்டும் திறன்வாய்ந்த பலர் தமிழ்த்திரையுகில் தடம்பதித்தபோதிலும் தனது எழுத்துக்கென்று ஒரு தனிப்பாணியை வகுத்துக்கொண்ட டி.இராஜேந்தர் என்ற கலைஞனை ஒரு தனித்துவமான இலக்கியவாதியாக நான் காண்கிறேன்.

மொழியின் தனித்துவத்தை அதன் வார்த்தைகளாலேயே மற்றவர் மகிழத் தருவதில்; அவருக்கு இணை அவர்தான். அவரது கதாபாத்திரங்கள் பெரும்பாலும் அடுக்குமொழியில் உரையாடுவார்கள். சிலசமயங்களில் அது மிகைபடத்தோன்றினாலும் அவரது மொழி ஆளுமையில் அந்த மிகைப்படுதல் மறைந்துபோய் அதை நாம் இரசிக்க ஆரம்பித்துவிடுவது அவரது எழுத்துக்கான வெற்றியே.
திரைக்கதை வசனம் பாடல்கள் இசை இயக்கம் நடிப்பு என்று பலவிதத்திலும் அவர் தனது பணியை விரிவுபடுத்தினாலும் அவரது பாடல்களின்மூலம் அவர் தன்னை ஒரு இலக்கியவாதியாக நிலை நிறுத்தியிருக்கிறார்.





(ஜெர்மனியிலிருந்து வெளியாகும் வெற்றிமணி பத்திரிகையில்
2008 காலப்பகுதியில் வெளியான எனது கட்டுரைத்தொடர்)

Montag, 5. Mai 2014

திரைக்கடலோடி இலக்கியம் தேடி...6






திரைக்கடலோடி இலக்கியம் தேடி -6


வாழ்க்கை என்பது ஒரு தொடர்கதை.
முதல்மனிதன் உருவானபோது தொடங்கிய வாழ்க்கை இன்னும் முற்றுப் பெறாமல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

இந்த வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொரு தனிமனிதனும் ஒவ்வோர் அத்தியாயங்களாகத்தான் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொண்டிருக்கிறார்களே தவிர வாழ்க்கையை எவரும்  முழுமையாக வாழ்ந்து முடித்துவிடவில்லை.

நேற்றைய மனிதர்களின் எச்சங்களாய் இன்றைய மனிதர்கள்.
இன்றைய மனிதர்களின் எச்சங்களாய் நாளைய மனிதர்கள்.

இன்று நாம் வாழ்கின்ற வாழ்க்கை என்பது நேற்றைய நம்மவர்கள் விட்டுச் சென்ற வாழ்க்கையின் தொடர்ச்சி. இன்று நாம் விட்டுச் செல்வதை நாளைய நம்மவர்கள் தொடரப் போகிறார்கள். இவ்வளவுதான் வாழ்க்கை.

எதிலும் முழுமை பெறாமல் முழுமை பெற்றதாகத் தோன்றுகின்றவற்றிலும் நிறைவு பெறாமல் முழுமையைத் தேடிக்கொண்டிருக்கிறோம் நாம்.

இந்த நிலை நமது வாழ்வோடிணைந்த கலை இலக்கியங்களுக்கும் உண்டு.

“முழுமையாக வாழ்ந்து முடித்த மனிதன் யார்?” என்ற கேள்வி எழுந்தால், “அவன் இன்னும் பிறக்கவில்லை!” என்பதே பதிலாக இருக்கும்.
இதுபோல் “முழுமையான இலக்கியம் எது?” என்று கேட்டால் அது இன்னும் படைக்கப்படவில்லை என்பதே பதிலாக இருக்கும். ஆக தேடலிலேயே தொடரும் வாழ்க்கை. இந்த யதார்த்தத்தை எல்லோரும் புரிந்துகொண்டிருப்பதால்தான் எதிலும் நிறைவு காணாமல் எதற்காகவோ காத்திருக்கிறோம் நாம்.



திரைப்படங்களில் நமக்கு நிறைவுதருவதாய்த் தோன்றுகின்ற பல படங்களும் நிறைவு தராதவைகளின் பட்டியலில் போய்விடுகிறது என்பதற்குக் காரணமும் நமது இத்தகைய மனோநிலைதான்.

சிறுவயதில் நாம் வாசிக்கும் சித்திரக் கதைகளில் ஒவ்வொரு கட்டத்திலும் பாத்திரங்கள் பேசும். பேசும் அவற்றின் உணர்வுகளை அவற்றின் முகங்கள் பிரதிபலித்துக்காட்டும்.

கதைகளில் இடம்பெறும் சித்திரங்களைப் போலவே திரைப்படங்களிலும் பாத்திரங்கள் பேசும். பல சந்தர்ப்பங்களில் அவற்றின் உணர்வுகளைத் துல்லியமாகக் காட்டுவதற்கென்றே பாடல்கள் பக்கத்துணையாய் வரும்.

