Dienstag, 13. August 2013

திரைக்கடலோடி இலக்கியம் தேடி...4





















திரைக்கடலோடி இலக்கியம் தேடி...
(ஒரு பாமர இரசிகனின் இரசனைக்குறிப்புக்கள்)
-இந்துமகேஷ்



4.
ஒரு மாலைப்பொழுது.
கடற்கரையோரமாக இரண்டு நண்பர்கள் நடந்துகொண்டிருந்தார்கள்.
வானத்தில் சில பறவைகள் கூட்டமாகப் பறந்துகொண்டிருந்தன.
அவை பறந்துசெல்லும் அழகை இரசித்தபடி நண்பர்களில் ஒருவன் சொன்னான்:
“அந்தப் பறவைகளைப் பார்த்தாயா? அவை எத்தனை அழகாக மகிழ்ச்சியாகப் பறந்துகொண்டிருக்கின்றன!”
மற்றவன் இவனைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னான்:
“அவை அழகாகப் பறந்துகொண்டிருக்கின்றன என்பது சரிதான். ஆனால் அவை மகிழ்ச்சியாகத்தான் பறந்துகொண்டிருக்கின்றன என்று நீ எப்படிச் சொல்ல முடியும். நீயும் ஒரு பறவை அல்லவே!”
நண்பனின் கேலிக்குப் பதிலாக முன்னவன் சொன்னான்:
“அவை மகிழ்ச்சியாகத்தான் இருக்கின்றன என்பது எனக்குத் தெரியாது என்று நீ எப்படிச் சொல்லமுடியும்? நீ நான் அல்லவே!”

எல்லா விடயங்களிலும் கருத்துக்கள் இப்படித்தான் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.

ஒருவர் நினைப்பதை மற்றவர் சரியாகப் புரிந்துகொள்வதில்லை. முரண்பாடுகள் உருவாகின்றன. சில சமயங்களில் அர்த்தத்தோடும் பல சந்தர்ப்பங்களில் அர்த்தமில்லாமலும் முரண்பாடுகள் வளர்க்கப்படுகின்றன.

பார்ப்பவர் மனோநிலைக்கேற்ப காட்சிகள் மாற்றம் பெறுகின்றனவே தவிர காட்சிகள் இயல்பாகவே உருவாகிக்கொண்டிருக்கின்றன. அவற்றிலிருந்து நாம் எதைப் பெற்றுக்கொள்கிறோம் என்பதும் கற்றுக்கொள்கிறோம் என்பதும் நமது மனோபாவத்தைப் பொறுத்ததே.



வாழ்க்கையிலிருந்து நாம் எதைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறோமோ இதற்கான முயற்சிகளையே முன்னெடுக்கிறோம். முயற்சியினாலேயெ அதைப் பெற்றுக்கொள்கிறோம்.

பகுத்தறிவின் எல்லையில் ஆன்மாவிற்குள் ஆன்மாவாக இருக்கும் இறைவனைக் காணமுடியாத மனிதன் தன்மீது தனக்குள்ள அளவுக்கதிகமான நம்பிக்கையோடு நாத்திகவாதம் பேசுவது இயல்பானதுதான் என்றாலும் வாழ்வின் எல்லையை அவன் தொட்டுவிடுவதற்குள் ஆன்மிகத்தின் சில பக்கங்களையாவது அவன் புரட்டிப் பார்க்கவும் நேர்ந்துவிடுகிறது.
இதையும் அவன் பேசும் நாத்திக வாதத்துக்குள் நின்றே செய்கிறான்.

பக்தி இலக்கியம் குறித்ததான திரைப்படப் பார்வையினூடு பகுத்தறிவுப் போதனைகள் நிறைந்ததாகச் சித்தரிக்கப்பட்ட அல்லது விமர்சிக்கப்பட்ட சில படங்களைப் பார்க்கும்போது இந்த உண்மை புரியும்.

