Dienstag, 13. August 2013

திரைக்கடலோடி இலக்கியம் தேடி...4





















திரைக்கடலோடி இலக்கியம் தேடி...
(ஒரு பாமர இரசிகனின் இரசனைக்குறிப்புக்கள்)
-இந்துமகேஷ்



4.
ஒரு மாலைப்பொழுது.
கடற்கரையோரமாக இரண்டு நண்பர்கள் நடந்துகொண்டிருந்தார்கள்.
வானத்தில் சில பறவைகள் கூட்டமாகப் பறந்துகொண்டிருந்தன.
அவை பறந்துசெல்லும் அழகை இரசித்தபடி நண்பர்களில் ஒருவன் சொன்னான்:
“அந்தப் பறவைகளைப் பார்த்தாயா? அவை எத்தனை அழகாக மகிழ்ச்சியாகப் பறந்துகொண்டிருக்கின்றன!”
மற்றவன் இவனைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னான்:
“அவை அழகாகப் பறந்துகொண்டிருக்கின்றன என்பது சரிதான். ஆனால் அவை மகிழ்ச்சியாகத்தான் பறந்துகொண்டிருக்கின்றன என்று நீ எப்படிச் சொல்ல முடியும். நீயும் ஒரு பறவை அல்லவே!”
நண்பனின் கேலிக்குப் பதிலாக முன்னவன் சொன்னான்:
“அவை மகிழ்ச்சியாகத்தான் இருக்கின்றன என்பது எனக்குத் தெரியாது என்று நீ எப்படிச் சொல்லமுடியும்? நீ நான் அல்லவே!”

எல்லா விடயங்களிலும் கருத்துக்கள் இப்படித்தான் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.

ஒருவர் நினைப்பதை மற்றவர் சரியாகப் புரிந்துகொள்வதில்லை. முரண்பாடுகள் உருவாகின்றன. சில சமயங்களில் அர்த்தத்தோடும் பல சந்தர்ப்பங்களில் அர்த்தமில்லாமலும் முரண்பாடுகள் வளர்க்கப்படுகின்றன.

பார்ப்பவர் மனோநிலைக்கேற்ப காட்சிகள் மாற்றம் பெறுகின்றனவே தவிர காட்சிகள் இயல்பாகவே உருவாகிக்கொண்டிருக்கின்றன. அவற்றிலிருந்து நாம் எதைப் பெற்றுக்கொள்கிறோம் என்பதும் கற்றுக்கொள்கிறோம் என்பதும் நமது மனோபாவத்தைப் பொறுத்ததே.



வாழ்க்கையிலிருந்து நாம் எதைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறோமோ இதற்கான முயற்சிகளையே முன்னெடுக்கிறோம். முயற்சியினாலேயெ அதைப் பெற்றுக்கொள்கிறோம்.

பகுத்தறிவின் எல்லையில் ஆன்மாவிற்குள் ஆன்மாவாக இருக்கும் இறைவனைக் காணமுடியாத மனிதன் தன்மீது தனக்குள்ள அளவுக்கதிகமான நம்பிக்கையோடு நாத்திகவாதம் பேசுவது இயல்பானதுதான் என்றாலும் வாழ்வின் எல்லையை அவன் தொட்டுவிடுவதற்குள் ஆன்மிகத்தின் சில பக்கங்களையாவது அவன் புரட்டிப் பார்க்கவும் நேர்ந்துவிடுகிறது.
இதையும் அவன் பேசும் நாத்திக வாதத்துக்குள் நின்றே செய்கிறான்.

பக்தி இலக்கியம் குறித்ததான திரைப்படப் பார்வையினூடு பகுத்தறிவுப் போதனைகள் நிறைந்ததாகச் சித்தரிக்கப்பட்ட அல்லது விமர்சிக்கப்பட்ட சில படங்களைப் பார்க்கும்போது இந்த உண்மை புரியும்.

அன்பே சிவம் என்று ஒரு திரைப்படம்.
பத்மஸ்ரீ கமலகாசனின் பல படங்கள் இலக்கியத்தன்மை வாய்ந்ததாக அமைந்திருக்கின்றன.
அவற்றில் அன்பே சிவமும் ஒன்று. கதை திரைக்கதை இரண்டையும் கமலகாசனே எழுதியிருக்கிறார். வசனங்களை எழுத்தாளர் மதன் எழுதியிருக்கிறார்.

என்வரையில் கமலகாசனை ஒரு நடிகராகமட்டும் பார்க்காமல் ஒரு இலக்கியவாதியாகவும் பார்க்கிறேன்.
அன்பே சிவம் எனும் மிக ஆழமான ஒரு தத்துவத்தை வெளிப்படுத்துவதற்காக அவர் தயாரித்திருக்கும் திரைப்படம் அன்பே சிவம்.