கண்ணெதிரே திரைக்காட்சிகளில் தோன்றும் கதாபாத்திரங்கள், காட்சிகள் மறைந்தபின்னாலும் பாடல்கள்மூலம் நமது மனக்கண்ணில் அடிக்கடி தோன்றுகிறார்கள். அன்பு, பாசம், காதல், நட்பு என்று படரும் உறவுகளை, அவற்றின் விளைவான உணர்வுகளை ஒரு சிறந்த கலைஞனால் வெளிப்படுத்திவிட முடியும் என்றாலும் அதை மெருகேற்ற பாடல்கள் உதவுகின்றன.





“அன்னையைப்போல் ஒரு தெய்வமில்லை, அவள் அடிதொழ மறுப்பவர் மனிதரில்லை!”என்று சௌந்தரராஜனும், 
“அம்மா என்று அழைக்காத உயிரில்லையே!” என்று யேசுதாசும், 
“என்னைப் பெத்த ஆத்தா கண்ணீரைத்தான் பார்த்தா!” என்று இளையராஜாவும்
“நானாக நானில்லைத் தாயே!” என்று பாலசுப்பிரமணியமும் தாயன்பைப் பகிர்ந்துகொள்ளும்போது நமது மனதில் எழுகின்ற உணர்வுகளை அப்படியே சித்தரித்துக்காட்டும் பாத்திரங்களுக்கு உயிரூட்டுவது இந்தப் பாடல்கள்தானே.



“காதலைச் சித்தரிக்க தமிழ்ப்படங்களில் ஏன் இத்தனை ஆரவாரம். ஒரேயொரு முத்தத்தின் மூலம் காதலைக் காட்டிவிடமுடியாதா ?” என்று எவனோ ஒரு ஆங்கிலத் திரைக்கலைஞன் கேட்டதாக அறிந்திருக்கிறேன்.

தமிழரின் வாழ்விலும் சரி, காவியங்களிலும்சரி காதல் பெற்றிருக்கும் இடம் மிகவும் உயர்வானது. வெறும் உடலோடுமட்டும் பூர்த்தியாகாத, உயிரில் கலந்த உணர்வாக அது போற்றப்படுவது. 
அதனால்தான் தமிழ்த்திரைப்படங்களிலும் இத்தனை ஆரவாரம்.
(காதல் இல்லாமல் வாழ்வே இல்லை என்றானபோது காதல் இல்லாமல் தமிழ்ப்படமாவது?!)

வாழ்வின் பல்வேறு நிலைகளையும் சித்தரிக்கும் பாடல்கள் தமிழ்த் திரைப்படங்களில் நிறைந்திருப்பதுகூட அவற்றின் இலக்கியத்தன்மையை மேம்படுத்த உதவுகின்றன.

பாபநாசம்சிவன்  முதல் பா.விஜய்வரை நான் அறிந்த திரைப்படப் பாடலாசிரியர்கள் எல்லோரும் இலக்கியம் படைக்கும் முயற்சியில்தான் ஈடுபட்டிருக்கிறார்கள்.

எத்தனையோ பழந்தமிழ்த் திரைப்படப் பாடல்கள் இன்றும் அவற்றின் இலக்கியச்சுவை காரணமாக எம்மிடையே நிலைத்திருக்கின்றன என்பதே இதற்குப் போதுமான சாட்சி.

எம்.ஜிஆரின் திரைப்படங்களில் வந்த பாடல்களில் கவிதையும் இலக்கியமும் கலந்துநிற்கும் எண்ணற்ற பாடல்களில் ஓர் பாடல்:

..தென்னை வனத்தினில் உன்னை முகம்தொட்டு 
எண்ணத்தைச் சொன்னவன் வாடுகிறேன்
உன்னிரு கண்பட்டுப் புண்பட்ட நெஞ்சத்தில் 
உன்பட்டுக் கைபடப் பாடுகிறேன்.
பொன்னெழில் பூத்தது புதுவானில்
வெண்பனி தூவும் நிலவே நில்!
(பாடல்வரிகள்: பஞ்சு அருணாசலம்)


காதல் பாடல்களைப் போலவே, காதல்பருவம் கடந்ததும் சித்தாந்தங்களுக்குள் வீழ்ந்துவிடும் மனிதனின் நிலையையும், வாழ்வில் அவன் கற்றுக்கொண்ட அனுபவங்களால் விளையும் விரக்தியையும் அதற்கான ஆறுதலையும் தரும் பாடல்களும்; ஏராளம்.

“பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர் புண்ணியம் இன்றி விலங்குகள்போல்.. ” என்று கவலைப்பட்ட தியாகராஜ பாகவதர், 
“ஏதோ மனிதன் பிறந்துவிட்டான் அவன் ஏனோ மரம்போல் வளர்ந்துவிட்டான்!” என்று சலித்துக்கொள்ளும் பி.பி.சிறீனிவாஸ்,
“ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!” என்று ஆறுதலளிக்கும் சித்ரா, இப்படி அன்று முதல் இன்று வரை எண்ணற்ற பாடல்கள் இலக்கிய நயத்தொடு இதயங்களை ஆக்கிரமித்திருக்கின்றன.