அன்பே சிவம் என்று ஒரு திரைப்படம்.
பத்மஸ்ரீ கமலகாசனின் பல படங்கள் இலக்கியத்தன்மை வாய்ந்ததாக அமைந்திருக்கின்றன.
அவற்றில் அன்பே சிவமும் ஒன்று. கதை திரைக்கதை இரண்டையும் கமலகாசனே எழுதியிருக்கிறார். வசனங்களை எழுத்தாளர் மதன் எழுதியிருக்கிறார்.

என்வரையில் கமலகாசனை ஒரு நடிகராகமட்டும் பார்க்காமல் ஒரு இலக்கியவாதியாகவும் பார்க்கிறேன்.
அன்பே சிவம் எனும் மிக ஆழமான ஒரு தத்துவத்தை வெளிப்படுத்துவதற்காக அவர் தயாரித்திருக்கும் திரைப்படம் அன்பே சிவம்.

யார் யார் சிவம்? நீ நான் சிவம்
வாழ்வே தவம் அன்பே சிவம்
அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா
மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா
ஆத்திகம் பேசும் அடியவர்க்கெல்லாம் சிவமே அன்பாகும்
நாத்திகம் பேசும் நல்லோர்க்கெல்லாம் அன்பே சிவமாகும்.
(கமலகாசனின் குரலில் வெளிப்படும் பாடல்)

இந்தத் திரைக்கதையின் முடிவில் வரும்காட்சியில்-
சிவத்தை(கமலகாசனை) கொல்லவரும் மனிதனுக்கும் சிவத்துக்கும் நிகழும் உரையாடல் இப்படி அமைகிறது.
„எனக்குக்  கடவுள் நம்பிக்கை இருக்கு தம்பி.. உங்களுக்கு எப்படியோ?“
சிவம்சொல்கிறான்: 
„எனக்கும் இருக்கு!“
„அப்படியா... எந்த சாமி?“

நீதான் என்பதுபோல கண்களால் சாடை காட்டுகிறான் சிவம்.
„நானா?“
„ஒருத்தனைக் கொல்லணும்னு வந்துட்டு மனசைமாத்திட்டு மன்னிப்பும் கேட்கிற மனிசன் இருக்கானே.. அதுதான் என்னைப் பொறுத்தவரைக்கும் சாமி!“
„மனசை மாத்திக்கிட்டேன் ஆனா சாமி எல்லாம் இல்லைத் தம்பி!“
சிவம் சிரித்துக்கொண்டே சொல்கிறான்:
„இப்படியெல்லாம் நாத்திகம் பேசாதிங்க! ஊரெல்லாம் இந்தமாதிரி நிறைய சாமி இருக்கு.. நம்புங்க!“

கதையின் முடிவில் அன்பே சிவம் தத்துவத்தை அழகாகச் சொல்லிச் செல்லும் கதாசிரியன் கமலகாசன் இலக்கியம் படைக்கவில்லையா?

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார் 
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருப்பாரே
திருமூலர் திருமந்திரம் இது.
இந்தப் பக்தி இலக்கியம் சொன்னதை திரைப்பட வடிவத்தில் நிகழ்காலத்திற்கேற்ப சொல்லிச் செல்கிறார் கமலகாசன்.



திரைப்படங்களில் இலக்கியம் என்பது அதன் கதை திரைக்கதை வசனம் பாடல்கள் என்பவற்றினூடேதான் நம்மால் அடையாளம் காணப்படுகிறது

இலக்கியவாதிகள் இந்தத்துறையில் ஈடுபடவேண்டும் என்று பலர் சொல்லிக் கொண்டிருந்தார்களே தவிர திரைத்துறை சார்ந்த படைப்பாளிகளை இலக்கியவாதிகளாக அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்பது வேதனையளிக்கும் ஒரு விடயம்தான்.