யார் யார் சிவம்? நீ நான் சிவம்
வாழ்வே தவம் அன்பே சிவம்
அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா
மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா
ஆத்திகம் பேசும் அடியவர்க்கெல்லாம் சிவமே அன்பாகும்
நாத்திகம் பேசும் நல்லோர்க்கெல்லாம் அன்பே சிவமாகும்.
(கமலகாசனின் குரலில் வெளிப்படும் பாடல்)

இந்தத் திரைக்கதையின் முடிவில் வரும்காட்சியில்-
சிவத்தை(கமலகாசனை) கொல்லவரும் மனிதனுக்கும் சிவத்துக்கும் நிகழும் உரையாடல் இப்படி அமைகிறது.
„எனக்குக்  கடவுள் நம்பிக்கை இருக்கு தம்பி.. உங்களுக்கு எப்படியோ?“
சிவம்சொல்கிறான்: 
„எனக்கும் இருக்கு!“
„அப்படியா... எந்த சாமி?“

நீதான் என்பதுபோல கண்களால் சாடை காட்டுகிறான் சிவம்.
„நானா?“
„ஒருத்தனைக் கொல்லணும்னு வந்துட்டு மனசைமாத்திட்டு மன்னிப்பும் கேட்கிற மனிசன் இருக்கானே.. அதுதான் என்னைப் பொறுத்தவரைக்கும் சாமி!“
„மனசை மாத்திக்கிட்டேன் ஆனா சாமி எல்லாம் இல்லைத் தம்பி!“
சிவம் சிரித்துக்கொண்டே சொல்கிறான்:
„இப்படியெல்லாம் நாத்திகம் பேசாதிங்க! ஊரெல்லாம் இந்தமாதிரி நிறைய சாமி இருக்கு.. நம்புங்க!“

கதையின் முடிவில் அன்பே சிவம் தத்துவத்தை அழகாகச் சொல்லிச் செல்லும் கதாசிரியன் கமலகாசன் இலக்கியம் படைக்கவில்லையா?

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார் 
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருப்பாரே
திருமூலர் திருமந்திரம் இது.
இந்தப் பக்தி இலக்கியம் சொன்னதை திரைப்பட வடிவத்தில் நிகழ்காலத்திற்கேற்ப சொல்லிச் செல்கிறார் கமலகாசன்.



திரைப்படங்களில் இலக்கியம் என்பது அதன் கதை திரைக்கதை வசனம் பாடல்கள் என்பவற்றினூடேதான் நம்மால் அடையாளம் காணப்படுகிறது

இலக்கியவாதிகள் இந்தத்துறையில் ஈடுபடவேண்டும் என்று பலர் சொல்லிக் கொண்டிருந்தார்களே தவிர திரைத்துறை சார்ந்த படைப்பாளிகளை இலக்கியவாதிகளாக அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்பது வேதனையளிக்கும் ஒரு விடயம்தான்.

இலக்கியவாதிகளான எழுத்தாளர்கள் அமரர் கல்கி (கள்வனின் காதலி), அண்ணாதுரை (ரங்கோன்ராதா) மு.கருணாநிதி(மந்திரிகுமாரி) , ராஜாஜி(திக்கற்றபார்வதி), அகிலன்(பாவைவிளக்கு), கண்ணதாசன்(கவலை இல்லாத மனிதன்) , ஜெயகாந்தன் (யாருக்காக அழுதான்),லஷ்மி(இருவர் உள்ளம்) சிவசங்கரி(ஒருமனிதனின்கதை), என்று பலர் எழுதிய கதைகளும் நாவல்களும் திரைவடிவம் பெற்றபோது இலக்கியங்கள் திரைப்படங்களாவதாகப் பேசிக்கொள்ளப்பட்டதே தவிர ஆரம்பகாலங்களில் திரைத்துறைக்குள்ளேயே இருந்த படைப்பாளிகள் பற்றியோ இலக்கியங்கள் பற்றியோ எவரும் அதிகமாக அக்கறை செலுத்தியதாகத் தெரியவில்லை.

ஆனால் இயக்குனர்கள் அடையாளம் காணப்பட்டபோது அவர்களுக்குள்ளிருந்த இலக்கியவாதிகளும் அடையாளம் காணப்பட்டார்கள்.