அமைதியாக உட்கார்ந்து சில பாடல்களைக் கேளுங்கள். அவற்றில் எத்தனை பாடல்கள் உங்களைக் கவர்கின்றன என்று பாருங்கள். உங்களுக்குப் பிடித்தமான பாடல்கள் என்று ஒரு பத்துப் பாடல்களைத் தேர்வு செய்வீர்களாயின் அவற்றில் எட்டுப் பாடல்கள் நிச்சயமாக இலக்கியத்தன்மை வாய்ந்ததாகவே இருப்பதைக் காண்பீர்கள்.

“ஆயிரம் மலர்களே மலருங்கள் 
அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்
காதல்தேவன் காவியம் நீங்களோ நாங்களோ 
நெருங்கிவந்து சொல்லுங்கள்…

Sonntag, 27. April 2014

திரைக்கடலோடி இலக்கியம் தேடி...5





















திரைக்கடலோடி
இலக்கியம்தேடி..5


ஒரு ஊரிலே ஒரு பாட்டி இருந்தாள். 
நாளாந்தம் வடைசுட்டு விற்று அதில் கிடைக்கும் வருமானத்தில் அவள் தன் வாழ்நாட்களைக் கழித்துக் கொண்டிருந்தாள்.
ஒருநாள் அவள் வடைவிற்றுக்கொண்டிருக்கும்போது ஒரு காகம்  அவளிடமிருந்த வடைகளில் ஒன்றைத் திருடிக்கொண்டு பறந்துபோய் ஒரு மரக்கிளையில் உட்கார்ந்தது.
அந்த நேரம் பார்த்து அவ்வழியே வந்த நரி ஒன்று அந்தக் காகத்திடமிருந்த வடையைத் தான் பறித்துக்கொள்ளவேண்டும் என்று நினைத்தது.
உடனே காகத்தைப் பார்த்து, “காக்கையாரே காக்கையாரே உமது குரல் மிகவும் இனிமையானது என்று எனக்குத் தெரியும். உமது அழகான வாயால் எனக்காக ஒரு பாட்டுப் பாடும். கேட்க ஆசையாக இருக்கிறது!” என்றது.
நரியின் புகழ்ச்சியில் மதிமயங்கிய காகமும் தன் கடுங்குரலில் “கா..கா!” என்று பாடுவதற்காக வாயைத் திறந்தது. அதன் வாயிலிருந்த வடை கீழே விழுந்தது. நரி அதை எடுத்துக்கொண்டு ஓடியது.
- இது சிறுவயதில் நாங்கள் படித்த அல்லது கேட்ட கதை.

நமக்கு முன்னவர்கள் சொன்ன இந்தக் கதையை நாம் எத்தனை முறை கேட்டிருப்போம் என்பதற்கு ஒரு எண்ணிக்கை சொல்ல முடியாத அளவுக்கு அத்தனை முறை கேட்டிருப்போம்.
இப்போது நமது அடுத்த தலைமுறைக்கும் இதனைச் சொல்லிக் கொண்டிருக்கிறோம் நாம்.

(ஒரு தமிழ்த் திரைப்படத்தில் இது பாட்டாகவும் வந்தது.
பாப்பா பாப்பா கதைகேளு
காக்கா நரியின் கதைகேளு!
தாத்தா பாட்டி சொன்ன கதை 
அம்மா அப்பா கேட்டகதை .. என்று தொடரும் பாடல் )


குழந்தைகளுக்கான கதைகளைச் சொல்லும்போது அது சுவாரஸ்யமானதாகவும், குழந்தைகளுக்கு அறிவூட்டுவதாகவும் இருக்கவேண்டும் என்று நமது ஆன்றோர்கள் சொல்லிவைத்த பல கதைகளில் இதுவும் ஒன்று.
கதையைச் சொல்லி முடித்ததும் இந்தக்கதையிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்டது என்ன என்ற கேள்வியும் அவர்களிடமிருந்து வரும்.
ஒவ்வொருவரும் தத்தமக்குத் தெரிந்த நீதியைச் சொல்வார்கள்.

இந்தக் காகமும் நரியும் கதையை இங்கே நான் சொல்ல வந்தது ஏன் என்ற கேள்வி எழலாம். 
அண்மைக்காலமாக இந்தக் கதை பல அறிவாளிகளுக்கு ஒருவகைக் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதுமாதிரிக் கதைகளை எழுதியவர்களை அல்லது சொன்னவர்களை மடையர்களாகச் சித்தரிப்பதில் அவர்கள் மகிழ்கிறார்கள். இந்தக்கதை சொல்லப்பட்டதன் நோக்கத்தையோ அல்லது இந்தக் கதையைக் கேட்பதால் இளையோருக்கு ஏற்படக்கூடிய மகிழ்ச்சியையோ அவர்கள் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை.

“நீ ஒருவரை ஏமாற்றினால் நீ இன்னொருவரால் ஏமாற்றப்படுவாய்!” என்பதையும்- 
“உன்னால் திருடப்பட்ட பொருள் ஒருபோதும் உனக்கு உதவாமல் போகும்!” என்பதையும்-
“வெறும் புகழ்ச்சிக்கு மயங்கினால் உன்னிடமிருப்பதை நீ இழக்கவேண்டி வரும்!” என்பதையும்.-
நமது இளவயதிலேயே நமக்குக் கற்பிப்பதற்கு இந்தக் கதை உதவுகிறது.