இலக்கியவாதிகளான எழுத்தாளர்கள் அமரர் கல்கி (கள்வனின் காதலி), அண்ணாதுரை (ரங்கோன்ராதா) மு.கருணாநிதி(மந்திரிகுமாரி) , ராஜாஜி(திக்கற்றபார்வதி), அகிலன்(பாவைவிளக்கு), கண்ணதாசன்(கவலை இல்லாத மனிதன்) , ஜெயகாந்தன் (யாருக்காக அழுதான்),லஷ்மி(இருவர் உள்ளம்) சிவசங்கரி(ஒருமனிதனின்கதை), என்று பலர் எழுதிய கதைகளும் நாவல்களும் திரைவடிவம் பெற்றபோது இலக்கியங்கள் திரைப்படங்களாவதாகப் பேசிக்கொள்ளப்பட்டதே தவிர ஆரம்பகாலங்களில் திரைத்துறைக்குள்ளேயே இருந்த படைப்பாளிகள் பற்றியோ இலக்கியங்கள் பற்றியோ எவரும் அதிகமாக அக்கறை செலுத்தியதாகத் தெரியவில்லை.

ஆனால் இயக்குனர்கள் அடையாளம் காணப்பட்டபோது அவர்களுக்குள்ளிருந்த இலக்கியவாதிகளும் அடையாளம் காணப்பட்டார்கள்.

ஸ்ரீதர், .பாலச்சந்தர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், பாரதிராஜா, பாக்கியராஜ், டி.இராஜேந்தர், ஜே.மகேந்திரன், பாலுமகேந்திரா, துரை, விசு, மணிரத்தினம், சங்கர், கமலகாசன், பார்த்திபன், சேரன், தங்கர்பச்சான் என்று எத்தனையோ படைப்பாளிகளும் இலக்கியவாதிகளும் தமிழ்த்திரைப்பட வரலாற்றில் தமது பெயரைப் பதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Montag, 5. August 2013

திரைக்கடலோடி இலக்கியம் தேடி...3




















3.
இலக்கியத்துக்குப் பல முகங்கள் உண்டு.
அதிலொன்று பக்தி இலக்கியம்.
தமிழ்த் திரைப்பட வரலாற்றின் ஆரம்பகாலங்களில் பக்தி இலக்கியமே அதிகளவில் ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கிறது. அந்தக் காலங்களில் காளிதாஸ் முதலாக தொடர்ந்து புராணங்கள் இதிகாசங்களில் உலாவந்த கதாபாத்திரங்கள்தாம் பெருமளவில் தமிழ்த் திரைப்படங்களை ஆக்கிரமித்திருந்தினர்.

சிறுவயதில் பாடப்புத்தகங்களில் நான் அறிந்த பல கதாபாத்திரங்கள் நான் பிறப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்த்திரைப்படங்களில் வலம் வந்திருக்கிறார்கள்.

அந்நிய நாட்டவர்களிடம் அடிமைப்பட்டுக்கிடந்த தாய்நாட்டை மீட்டெடுக்கும் விடுதலை வேட்கை மிகுந்திருந்த காலகட்டத்தில் அந்த விடுதலை உணர்வை எழுத்துக்களினூடாக இலக்கியத்தினூடாக கலைகளினூடாக சமூகத்தினுள் எடுத்துவர இயலாதவாறு அடக்குமுறைச் சட்டங்கள் கலைஞர்களைக் கட்டிப்போட்டு வைத்திருந்தன.

விடுதலை என்பது சுதந்திர வாழ்வுக்கான புற விடுதலை என்பதாகமட்டும் இருந்துவிடாது அது அகவிடுதலைக்கானதுமாக அமைய வேண்டும் என்பதில் சிந்தனையாளர்களும் கலைஞர்களும் தீவிரமாக இருந்திருக்கவேண்டும். அத்தகைய ஆன்மீக விடுதலையைச் சித்தரிக்கின்ற படைப்புக்களை உருவாக்கியவர்கள் ஆன்மீக விடுதiலையைச் சித்தரிக்கின்ற பாத்திரங்களின் வாயிலாக சமூக தேச விடுதலையையும் மறைமுகமாக எடுத்துவந்தார்கள்.
சுதந்திர உணர்வை வளர்த்தெடுத்தார்கள். பக்தி இலக்கியங்கள் அதற்குக் கைகொடுத்தன.