ஸ்ரீதர், .பாலச்சந்தர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், பாரதிராஜா, பாக்கியராஜ், டி.இராஜேந்தர், ஜே.மகேந்திரன், பாலுமகேந்திரா, துரை, விசு, மணிரத்தினம், சங்கர், கமலகாசன், பார்த்திபன், சேரன், தங்கர்பச்சான் என்று எத்தனையோ படைப்பாளிகளும் இலக்கியவாதிகளும் தமிழ்த்திரைப்பட வரலாற்றில் தமது பெயரைப் பதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Montag, 5. August 2013

திரைக்கடலோடி இலக்கியம் தேடி...3




















3.
இலக்கியத்துக்குப் பல முகங்கள் உண்டு.
அதிலொன்று பக்தி இலக்கியம்.
தமிழ்த் திரைப்பட வரலாற்றின் ஆரம்பகாலங்களில் பக்தி இலக்கியமே அதிகளவில் ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கிறது. அந்தக் காலங்களில் காளிதாஸ் முதலாக தொடர்ந்து புராணங்கள் இதிகாசங்களில் உலாவந்த கதாபாத்திரங்கள்தாம் பெருமளவில் தமிழ்த் திரைப்படங்களை ஆக்கிரமித்திருந்தினர்.

சிறுவயதில் பாடப்புத்தகங்களில் நான் அறிந்த பல கதாபாத்திரங்கள் நான் பிறப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்த்திரைப்படங்களில் வலம் வந்திருக்கிறார்கள்.

அந்நிய நாட்டவர்களிடம் அடிமைப்பட்டுக்கிடந்த தாய்நாட்டை மீட்டெடுக்கும் விடுதலை வேட்கை மிகுந்திருந்த காலகட்டத்தில் அந்த விடுதலை உணர்வை எழுத்துக்களினூடாக இலக்கியத்தினூடாக கலைகளினூடாக சமூகத்தினுள் எடுத்துவர இயலாதவாறு அடக்குமுறைச் சட்டங்கள் கலைஞர்களைக் கட்டிப்போட்டு வைத்திருந்தன.

விடுதலை என்பது சுதந்திர வாழ்வுக்கான புற விடுதலை என்பதாகமட்டும் இருந்துவிடாது அது அகவிடுதலைக்கானதுமாக அமைய வேண்டும் என்பதில் சிந்தனையாளர்களும் கலைஞர்களும் தீவிரமாக இருந்திருக்கவேண்டும். அத்தகைய ஆன்மீக விடுதலையைச் சித்தரிக்கின்ற படைப்புக்களை உருவாக்கியவர்கள் ஆன்மீக விடுதiலையைச் சித்தரிக்கின்ற பாத்திரங்களின் வாயிலாக சமூக தேச விடுதலையையும் மறைமுகமாக எடுத்துவந்தார்கள்.
சுதந்திர உணர்வை வளர்த்தெடுத்தார்கள். பக்தி இலக்கியங்கள் அதற்குக் கைகொடுத்தன.

பக்தி இலக்கியத்தை அடித்தளமாகக் கொண்டு அமைந்த படங்கள் பக்திப்படங்கள் என்ற வகைக்குள் அடங்கின. பின்னர் அதிகளவிலான சமூகப்படங்களின் வரவு பக்திப்படங்களின் வருகையைக் குறைத்தன. இருப்பினும் சமூகப் படங்களுக்குள் பக்திநெறி வளர்க்கும் படங்களும் அவ்வப்போது உருவாகவே செய்தன.

புராணக் கதைகளை அதிகமாகத் திரைப் படமாக்கியவர்களில் திரு ஏ.பி.நாகராஜன் அவர்களுக்குத் தனியிடம் உண்டு. திருவிளையாடல், திருவருட்செல்வர், கந்தன் கருணை, சரஸ்வதி சபதம் என்று தொடரும் ஒரு நீண்ட பட்டியலின் சொந்தக்காரார் அவர்.


சமூகக் கதைகளினூடே பக்தி இலக்கியத்தை வளர்த்தவர்களில் சாண்டோ எம். எம். சின்னப்பா தேவர் முதலிடத்தில் இருக்கிறார். தெய்வம், துணைவன் போன்று முருகன் பெருமை பாடுவதற்கென்றே படங்களைத் தயாரித்தவர் அவர்.




0
எல்லாப் படங்களையும் எல்லாப் பருவத்தினரும் பார்த்துவிடமுடியாதவாறு ஒரு எழுதப்படாத விதி எம்மவரிடையே கடைப்பிடிக்கப்பட்டு வந்த காலமும் இருந்தது.
அந்தநேரத்திலும் எல்லாப் பருவத்தினரும் பார்க்கத் தக்கவையாக பக்திப் படங்கள்மட்டுமே அமைந்தன. பள்ளி மாணவர்களுக்கென காட்சி நேரங்கள் ஒதுக்கப்பட்டு திரையிடப்பட்ட படங்களில் பெரும்பாலானவை பக்திப் படங்களே.
பள்ளிமாணவர்களாகிய நாங்கள் படம் பார்க்கப் போகிறோம் என்று புறப்பட்டால் அது திருவிளையாடலாகவோ சம்பூர்ண ராமாயணமாகவோ அல்லது வேறேதாவது பக்திப்படமாகவோதான் இருக்கும்.