புரிந்தவர்கள் கற்றுக்கொள்வார்கள். புரியாதவர்களோ விமர்சனங்கள் என்ற பெயரில் எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக ஓரங்கட்டுவதிலேயே குறியாய் இருக்கிறார்கள்.

எந்தப் படைப்பும் ஒரு நல்ல நோக்கத்தோடுதான் படைக்கப்படுகிறது.
ஒரு தொழிலாக, போட்ட முதலுக்கு வட்டியோடு திரும்ப எடுத்துவிட வேண்டும் என்ற வர்த்தக நோக்கத்தோடு திரைப்படங்கள் தயாரிப்பவர்கூட தமது படைப்புக்கள் தரமானவையாக, பாராட்டுப் பெறுபவையாக இருக்க வேண்டும் என்ற ஆத்மதாகம் கொண்டவராகவே இருப்பார்.

காக்கா நரி கதையைப்போல முன்பு சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்வதென்பது திரையுலகிலும் அடிக்கடி நிகழ்கிறது. நிகழ்ந்தாகவும் வேண்டும். 
அரிச்சுவடியில் ஆரம்பிக்கிற நாம் வளரவளர கற்றுக்கொண்டே போகிறோம். நாம் அதிகம் கற்றுக்கொண்டுவிட்டோம் என்பதற்காக புதிதாகப் பிறக்கும் மழலைகளுக்கான கல்வியை நாம் விட்ட இடத்திலிருந்து ஆரம்பிக்க முடியாது. அவர்களும் அரிச்சுவடியிலிருந்துதான் ஆரம்பித்தாகவேண்டும்.

திரைப்படங்கள் தமக்கு ஏற்றதான ஒரு அடிப்படை இலக்கணத்தை வகுத்துக்கொண்டிருக்கின்றன. அவற்றிலிருந்து இலகுவாக அவை விடுபட்டுவிடமுடியாது.

திரைப்படம் எனும் கலைவடிவம் பெரும்பாலும் அழகியலையே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. கருத்தியல் என்பது இரண்டாம் பட்சம்தான் எனினும் அழகியலோடு கருத்தியலைப் பிணைத்துவிடவேண்டும் என்ற வேகம் எல்லாக் கலைஞர்களிடத்தும் இருக்கிறது.

நல்லவனான ஒரு கதாநாயகன், அக்கிரமக்காரனான ஒரு எதிராளி, அவனுக்கு ஒரு அழகான மகள், கதாநாயகனுக்கும் இவளுக்குமிடையே காதல், போராட்டம், என்று உருவாகிற திரைக்கதையில் நான்கு பாட்டுக்கள், மூன்று சண்டைகள் என்று ஒரு திரைப்படம் முழுமை பெறும்.

ஒரே கதையை வெவ்வேறுவிதமாகச் சொல்லி வெற்றிபெறுவதற்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் போன்ற கலைஞர்களால் முடிந்திருக்கிறது. கதை எப்படிப்பட்டதாக இருந்தாலும் வாழ்க்கையின் அடித்தளத்தில் நிற்கிற ஏராளமான இரசிகர்களுக்கு வாழ்க்கையில் ஒருவித நம்பிக்கையை ஊட்ட அவை தவறவில்லை.

வசனங்களிலும் பாடல்களிலும் இலக்கியத்தன்மை கலந்திருக்கவேண்டும் என்பதில் எம்.ஜி.ஆர் எடுத்துக்கொண்ட அக்கறை நுணுக்கமாகப் பார்த்தால் நம்மால் புரிந்துகொள்ளத் தக்கது.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், சுரதா, புலமைப்பித்தன், ஆலங்குடி சோமு, கவியரசு கண்ணதாசன், பஞ்சு அருணாசலம், கவிஞர் வாலி என்று சிறந்த இலக்கியவாதிகள் பலரும் இலக்கியத்தன்மைமிக்க அவர்களது பாடல்களால் எம்ஜீஆரின் உருவத்தில் தமிழ்த் திரைப்படங்களில் நிலைத்துவிட்டார்கள்.



ஏராளமான சமூகப் படங்களிலும் எம்.ஜீ. ஆர் நடித்திருந்தபோதும் அவர் சொந்தமாகத் தயாரித்தவை சரித்திரப்படங்களே. நாடோடி மன்னன், ஆயிரத்தில் ஒருவன், அடிமைப்பெண் போன்ற படங்களில் தனிமனித விடுதலை, சமூக விடுதலை, பெண்விடுதலை என்பவற்றை அதிகமாகச் சித்தரித்திருந்தார்.
மன்னன் வேடம் தாங்கியவர், நாம் வாழும் காலத்தில் ஒரு மன்னனாகவே வாழ்ந்தும் மறைந்திருக்கிறார். மக்களை நேசிப்பவராக நடித்தவர் உண்மையாகவும் உளப்பூர்வமாகவும் மக்களை நேசிப்பவராக வாழ்ந்தும் காட்டினார்.
அவரது சரித்திரத் திரைப்படங்கள் கற்பனைக் கதைகளாக இருந்தாலும் அவை நிஜமான பாத்திரங்களே என்று எண்ணத்தக்கவையாக இரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்துக்கொண்டபோதே அவரது படைப்புக்களும் இலக்கியத்தன்மை பெற்றுவிடுகின்றன.
தான் நடிக்கும் படங்களுக்கான கதையைத் தேர்வுசெய்வதில் எம்.ஜி.ஆர் எவ்வளவுதூரம் அக்கறைகாட்டினாரோ அதற்கும் பலமடங்கு மேலாக அவரது படங்களுக்கான பாடல்களில் அவர் அக்கறை காட்டுவார் என்று சொல்வார்கள். மொழிப்பற்றும் இலக்கிய ஆர்வமுமுள்ள ஒருவரால்தான் இது சாத்தியமாகும். இலக்கியநயம் செறிந்த ஏராளமான பாடல்கள் அவரது படங்களில் நிறைந்து கிடக்கின்றன.