பக்தி இலக்கியத்தை அடித்தளமாகக் கொண்டு அமைந்த படங்கள் பக்திப்படங்கள் என்ற வகைக்குள் அடங்கின. பின்னர் அதிகளவிலான சமூகப்படங்களின் வரவு பக்திப்படங்களின் வருகையைக் குறைத்தன. இருப்பினும் சமூகப் படங்களுக்குள் பக்திநெறி வளர்க்கும் படங்களும் அவ்வப்போது உருவாகவே செய்தன.

புராணக் கதைகளை அதிகமாகத் திரைப் படமாக்கியவர்களில் திரு ஏ.பி.நாகராஜன் அவர்களுக்குத் தனியிடம் உண்டு. திருவிளையாடல், திருவருட்செல்வர், கந்தன் கருணை, சரஸ்வதி சபதம் என்று தொடரும் ஒரு நீண்ட பட்டியலின் சொந்தக்காரார் அவர்.


சமூகக் கதைகளினூடே பக்தி இலக்கியத்தை வளர்த்தவர்களில் சாண்டோ எம். எம். சின்னப்பா தேவர் முதலிடத்தில் இருக்கிறார். தெய்வம், துணைவன் போன்று முருகன் பெருமை பாடுவதற்கென்றே படங்களைத் தயாரித்தவர் அவர்.




0
எல்லாப் படங்களையும் எல்லாப் பருவத்தினரும் பார்த்துவிடமுடியாதவாறு ஒரு எழுதப்படாத விதி எம்மவரிடையே கடைப்பிடிக்கப்பட்டு வந்த காலமும் இருந்தது.
அந்தநேரத்திலும் எல்லாப் பருவத்தினரும் பார்க்கத் தக்கவையாக பக்திப் படங்கள்மட்டுமே அமைந்தன. பள்ளி மாணவர்களுக்கென காட்சி நேரங்கள் ஒதுக்கப்பட்டு திரையிடப்பட்ட படங்களில் பெரும்பாலானவை பக்திப் படங்களே.
பள்ளிமாணவர்களாகிய நாங்கள் படம் பார்க்கப் போகிறோம் என்று புறப்பட்டால் அது திருவிளையாடலாகவோ சம்பூர்ண ராமாயணமாகவோ அல்லது வேறேதாவது பக்திப்படமாகவோதான் இருக்கும்.

பக்திப் படங்கள் தவிர்ந்த ஏனைய படங்கள் அதிகமாய்க் காதலையும் மேல்நாட்டு நாகரீகத்தையும் மிகைப்படுத்திக் காட்டி சமுதாயத்தில் நஞ்சை விதைக்கின்றன என்ற கருத்து பெரியவர்களிடம் ஆழப்பதிந்திருந்தது.
அதனால் இளைய சமுதாயத்தை அவர்கள் அடிக்கடி எச்சரித்துக் கொண்டிருந்தார்கள்.
வயது வந்தவர்கள் மட்டுமே புரிந்துகொள்ளத் தக்க உண்மைகளை வயது வந்தபிறகு இவர்களும் புரிந்துகொள்ளட்டும் எனறு அவர்கள் எண்ணிக்கொண்டார்களோ என்னமோ!

எந்த ஒரு திரைப்படமும் - அது சண்டைப்படம் குடும்பப்படம் பக்திப்படம் சரித்திரப்படம் திகில்படம்  என்று எதுவாக இருந்தாலும் எல்லாப் படமும் -ஏதோ ஒரு செய்தியைத் தன்னுள் கொண்டிருந்தது.
ஆனால் ஒவ்வொன்றையும் இரசிப்பதிலும் புரிதலிலும் ஒவ்வொருவரும் தத்தம் இயல்புக்கேற்பவே அது நல்லது என்றோ நல்லதில்லை என்றோ தீர்மானித்தார்கள்.