பக்திப் படங்கள் தவிர்ந்த ஏனைய படங்கள் அதிகமாய்க் காதலையும் மேல்நாட்டு நாகரீகத்தையும் மிகைப்படுத்திக் காட்டி சமுதாயத்தில் நஞ்சை விதைக்கின்றன என்ற கருத்து பெரியவர்களிடம் ஆழப்பதிந்திருந்தது.
அதனால் இளைய சமுதாயத்தை அவர்கள் அடிக்கடி எச்சரித்துக் கொண்டிருந்தார்கள்.
வயது வந்தவர்கள் மட்டுமே புரிந்துகொள்ளத் தக்க உண்மைகளை வயது வந்தபிறகு இவர்களும் புரிந்துகொள்ளட்டும் எனறு அவர்கள் எண்ணிக்கொண்டார்களோ என்னமோ!

எந்த ஒரு திரைப்படமும் - அது சண்டைப்படம் குடும்பப்படம் பக்திப்படம் சரித்திரப்படம் திகில்படம்  என்று எதுவாக இருந்தாலும் எல்லாப் படமும் -ஏதோ ஒரு செய்தியைத் தன்னுள் கொண்டிருந்தது.
ஆனால் ஒவ்வொன்றையும் இரசிப்பதிலும் புரிதலிலும் ஒவ்வொருவரும் தத்தம் இயல்புக்கேற்பவே அது நல்லது என்றோ நல்லதில்லை என்றோ தீர்மானித்தார்கள்.

ஒருபுறம் பக்திப் படங்கள் வெளியாகிக்கொண்டிருக்க மறுபுறம் பக்தி இலக்கியத்தை நையாண்டி செய்யும் படங்களும் உருவாகத் தொடங்கின.
தனிமனிதனையோ சமுதாயத்தையோ நெறிப்படுத்தும் சட்ட திட்டங்களினூடே அவ்வப்போது ஒருசில தவறுகளும் இடம்பெற்றுவிடுவது இயல்புதான் என்றாலும் அத்தகைய தவறுகளைமட்டுமே பெரிதுபடுத்தி சடங்குகள் சம்பிரதாயங்களைக் கொச்சைப்படுத்தி ஆன்மீக சிந்தனைக்கான அடித்தளத்தையே ஆட்டம் காணவைக்கவும் சில கதாசிரியர்கள் முயன்றிருக்கிறார்கள். ஆனால் பெரும்பான்மையான சந்தர்ப்பங்களில் அவை வெறும் நகைச்சுவைக் காட்சிகளாகவே போய் மறைந்திருக்கின்றன.

தமிழ்த் திரைப்பட வரலாற்றில் நடிப்பெனும் இலக்கியமாகத் திகழும் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் என்ற தலைசிறந்த ஒரு கலைஞனை முதலில் வெளிக்கொணர்ந்த பராசக்தி வெளிவந்தபோது அது தெய்வநிந்தனை செய்யும் ஒரு படைப்பாகவே பலராலும் பேசப்பட்டது. ஆனால் என்வரையில் அது ஒரு பக்தி இலக்கியமாகவே எனக்குத் தோன்றுகிறது.

பக்தி இலக்கியம் என்பது புராண இலக்கியமாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை.சமூகத்தில் கடைப்பிடிக்கப்படுகிற பக்திநெறியை வெளிப்படுத்தும் வாழ்வியலை அடியொற்றியதாகவும் அது இருக்கலாம்.

பராசக்தியின் கதாநாயகன் நல்லவனாக அதே சமயம் தவறான மனிதர்களால் ஏமாற்றங்களுக்குள்ளாகிறவனாக இறுதியில் தவறானவர்களைத் தட்டிக்கேட்கும் துணிவுள்ளவனாகச் சித்தரிக்கப்படுகிறான். அதுவரையில் தன்னை ஒரு பைத்தியக்காரன் போலவே அவன் காட்டிக்கொள்கிறான். (பக்தி நெறி பரப்பிய சித்தர்களில் பெரும்பாலானவர்கள் இந்த உலகத்துக்குப் பைத்தியக்காரர்களாகவே காட்சியளித்தனர் என்பது நாம் கவனிக்கத் தக்கது.)


என்வரையில் கலைஞர் கருணாநிதி என்ற அற்புதமான இலக்கியவாதி படைத்த பக்தி இலக்கியம்தான் பராசக்தி.
(கோயிலில் குழப்பம் விளைவித்தேன் கோயில் கூடாது என்பதற்காக அல்ல கோயில் கொடியவர்களின் கூடாரமாகிவிடக்கூடாது என்பதற்காக - பராசக்தியின் நாயகன் குணசேகரன் சொல்லும் வார்த்தைகள் அவை.)