Dienstag, 13. August 2013

திரைக்கடலோடி இலக்கியம் தேடி...4





















திரைக்கடலோடி இலக்கியம் தேடி...
(ஒரு பாமர இரசிகனின் இரசனைக்குறிப்புக்கள்)
-இந்துமகேஷ்



4.
ஒரு மாலைப்பொழுது.
கடற்கரையோரமாக இரண்டு நண்பர்கள் நடந்துகொண்டிருந்தார்கள்.
வானத்தில் சில பறவைகள் கூட்டமாகப் பறந்துகொண்டிருந்தன.
அவை பறந்துசெல்லும் அழகை இரசித்தபடி நண்பர்களில் ஒருவன் சொன்னான்:
“அந்தப் பறவைகளைப் பார்த்தாயா? அவை எத்தனை அழகாக மகிழ்ச்சியாகப் பறந்துகொண்டிருக்கின்றன!”
மற்றவன் இவனைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னான்:
“அவை அழகாகப் பறந்துகொண்டிருக்கின்றன என்பது சரிதான். ஆனால் அவை மகிழ்ச்சியாகத்தான் பறந்துகொண்டிருக்கின்றன என்று நீ எப்படிச் சொல்ல முடியும். நீயும் ஒரு பறவை அல்லவே!”
நண்பனின் கேலிக்குப் பதிலாக முன்னவன் சொன்னான்:
“அவை மகிழ்ச்சியாகத்தான் இருக்கின்றன என்பது எனக்குத் தெரியாது என்று நீ எப்படிச் சொல்லமுடியும்? நீ நான் அல்லவே!”

எல்லா விடயங்களிலும் கருத்துக்கள் இப்படித்தான் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.

ஒருவர் நினைப்பதை மற்றவர் சரியாகப் புரிந்துகொள்வதில்லை. முரண்பாடுகள் உருவாகின்றன. சில சமயங்களில் அர்த்தத்தோடும் பல சந்தர்ப்பங்களில் அர்த்தமில்லாமலும் முரண்பாடுகள் வளர்க்கப்படுகின்றன.

பார்ப்பவர் மனோநிலைக்கேற்ப காட்சிகள் மாற்றம் பெறுகின்றனவே தவிர காட்சிகள் இயல்பாகவே உருவாகிக்கொண்டிருக்கின்றன. அவற்றிலிருந்து நாம் எதைப் பெற்றுக்கொள்கிறோம் என்பதும் கற்றுக்கொள்கிறோம் என்பதும் நமது மனோபாவத்தைப் பொறுத்ததே.



வாழ்க்கையிலிருந்து நாம் எதைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறோமோ இதற்கான முயற்சிகளையே முன்னெடுக்கிறோம். முயற்சியினாலேயெ அதைப் பெற்றுக்கொள்கிறோம்.

பகுத்தறிவின் எல்லையில் ஆன்மாவிற்குள் ஆன்மாவாக இருக்கும் இறைவனைக் காணமுடியாத மனிதன் தன்மீது தனக்குள்ள அளவுக்கதிகமான நம்பிக்கையோடு நாத்திகவாதம் பேசுவது இயல்பானதுதான் என்றாலும் வாழ்வின் எல்லையை அவன் தொட்டுவிடுவதற்குள் ஆன்மிகத்தின் சில பக்கங்களையாவது அவன் புரட்டிப் பார்க்கவும் நேர்ந்துவிடுகிறது.
இதையும் அவன் பேசும் நாத்திக வாதத்துக்குள் நின்றே செய்கிறான்.

பக்தி இலக்கியம் குறித்ததான திரைப்படப் பார்வையினூடு பகுத்தறிவுப் போதனைகள் நிறைந்ததாகச் சித்தரிக்கப்பட்ட அல்லது விமர்சிக்கப்பட்ட சில படங்களைப் பார்க்கும்போது இந்த உண்மை புரியும்.

அன்பே சிவம் என்று ஒரு திரைப்படம்.
பத்மஸ்ரீ கமலகாசனின் பல படங்கள் இலக்கியத்தன்மை வாய்ந்ததாக அமைந்திருக்கின்றன.
அவற்றில் அன்பே சிவமும் ஒன்று. கதை திரைக்கதை இரண்டையும் கமலகாசனே எழுதியிருக்கிறார். வசனங்களை எழுத்தாளர் மதன் எழுதியிருக்கிறார்.