ஒருபுறம் பக்திப் படங்கள் வெளியாகிக்கொண்டிருக்க மறுபுறம் பக்தி இலக்கியத்தை நையாண்டி செய்யும் படங்களும் உருவாகத் தொடங்கின.
தனிமனிதனையோ சமுதாயத்தையோ நெறிப்படுத்தும் சட்ட திட்டங்களினூடே அவ்வப்போது ஒருசில தவறுகளும் இடம்பெற்றுவிடுவது இயல்புதான் என்றாலும் அத்தகைய தவறுகளைமட்டுமே பெரிதுபடுத்தி சடங்குகள் சம்பிரதாயங்களைக் கொச்சைப்படுத்தி ஆன்மீக சிந்தனைக்கான அடித்தளத்தையே ஆட்டம் காணவைக்கவும் சில கதாசிரியர்கள் முயன்றிருக்கிறார்கள். ஆனால் பெரும்பான்மையான சந்தர்ப்பங்களில் அவை வெறும் நகைச்சுவைக் காட்சிகளாகவே போய் மறைந்திருக்கின்றன.

தமிழ்த் திரைப்பட வரலாற்றில் நடிப்பெனும் இலக்கியமாகத் திகழும் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் என்ற தலைசிறந்த ஒரு கலைஞனை முதலில் வெளிக்கொணர்ந்த பராசக்தி வெளிவந்தபோது அது தெய்வநிந்தனை செய்யும் ஒரு படைப்பாகவே பலராலும் பேசப்பட்டது. ஆனால் என்வரையில் அது ஒரு பக்தி இலக்கியமாகவே எனக்குத் தோன்றுகிறது.

பக்தி இலக்கியம் என்பது புராண இலக்கியமாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை.சமூகத்தில் கடைப்பிடிக்கப்படுகிற பக்திநெறியை வெளிப்படுத்தும் வாழ்வியலை அடியொற்றியதாகவும் அது இருக்கலாம்.

பராசக்தியின் கதாநாயகன் நல்லவனாக அதே சமயம் தவறான மனிதர்களால் ஏமாற்றங்களுக்குள்ளாகிறவனாக இறுதியில் தவறானவர்களைத் தட்டிக்கேட்கும் துணிவுள்ளவனாகச் சித்தரிக்கப்படுகிறான். அதுவரையில் தன்னை ஒரு பைத்தியக்காரன் போலவே அவன் காட்டிக்கொள்கிறான். (பக்தி நெறி பரப்பிய சித்தர்களில் பெரும்பாலானவர்கள் இந்த உலகத்துக்குப் பைத்தியக்காரர்களாகவே காட்சியளித்தனர் என்பது நாம் கவனிக்கத் தக்கது.)


என்வரையில் கலைஞர் கருணாநிதி என்ற அற்புதமான இலக்கியவாதி படைத்த பக்தி இலக்கியம்தான் பராசக்தி.
(கோயிலில் குழப்பம் விளைவித்தேன் கோயில் கூடாது என்பதற்காக அல்ல கோயில் கொடியவர்களின் கூடாரமாகிவிடக்கூடாது என்பதற்காக - பராசக்தியின் நாயகன் குணசேகரன் சொல்லும் வார்த்தைகள் அவை.)

இந்த வரிசையில் திருவாரூர் தங்கராசு என்ற படைப்பாளியின்  கருத்தோவியமாக வெளிவந்துஇ எம் ஆர்.ராதா என்கின்ற அற்புதமான கலைஞனை நினைவூட்டிக்கொண்டிருக்கிற இரத்தக் கண்ணீர் மற்றுமோர் பக்தி இலக்கியமாகவே எனக்குத் தோன்றுகிறது.

அண்மையில் வெளியான நமது சமகாலக் கலைஞன் கமலகாசனின் “அன்பே சிவம்!” திரைப்படமும் ஒரு தனித்துவமான பக்தி இலக்கியமே.