இந்த வரிசையில் திருவாரூர் தங்கராசு என்ற படைப்பாளியின்  கருத்தோவியமாக வெளிவந்துஇ எம் ஆர்.ராதா என்கின்ற அற்புதமான கலைஞனை நினைவூட்டிக்கொண்டிருக்கிற இரத்தக் கண்ணீர் மற்றுமோர் பக்தி இலக்கியமாகவே எனக்குத் தோன்றுகிறது.

அண்மையில் வெளியான நமது சமகாலக் கலைஞன் கமலகாசனின் “அன்பே சிவம்!” திரைப்படமும் ஒரு தனித்துவமான பக்தி இலக்கியமே.


Donnerstag, 11. Juli 2013

திரைக்கடலோடி இலக்கியம் தேடி...2











திரைக்கடலோடி இலக்கியம் தேடி..
(ஒரு பாமர இரசிகனின் இரசனைக் குறிப்புக்கள்)

-இந்துமகேஷ்


2.
பருவங்கள் மாறமாற இரசனைகளும் மாறுகின்றன.
மிகச்சிறிய வயதில் உணர்வற்ற பொம்மைகளோடு உறவை வளர்த்துக்கொண்டு இது என்னுடையது என்று உரிமைகொண்டாடி அதன்மீது பற்றுவைத்துப் பற்றிப் பிடித்துக் கொள்கிறோம்.

அறிவு தெளிய ஆரம்பிக்கும் பருவத்தில் பள்ளித் தோழர்களோடு பாசத்தைப் பரிமாறி அவர்களையே உலகம் என்று உறவாடிக் களிக்கிறோம்.
உயிரற்ற பொம்மைகளுக்குப் பதிலாக இப்போது உயிருள்ள உணர்வுள்ள நண்பர்கள் நண்பிகள் என்று உலகம் விரிகிறது.

வாலிபத்தில் காதல் கல்யாணம் என்று வளரும் உறவுகளினூடே பிள்ளை குட்டிகள் என்று பெருகி சமுதாய நீரோட்டத்தில் சங்கமிக்கிறோம்.
முதுமை எட்டிப் பார்க்கும்போது-
இதுநாள்வரை வாழ்ந்த வாழ்வின் நிகழ்வுகள் அவ்வப்போது மனத்திரையில் நிழற்படமாய் விரியத்தொடங்கிவிடுகிறது.
இன்பமும் துன்பமுமாய்க் கலந்து கரைந்துபோன காலங்கள்.






உங்களது பொழுதுபோக்கு என்ன? என்ற கேள்விக்குப் பெரும்பாலானவர்களிடமிருந்து வரும் பதில் வானொலி கேட்பது, படம் பார்ப்பது என்பதாகத்தான் இருக்கும்.

இலக்கியங்கள் மீதான வாசிப்பு அனுபவங்களிலிருந்து பார்த்தல் கேட்டல் என்னும் உணர்வுகளினூடாக இலக்கியங்களைக் காண வழிவகுத்ததில் வானொலிகளுக்கும் திரைப்படங்களுக்கும் பெரும்பங்குண்டு.

வாசிப்பு அனுபவங்களின்மூலம் நாம் சந்தித்த காவிய நாயகர்களையும் நாயகிகளையும் நாம் நமது கற்பனையுலகில் சந்தித்திருந்தபோது, அரிதாரம் பூசிய கலைஞர்கள் அந்தக் கதாபாத்திரங்களை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள். பண்டைய இலக்கியங்களிலும் பாடப்புத்தகங்களிலும் நாம் சந்தித்த அனைத்துப் பாத்திரங்களுமே திரைப்படங்களின்மூலம் தம்மை நிலைநிறுத்திப் போயிருக்கிறார்கள்.

ஒளவையார் (கே.பி.சுந்தராம்பாள்)முதல், பெரியார்(சத்யராஜ்)வரை  நம்முன் இப்போது நடமாடிக் கொண்டிருக்கிறார்களே!

திரைத்துறை சார்ந்த அனைத்துக் கலைஞர்களுமே- கதாசிரியன்முதல் படப்பிடிப்புக்கருவிக்கு ஒளிபாய்ச்சும் ஒளிக்கலைஞன்வரை- இந்தத் திரைக்கடலில் மூழ்கி முத்தெடுப்பதற்கு அயராது உழைத்திருக்கிறார்கள் உழைத்து வருகிறார்கள்.

அவர்களது அயராத உழைப்புத்தான் இன்று தமிழ்ததிரையுலகம் 75 ஆண்டுகளைக்கடந்து நூற்றாண்டினைநோக்கி அடியெடுத்து வைப்பதற்கும் உறுதுணைபுரிந்துவருகிறது.

