Samstag, 23. August 2014

திரைக்கடலோடி இலக்கியம் தேடி... 9




















ஒரு பாமர இரசிகனின் இரசனைக் குறிப்புக்கள்

-இந்துமகேஷ்





உலகத்தரம் என்று ஒன்று.
இது எல்லோர்க்கும் பொது என்ற ஒன்றாக இல்லாமல் பிறநாட்டவன், பிறமொழிபேசுபவன், பிற கலாச்சாரப் பண்புகள் வாய்ந்தவன் என்று அடுத்தவனிலிருந்து நாம் எந்தளவு வித்தியாசப் படுகிறோம் என்பதைக் கணிப்பிடுகிற ஒன்றாக நோக்கப்படுகிறது.

அவனைப்போல் அல்லது அவனைவிட நான் எந்தளவு உயர்ந்தவன் என்று நோக்குகிற மனோபாவம் நமது முன்னேற்றத்துக்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இது நம்மை ஒருவித தாழ்வுச் சிக்கலுக்குள் தள்ளிவிடுகிறது.

நம்மிடமுள்ள தனித்துவத்தை அதன் சிறப்பை மறந்து அடுத்தவனைப் பார்த்து ஆதங்கப்பட ஆரம்பிக்கும்போதுதான் நமது முன்னேற்றமும் தடைப்பட்டுப் போகிறது. ஒருவித மனத்தளர்ச்சிக்குள் நாம் தள்ளப்பட்டுவிடுகிறோம். சாதனை புரியும் தகுதி நம்மிடம் இல்லையோ என்ற சந்தேகம் வலுத்துவிடுகிறது. இவ்வளவுதான் நாம் என்று ஒரு வட்டம் போட்டுக்கொண்டு அதற்குள்ளேயே சுற்றிவரத் தொடங்கிவிடுகிறோம்.

தமிழ்த்திரையுலகமும் இப்படியொரு தாழ்வுச் சிக்கலுக்குள அவ்வப்போது தள்ளப்பட்டுக்கொண்:டே வந்திருக்கிறது. அதனை மீட்டெடுக்க முனைந்தவர்களும் பலவித  சோதனைகளைச் சந்தித்தாகவேண்டியிருந்தது.
வெளிநாட்டுக்காரனைப் பார் எத்தனை அற்புதமாகப் படம் எடுக்கிறான்... நாங்களும் எடுக்கிறோமே.. படமா இது? என்று சலித்துக்கொள்வதில் நாம் சலிப்புக்கொள்வதில்லை.

உலகளாவிய ரீதியில் வெளியாகும் திரைப்படங்கள் என்று கணக்கிட்டுப் பார்த்தால் பல்லாயிரக்கணக்கான திரைப்படங்கள் இதுவரை வெளியாகிவிட்டன.
இதில் எத்தனை திரைப்படங்கள் தரமானவை என்று விமர்சகர்கள் புளுகிக்கொண்டிருக்கிறார்கள்.? பிறமொழிப் படங்களைப் பார்த்து இரசிக்கும் இரசிகர்களின் கணிப்பின்படி எத்தனை படங்கள் தரமானவை என்று கணக்கில் கொள்ளப்பட்டிருக்கின்றன? 
ஒரு நூறு? அல்லது இருநூறு?

வருடாந்தம் ஆயிரக்கணக்கான படங்களைத் தயாரித்துத் தரும் உலகத் திரைப்படத்துறை விரல்விட்டு எண்ணத்தக்க அளவுக்குத்தான் தரமானது என்று பேசப்படும் படங்களைத் தயாரிக்கிறது என்றால் உலகத் திரைப்படத் துறையில் ஒரு பகுதியான தமிழ்ப் படத்துறை எத்தனை படங்களைத் தரமுடியும்.?

தரமான பல படங்கள் வெளிவந்தும் அதைத் தரம் என்று ஒப்புக்கொள்ள மறுக்கிற மனோபாவத்துக்கு உலகத்தரம் என்று பெயரிட்டு அவற்றை ஓரங்கட்டுவதில் நமக்கு நிகரானவர்கள் நாமே.
தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன்போல், யார் என்னசொன்னாலும் தரமான படங்களைத் தயாரித்தே தீருவோம் என்று சளைக்காது பாடுபடும் கலைஞர்களும் தமிழ்த்திரையுலகில் நிறையவே இருக்கிறார்கள். சாதித்துக்கொண்டும் இருக்கிறார்கள்.