என்வரையில் கமலகாசனை ஒரு நடிகராகமட்டும் பார்க்காமல் ஒரு இலக்கியவாதியாகவும் பார்க்கிறேன்.
அன்பே சிவம் எனும் மிக ஆழமான ஒரு தத்துவத்தை வெளிப்படுத்துவதற்காக அவர் தயாரித்திருக்கும் திரைப்படம் அன்பே சிவம்.

யார் யார் சிவம்? நீ நான் சிவம்
வாழ்வே தவம் அன்பே சிவம்
அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா
மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா
ஆத்திகம் பேசும் அடியவர்க்கெல்லாம் சிவமே அன்பாகும்
நாத்திகம் பேசும் நல்லோர்க்கெல்லாம் அன்பே சிவமாகும்.
(கமலகாசனின் குரலில் வெளிப்படும் பாடல்)

இந்தத் திரைக்கதையின் முடிவில் வரும்காட்சியில்-
சிவத்தை(கமலகாசனை) கொல்லவரும் மனிதனுக்கும் சிவத்துக்கும் நிகழும் உரையாடல் இப்படி அமைகிறது.
„எனக்குக்  கடவுள் நம்பிக்கை இருக்கு தம்பி.. உங்களுக்கு எப்படியோ?“
சிவம்சொல்கிறான்: 
„எனக்கும் இருக்கு!“
„அப்படியா... எந்த சாமி?“

நீதான் என்பதுபோல கண்களால் சாடை காட்டுகிறான் சிவம்.
„நானா?“
„ஒருத்தனைக் கொல்லணும்னு வந்துட்டு மனசைமாத்திட்டு மன்னிப்பும் கேட்கிற மனிசன் இருக்கானே.. அதுதான் என்னைப் பொறுத்தவரைக்கும் சாமி!“
„மனசை மாத்திக்கிட்டேன் ஆனா சாமி எல்லாம் இல்லைத் தம்பி!“
சிவம் சிரித்துக்கொண்டே சொல்கிறான்:
„இப்படியெல்லாம் நாத்திகம் பேசாதிங்க! ஊரெல்லாம் இந்தமாதிரி நிறைய சாமி இருக்கு.. நம்புங்க!“

கதையின் முடிவில் அன்பே சிவம் தத்துவத்தை அழகாகச் சொல்லிச் செல்லும் கதாசிரியன் கமலகாசன் இலக்கியம் படைக்கவில்லையா?

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார் 
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருப்பாரே
திருமூலர் திருமந்திரம் இது.
இந்தப் பக்தி இலக்கியம் சொன்னதை திரைப்பட வடிவத்தில் நிகழ்காலத்திற்கேற்ப சொல்லிச் செல்கிறார் கமலகாசன்.



திரைப்படங்களில் இலக்கியம் என்பது அதன் கதை திரைக்கதை வசனம் பாடல்கள் என்பவற்றினூடேதான் நம்மால் அடையாளம் காணப்படுகிறது

இலக்கியவாதிகள் இந்தத்துறையில் ஈடுபடவேண்டும் என்று பலர் சொல்லிக் கொண்டிருந்தார்களே தவிர திரைத்துறை சார்ந்த படைப்பாளிகளை இலக்கியவாதிகளாக அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்பது வேதனையளிக்கும் ஒரு விடயம்தான்.

இலக்கியவாதிகளான எழுத்தாளர்கள் அமரர் கல்கி (கள்வனின் காதலி), அண்ணாதுரை (ரங்கோன்ராதா) மு.கருணாநிதி(மந்திரிகுமாரி) , ராஜாஜி(திக்கற்றபார்வதி), அகிலன்(பாவைவிளக்கு), கண்ணதாசன்(கவலை இல்லாத மனிதன்) , ஜெயகாந்தன் (யாருக்காக அழுதான்),லஷ்மி(இருவர் உள்ளம்) சிவசங்கரி(ஒருமனிதனின்கதை), என்று பலர் எழுதிய கதைகளும் நாவல்களும் திரைவடிவம் பெற்றபோது இலக்கியங்கள் திரைப்படங்களாவதாகப் பேசிக்கொள்ளப்பட்டதே தவிர ஆரம்பகாலங்களில் திரைத்துறைக்குள்ளேயே இருந்த படைப்பாளிகள் பற்றியோ இலக்கியங்கள் பற்றியோ எவரும் அதிகமாக அக்கறை செலுத்தியதாகத் தெரியவில்லை.

ஆனால் இயக்குனர்கள் அடையாளம் காணப்பட்டபோது அவர்களுக்குள்ளிருந்த இலக்கியவாதிகளும் அடையாளம் காணப்பட்டார்கள்.