எண்ணற்ற கலைஞர்களைத் தன்னுள் தாங்கிநிற்கும் திரைக்கடலில் இலக்கிய முத்துக்கள் நிறைந்தே கிடக்கின்றன.
அவற்றின் அருமைகளை அறிந்தவர்களும்கூட தத்தம் உணர்வுகளை மறைத்துக்கொண்டு திரைக்கடலில் முத்தா? என்று சிரிப்பதன்மூலம் தமது நடிப்பை வெளிப்படுத்துகிறார்கள்.

தமிழ்த் திரைப்பட வரலாற்றின் ஆரம்ப காலத்தில் வெளியான பெரும்பாலான படங்களில் புராண இலக்கியங்களின் கதாபாத்திரங்களே வெளிப்பட்டார்கள்.
சுதந்தரப் போராட்டக்காலம் முடிந்து சுதந்திரத்திற்குப் பின்னான திரைப்படங்களில் சமூக இலக்கியங்கள் தம்மை  இணைத்துக்கொண்டன.

ரோமியோ-ஜூலியட், லைலா - மஜ்னு, அம்பிகாபதி -அமராவதி என்று காதல் இலக்கியத்தின் கதாபாத்திரங்களின் வரிசையில் தமிழ்த் திரைப்பட உலகம் அறிமுகம் செய்து வைத்த தேவதாஸ் - பார்வதியும் இலக்கிய அந்தஸ்துப் பெற்று என்றும் வாழும் உயிரோவியங்களாக உருப்பெற்று விட்டார்கள்.

“..அலையும் நீர்மேவும் குமிழாதல் போலே
ஆவது பொய் ஆவதெல்லாம் ஆசையினாலே
அரச போகமும் வைபோகமும் தன்னாலே
அழியும் நாம் காணும் சுகமே மாயம்

உறவும் ஊராரும் உற்றர் பெற்றாரும்
ஓடிடுவார் கூடவரார் நாம்செல்லும் நேரம்
மறைநூல் ஓதுவதும் ஆகுமிதே சாரம்
மனதில் நாம்காணும் சுகமே மாயம்..!
உலகே மாயம் வாழ்வே மாயம்
நிலையேது நாம்காணும் சுகமே மாயம்!”
- தேவதாசின் குரல் இப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

வாழ்வு நிலையில்லாததுதான் ஆனால் காதல் நிலையானது என்று அதற்காகவே வாழ்ந்து முடித்த தேவதாஸ் காதல் இலக்கியத்தைச் சொல்லும் ஒரு கதாபாத்திரம்.
தமிழ்த் திரைப்பட உலகில் அவன் நிலையானவன்.



எது இலக்கியம் என்பதற்கு பல்வேறு வகையான விடைகள் உண்டு.
இன்னதுதான் இலக்கியம் என்று வரையறுத்துவிடமுடியாதபடி இயற்கையிலும் மனிதவாழ்க்கையிலும் பரவிக் கிடக்கிறது இலக்கியம்.

எழுதப்படிக்கத் தெரியாதவனும் இரசனையுணர்வு குன்றியிருப்பவனும்கூட தன் குழந்தையின் மழலைச் சிரிப்பில் இலக்கியத்தைக் கற்றுக்கொள்ளமுடியும்.
இயற்கையோடொட்டிய, மனிதவாழ்வோடு பின்னிப் பிணைந்த எல்லாக் காட்சிகளிலுமே இலக்கியம் உண்டு. அதனை இரசித்து அனுபவிப்பதற்கான உள்ளப்பாங்கு எல்லோரிடத்தும் இருப்பதில்லை என்ற ஒரு காரணத்தை முன்வைத்து, ஒத்த இரசனையுள்ளவர்கள் தத்தமக்குள் சிறுசிறு குழுக்களை உருவாக்கிக் கொள்கிறார்கள். இலக்கிய வட்டங்களுக்குள் தங்களைச் சிறைப்படுத்திக் கொள்கிறார்கள்.

எழுதுகோல் ஏந்திய ஒவ்வொருவனும் தன்னை ஒர் இலக்கியவாதியாகவே எண்ணிக்கொள்கிறான். தன் படைப்புக்கள் இலக்கியத்தன்மை பெற்றுவிடவேண்டும் என்றே அவன் விரும்புகிறான்.
இதற்கு திரைக்கதாசிரியனும் பாடலாசிரியனும்கூட விதிவிலக்கல்ல.

திரைப்படம் என்பது ஒரு கூட்டுமுயற்சியாக இருந்தாலும் திரைக்கதாசிரியன் தன் விருப்பப்படியே தன் எழுத்துக்கள் உயிர்பெறவேண்டும் என்று எண்ணுகிறான். அவனது எழுத்துக்கு உயிரூட்டும் பொறுப்பு இயக்குனரைச் சார்ந்ததாகிறது..