பல்வகைப்பட்ட மாந்தர்களின் வாழ்க்கையைச் சொல்லும் இலக்கியங்களின்
ஆரம்பம் அவதாரபுருசர்களைக் கதைமாந்தர்களாகக் கொண்டது. (இராமாயணம், மகாபாரதம், சிலப்பதிகாரம், இன்னோரன்ன கதைகளிலும் இவற்றிலுள்ள கிளைக்கதைகளிலுமுள்ள கதை மாந்தர்கள்)

பிறகு மன்னர்களைக் கதைமாந்தர்களாக்கியது (அக்பர், அரிச்சந்திரா, அம்பிகாபதி, வீரபாண்டிய கட்டபொம்மன், அரசிளங்குமரி, நாடோடி மன்னன், இராஜராஜசோழன் மன்னாதி மன்னன், ஆயிரத்தில் ஒருவன்போன்ற படங்கள்;) 

பிறகு மேல்தட்டு மனிதர்களைக் கதைமாந்தர்களாக்கியது. ( உயர்ந்த மனிதன், எங்க ஊர் ராஜா, பைலட் பிரேம்நாத், மோட்டார் சுந்தரம்பிள்ளை, அபூர்வ ராகங்கள் ) 

பின்னர் நடுத்தரக் குடும்பத்து மாந்தர்கள் ( கல்யாணப்பரிசு, ஆடிப்பெருக்கு, ஆலயமணி, அவள் ஒரு தொடர்கதை,) தொடர்ந்து அடித்தட்டு மக்கள் கதாபாத்திரங்களாயினர். (துலாபாரம், சுவரில்லாத சித்திரங்கள்)

திரையில் இலக்கியம் படைக்க விளைந்தவர்கள் நகரங்களிலிருந்து கிராமங்களுக்கு வந்தார்கள். (பதினாறு வயதினிலே, அலைகள் ஓய்வதில்லை, மண்வாசனை,) 
அவர்களது படக்கருவிகளின் பார்வைக்குள் இயற்கை இலக்கியமாய்ப் படிந்தது. அந்த இயற்கையோடு இரண்டறக் கலந்த மனிதர்கள் கதாபாத்திரங்களாக தமிழ்த் திரைப்படங்களில் வாழ ஆரம்பித்தார்கள்.

முடிந்துபோன காலங்களை மறுபடி மீட்டிப்பார்ப்பதில் உள்ள சுகத்தை உணர்ந்தவர்களாய் அதை இலக்கியமாக்கும் முயற்சியில் ஒரு சிலர் ஈடுபாடுகாட்டியபோது உருவான சில படங்களின் வெற்றி தமிழ்த் திரையுலகில் புதியதொரு மாற்றத்தைக் கொணர்ந்திருக்கிறது என்றே சொல்லலாம். (பாலுமகேந்திராவின் அழியாத கோலங்கள், சேரனின் -ஆட்டோகிராப், தவமாய்த் தவமிருந்து - தங்கர்பச்சானின் - அழகி, பள்ளிக்கூடம்) 

சிறந்த ஒரு நாவலைப் படித்த மனநிறைவை அண்மையில் எனக்குத் தந்த படம்- கல்லூரி.
நடிகர்களாகப் பரிச்சயம் கொள்ளாத முகங்களோடு அந்தக் கதையின் பாத்திரங்களாகவே இன்னும் மனதில் நிழலாடுகிற அந்தக் கதை மாந்தர்கள் ஒருபோதும் மறக்கவே முடியாதவர்களாய் என்னுள் நிலைத்துவிட்டார்கள்.
ஏழ்மைநிலவும் குடும்பங்களிலிருந்து கல்லூரிக் கனவுகளோடு வாழ்வைத்தொடரும் இளைஞர் யுவதிகளை அவர்தம் உணர்வுகளை யதார்த்தம் மாறாது கண்ணெதிரே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது கல்லூரி. மிகைப்படுத்தப்படாது வெளிப்படுத்தப்படும் அந்தத் தோழமை உணர்வும், வெளிப்படுத்தப்படாமலே முற்றுப்பெறுகின்ற காதலும் இந்தக்கதையில் முக்கிய பங்கு எடுத்திருந்தபோதும், நடிக்கிறார்கள் என்ற உணர்வே தோன்றாமல் எல்லாப் பாத்திரங்களும் இயல்பான மாந்தர்களாய் வாழ்ந்து முடித்திருக்கிறார்கள் என்பது இந்தப் படத்தின் சிறப்பு.



கையில் எடுத்ததும் வாசித்து முடித்துவிட்டுத்தான் வைக்கவேண்டும் என்று துடிப்பேற்படுத்துகிற ஓர் இலக்கியமாய், தொடக்கம் முதல் முடிவு வரை அந்தப் பாத்திரங்களோடு உறவாடிக்கொண்டிருக்கவேண்டும் என்ற உத்வேகத்தைத் தருகிறது கல்லூரி.
பாலாஜி சக்திவேல் என்கிற அந்தப் புதிய எழுத்தாளனுக்கென்று தமிழ்த் திரையுலகத்தில் ஒரு தனியிடத்தைத் தந்திருக்கிறது கல்லூரி.























Keine Kommentare:

Kommentar veröffentlichen