ஸ்ரீதர், .பாலச்சந்தர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், பாரதிராஜா, பாக்கியராஜ், டி.இராஜேந்தர், ஜே.மகேந்திரன், பாலுமகேந்திரா, துரை, விசு, மணிரத்தினம், சங்கர், கமலகாசன், பார்த்திபன், சேரன், தங்கர்பச்சான் என்று எத்தனையோ படைப்பாளிகளும் இலக்கியவாதிகளும் தமிழ்த்திரைப்பட வரலாற்றில் தமது பெயரைப் பதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Montag, 5. August 2013

திரைக்கடலோடி இலக்கியம் தேடி...3




















3.
இலக்கியத்துக்குப் பல முகங்கள் உண்டு.
அதிலொன்று பக்தி இலக்கியம்.
தமிழ்த் திரைப்பட வரலாற்றின் ஆரம்பகாலங்களில் பக்தி இலக்கியமே அதிகளவில் ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கிறது. அந்தக் காலங்களில் காளிதாஸ் முதலாக தொடர்ந்து புராணங்கள் இதிகாசங்களில் உலாவந்த கதாபாத்திரங்கள்தாம் பெருமளவில் தமிழ்த் திரைப்படங்களை ஆக்கிரமித்திருந்தினர்.

சிறுவயதில் பாடப்புத்தகங்களில் நான் அறிந்த பல கதாபாத்திரங்கள் நான் பிறப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்த்திரைப்படங்களில் வலம் வந்திருக்கிறார்கள்.

அந்நிய நாட்டவர்களிடம் அடிமைப்பட்டுக்கிடந்த தாய்நாட்டை மீட்டெடுக்கும் விடுதலை வேட்கை மிகுந்திருந்த காலகட்டத்தில் அந்த விடுதலை உணர்வை எழுத்துக்களினூடாக இலக்கியத்தினூடாக கலைகளினூடாக சமூகத்தினுள் எடுத்துவர இயலாதவாறு அடக்குமுறைச் சட்டங்கள் கலைஞர்களைக் கட்டிப்போட்டு வைத்திருந்தன.

விடுதலை என்பது சுதந்திர வாழ்வுக்கான புற விடுதலை என்பதாகமட்டும் இருந்துவிடாது அது அகவிடுதலைக்கானதுமாக அமைய வேண்டும் என்பதில் சிந்தனையாளர்களும் கலைஞர்களும் தீவிரமாக இருந்திருக்கவேண்டும். அத்தகைய ஆன்மீக விடுதலையைச் சித்தரிக்கின்ற படைப்புக்களை உருவாக்கியவர்கள் ஆன்மீக விடுதiலையைச் சித்தரிக்கின்ற பாத்திரங்களின் வாயிலாக சமூக தேச விடுதலையையும் மறைமுகமாக எடுத்துவந்தார்கள்.
சுதந்திர உணர்வை வளர்த்தெடுத்தார்கள். பக்தி இலக்கியங்கள் அதற்குக் கைகொடுத்தன.

பக்தி இலக்கியத்தை அடித்தளமாகக் கொண்டு அமைந்த படங்கள் பக்திப்படங்கள் என்ற வகைக்குள் அடங்கின. பின்னர் அதிகளவிலான சமூகப்படங்களின் வரவு பக்திப்படங்களின் வருகையைக் குறைத்தன. இருப்பினும் சமூகப் படங்களுக்குள் பக்திநெறி வளர்க்கும் படங்களும் அவ்வப்போது உருவாகவே செய்தன.

புராணக் கதைகளை அதிகமாகத் திரைப் படமாக்கியவர்களில் திரு ஏ.பி.நாகராஜன் அவர்களுக்குத் தனியிடம் உண்டு. திருவிளையாடல், திருவருட்செல்வர், கந்தன் கருணை, சரஸ்வதி சபதம் என்று தொடரும் ஒரு நீண்ட பட்டியலின் சொந்தக்காரார் அவர்.


சமூகக் கதைகளினூடே பக்தி இலக்கியத்தை வளர்த்தவர்களில் சாண்டோ எம். எம். சின்னப்பா தேவர் முதலிடத்தில் இருக்கிறார். தெய்வம், துணைவன் போன்று முருகன் பெருமை பாடுவதற்கென்றே படங்களைத் தயாரித்தவர் அவர்.




0
எல்லாப் படங்களையும் எல்லாப் பருவத்தினரும் பார்த்துவிடமுடியாதவாறு ஒரு எழுதப்படாத விதி எம்மவரிடையே கடைப்பிடிக்கப்பட்டு வந்த காலமும் இருந்தது.
அந்தநேரத்திலும் எல்லாப் பருவத்தினரும் பார்க்கத் தக்கவையாக பக்திப் படங்கள்மட்டுமே அமைந்தன. பள்ளி மாணவர்களுக்கென காட்சி நேரங்கள் ஒதுக்கப்பட்டு திரையிடப்பட்ட படங்களில் பெரும்பாலானவை பக்திப் படங்களே.
பள்ளிமாணவர்களாகிய நாங்கள் படம் பார்க்கப் போகிறோம் என்று புறப்பட்டால் அது திருவிளையாடலாகவோ சம்பூர்ண ராமாயணமாகவோ அல்லது வேறேதாவது பக்திப்படமாகவோதான் இருக்கும்.