ஒருவர் கதைவசனம் எழுத, இன்னொருவர் இயக்கும் படங்களுக்கு மத்தியில் தானே கதைவசனம் எழுதி அதை இயக்கும் இயக்குனர்கள் பலர் உருவானார்கள்.
எனது இளமைப்பருவத்தில்-
நானறிந்த சிறந்த கதாசிரியராகவும் இயக்குனராகவும் முதலில் தோன்றியவர் இயக்குனர் ஸ்ரீதர்.
கல்யாணப்பரிசு, நெஞ்சிலோர் ஆலயம், காதலிக்க நேரமில்லை போன்ற படங்களின் வெற்றியில் ஸ்ரீதரின் பெயர் புகழேணிக்குப் போனபோதுதான் அவரை நான் அறிந்தேன்.

நெஞ்சம் மறப்பதில்லை, ஊட்டிவரை உறவு, சிவந்தமண், வெண்ணிறஆடை, நெஞ்சிருக்கும்வரை, சுமைதாங்கி, கலைக்கோயில் என்று தொடர்ந்த அவரது கலைவண்ணங்களில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்பினைப் பெற்றாலும் காதல்இலக்கியம் படைத்த அவரது கல்யாணப் பரிசு, நெஞ்சிலோர் ஆலயம், சுமைதாங்கி, நெஞ்சம் மறப்பதில்லை. கலைக்கோயில் என்பன என்வரையில் இலக்கியத்தன்மை மிகுந்த படங்களாக எண்ணத்தக்கவை.




திரைக்கதையில் காதல் இலக்கியம் படைத்தவர்களில் இயக்குனர் ஸ்ரீதர் என்றும் முதலிடத்திலேயே இருக்கிறார். இருப்பார்.

 “ஆழ்கடலில் நமது சிறியதோணி
கலையுலகில் நமது புதிய பாணி!” என படகுச்சின்னம் பதித்து சித்தராலயாவின்மூலம் திரைக்கடலில் வலம்வந்த ஸ்ரீதர் இலக்கிய முத்துக்களை எடுத்துவரத் தவறவில்லை.

அவரது திரைக்காவியங்கள் அவரது சிறப்பிடத்தை காலகாலத்துக்கும் பாதுகாக்கும்.



Samstag, 6. Juli 2013

திரைக்கடலோடி இலக்கியம் தேடி...




 திரைக்கடலோடி இலக்கியம் தேடி...!


அறிமுகம்..

இருட்டு!- 
 அது போதைகளின் தரிப்பிடம். 
மயக்கங்களின் பிறப்பிடம். 
எங்கே போதை இருக்கிறதோ எங்கே மயக்கம் இருக்கிறதோ அங்கே இருட்டு இருக்கிறது. 
எங்கே இருட்டு இருக்கிறதோ அங்கே போதை இருக்கிறது. 
எங்கே மயக்கம் இருக்கிறதோ அங்கே இருட்டு இருக்கிறது. 
ஒன்றிலிருந்து ஒன்று பிரியாதவாறு இருந்தேயாகவேண்டும் என்பது காலத்தின் கட்டளை. 
வெளிச்சத்தைக் கண்டபின்னால் இந்த மயக்கங்களும் போதைகளும் அகன்றுவிடும் என்பதே யதார்த்தம். 

அன்னையின் கருவறையில் இருட்டில் மயங்கிக் கிடக்கிறோம். வெளியே இந்த வெளிச்சத்துக்கு வந்தபின்னாலும்; இருட்டு வந்துவிட்டால் இமைகள் தாமாகவே மூடிக்கொள்கின்றன. நித்திரை என்று அதற்குப் பெயர் சூடி அந்த மயக்கத்திலேயே இருந்துவிடுகிறோம். விழித்துக்கொண்டிருக்கும்போதோ போதைக்குள் தள்ளுகிற எண்ணங்கள் மனத்திலே இருட்டை வரவழைத்து விடுகின்றன. 

இருட்டுமனத்துக்கு தெளிவான எதையும் தேர்ந்துவிட முடிவதில்லை. அகப்பட்டதையெல்லாம் அப்படியே வாரிச்சுருட்டி எடுத்துக்கொண்டு அந்த மயக்கத்தையே வாழ்க்கை என்று கற்பனை பண்ணிக்கொண்டு காலத்தை விழுங்கிவிடுகிறோம். 

எப்போதும் ஏதாவது ஒரு போதையில் அல்லது மயக்கத்தில் இருக்கவே மனிதன் விரும்புகிறான். போதை தராத எதுவும் மயக்கம் தராத எதுவும் அவனுக்கு மகிழ்ச்சியை அளிப்பதில்லை. 