பக்திப் படங்கள் தவிர்ந்த ஏனைய படங்கள் அதிகமாய்க் காதலையும் மேல்நாட்டு நாகரீகத்தையும் மிகைப்படுத்திக் காட்டி சமுதாயத்தில் நஞ்சை விதைக்கின்றன என்ற கருத்து பெரியவர்களிடம் ஆழப்பதிந்திருந்தது.
அதனால் இளைய சமுதாயத்தை அவர்கள் அடிக்கடி எச்சரித்துக் கொண்டிருந்தார்கள்.
வயது வந்தவர்கள் மட்டுமே புரிந்துகொள்ளத் தக்க உண்மைகளை வயது வந்தபிறகு இவர்களும் புரிந்துகொள்ளட்டும் எனறு அவர்கள் எண்ணிக்கொண்டார்களோ என்னமோ!

எந்த ஒரு திரைப்படமும் - அது சண்டைப்படம் குடும்பப்படம் பக்திப்படம் சரித்திரப்படம் திகில்படம்  என்று எதுவாக இருந்தாலும் எல்லாப் படமும் -ஏதோ ஒரு செய்தியைத் தன்னுள் கொண்டிருந்தது.
ஆனால் ஒவ்வொன்றையும் இரசிப்பதிலும் புரிதலிலும் ஒவ்வொருவரும் தத்தம் இயல்புக்கேற்பவே அது நல்லது என்றோ நல்லதில்லை என்றோ தீர்மானித்தார்கள்.

ஒருபுறம் பக்திப் படங்கள் வெளியாகிக்கொண்டிருக்க மறுபுறம் பக்தி இலக்கியத்தை நையாண்டி செய்யும் படங்களும் உருவாகத் தொடங்கின.
தனிமனிதனையோ சமுதாயத்தையோ நெறிப்படுத்தும் சட்ட திட்டங்களினூடே அவ்வப்போது ஒருசில தவறுகளும் இடம்பெற்றுவிடுவது இயல்புதான் என்றாலும் அத்தகைய தவறுகளைமட்டுமே பெரிதுபடுத்தி சடங்குகள் சம்பிரதாயங்களைக் கொச்சைப்படுத்தி ஆன்மீக சிந்தனைக்கான அடித்தளத்தையே ஆட்டம் காணவைக்கவும் சில கதாசிரியர்கள் முயன்றிருக்கிறார்கள். ஆனால் பெரும்பான்மையான சந்தர்ப்பங்களில் அவை வெறும் நகைச்சுவைக் காட்சிகளாகவே போய் மறைந்திருக்கின்றன.

தமிழ்த் திரைப்பட வரலாற்றில் நடிப்பெனும் இலக்கியமாகத் திகழும் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் என்ற தலைசிறந்த ஒரு கலைஞனை முதலில் வெளிக்கொணர்ந்த பராசக்தி வெளிவந்தபோது அது தெய்வநிந்தனை செய்யும் ஒரு படைப்பாகவே பலராலும் பேசப்பட்டது. ஆனால் என்வரையில் அது ஒரு பக்தி இலக்கியமாகவே எனக்குத் தோன்றுகிறது.

பக்தி இலக்கியம் என்பது புராண இலக்கியமாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை.சமூகத்தில் கடைப்பிடிக்கப்படுகிற பக்திநெறியை வெளிப்படுத்தும் வாழ்வியலை அடியொற்றியதாகவும் அது இருக்கலாம்.

பராசக்தியின் கதாநாயகன் நல்லவனாக அதே சமயம் தவறான மனிதர்களால் ஏமாற்றங்களுக்குள்ளாகிறவனாக இறுதியில் தவறானவர்களைத் தட்டிக்கேட்கும் துணிவுள்ளவனாகச் சித்தரிக்கப்படுகிறான். அதுவரையில் தன்னை ஒரு பைத்தியக்காரன் போலவே அவன் காட்டிக்கொள்கிறான். (பக்தி நெறி பரப்பிய சித்தர்களில் பெரும்பாலானவர்கள் இந்த உலகத்துக்குப் பைத்தியக்காரர்களாகவே காட்சியளித்தனர் என்பது நாம் கவனிக்கத் தக்கது.)


என்வரையில் கலைஞர் கருணாநிதி என்ற அற்புதமான இலக்கியவாதி படைத்த பக்தி இலக்கியம்தான் பராசக்தி.
(கோயிலில் குழப்பம் விளைவித்தேன் கோயில் கூடாது என்பதற்காக அல்ல கோயில் கொடியவர்களின் கூடாரமாகிவிடக்கூடாது என்பதற்காக - பராசக்தியின் நாயகன் குணசேகரன் சொல்லும் வார்த்தைகள் அவை.)

இந்த வரிசையில் திருவாரூர் தங்கராசு என்ற படைப்பாளியின்  கருத்தோவியமாக வெளிவந்துஇ எம் ஆர்.ராதா என்கின்ற அற்புதமான கலைஞனை நினைவூட்டிக்கொண்டிருக்கிற இரத்தக் கண்ணீர் மற்றுமோர் பக்தி இலக்கியமாகவே எனக்குத் தோன்றுகிறது.

அண்மையில் வெளியான நமது சமகாலக் கலைஞன் கமலகாசனின் “அன்பே சிவம்!” திரைப்படமும் ஒரு தனித்துவமான பக்தி இலக்கியமே.