அன்பு, பாசம், காதல், பக்தி இவைகள்கூட ஒருவகையான போதையிலேயே அவனை வைத்திருக்கின்றன. அவற்றிலிருந்து விலகிப்போகும்போது அவனது போதையும் விலகிப்போகிறது. போதை இல்லாதவன் வாழ்வு பாதை இல்லாத பயணமாக மாறிவிடுகிறது. 

 „மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ 
இனிக்கும் இன்ப இரவே நீ வாவா 
இன்னலைத் தீர்க்கவா!“ -
-அது ஒரு திரைப்படப்பாடலின் வரிகள்! 
- வெறும் காதலைச் சொல்லும் வரிகளா அவை? 
இருட்டுக்கும் மனிதனுக்கும் உள்ள ஆழமான உறவைச் சொல்லும் வரிகள் அவை. புரிந்தவனுக்கு இலக்கியம் புரியாதவனுக்கு...? 




திரைப்படங்களில் இலக்கியம் தேடும் என் விருப்பத்துக்கான முன்னுரை இது...  
திரைப்படங்களில் இலக்கியமா? 
என்ன சிரிக்கிறீர்கள்..? 
ஓ.. நீங்கள் எப்போதும் திரைப்படங்களைப் பார்த்துப் பார்த்து சலித்துக்கொள்கிற இலக்கியவாதியா..? 
உங்களுடன்தான் நான் பேசவேண்டும்!

 -இந்துமகேஷ் 
















 திரைக் கடலோடி இலக்கியம் தேடி...! 
(ஒரு பாமர இரசிகனின் இரசனைக் குறிப்புக்கள்) 
-இந்துமகேஷ் 

1.

திரையரங்குக்கு வெளியே வரிசையாய்க் காத்திருக்கும் இரசிகர் கூட்டத்தினுள் ஒருவனாய் மணிக்கணக்கில் காத்திருந்து, நுழைவுச்சீட்டுப் பெற்று, உள்ளே போய் வசதியான ஒர் இருக்கையைத் தேடி அமர்ந்து ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டு நிமிரும்போது- 
அரங்கினுள் இருள் கவியும். 
பரந்து விரிந்த வெண்திரையில் ஒளிக்கற்றையினூடே வந்து விழும் நிழலுருவங்கள் புதியதோர் உலகத்துக்கு அழைத்துச் செல்லும். உள்ளிருக்கும் அந்த மூன்று மணிநேரமும் வெளியுலகத்தின் கவலைகளை மறந்து அந்த நிழலுருவங்களின் இன்ப துன்பங்களோடும் அசைவுகளோடும் இரண்டறக்கலந்து தன்னை மறந்திருக்கும் ஒரு சராசரி இளைஞனாய் நான். 


நடிகர் திலகம், மக்கள் திலகம், காதல் மன்னன் என்று தமிழ்த் திரையுலகின் மூவேந்தர்கள் திரையுலகைக் கட்டியாண்ட காலங்கள் அவை. 


நடிகையர் திலகமும், நாட்டியப் பேரொளியும், கன்னடத்துப் பைங்கிளியும் என்று அறியப் பட்டவர்களின் வரிசையில் ஜெயலலிதா கே.ஆர்.விஜயா என்று இரசிகர்களின் கனவுக் கன்னிகள் உலாவரத் தொடங்கியிருந்த பொழுதுகள் அவை. 

நான் சிறுவனாக இருந்தபோது ஊரிலிருந்து யாராவது யாழ்ப்பாணம் போய்விட்டு வருபவர்களைச் சந்திக்க நேர்ந்தால் அவர்களிடம் நான் கேட்கும் முதலாவது கேள்வி- 
“என்ன படம் பார்த்தீர்கள்?” 
ஏதாவது ஒரு படத்தின் பெயர் அவர்களிடமிருந்து மகிழ்வுடன் வரும். 

யாழ்ப்பாணப் பட்டினம் என்றாலே அது ஓர் கனவுக்கோட்டம்போல் என் மனத்திரையில் விரியும். அங்கிருக்கும் திரையரங்குகளும், அவற்றின் வெளிப்புறங்களில் உயர்ந்து நிற்கும் திரைக் கலைஞர்களின் சித்திரங்களும், மெல்லிதாய் இருள்மூடும் மாலைப் பொழுதை அழகூட்டும் வண்ண விளக்குகளும் மட்டுமே யாழ்ப்பாணம் என்பதுபோல் ஒரு மயக்கம் என்னுள் எழும். 

அடிக்கடி படம் பார்க்கும் வாய்ப்புக்கள் எனக்கு இருந்ததில்லை. எப்போதாவது யாழ்ப்பாணம் போகும் சந்தர்ப்பம் வாய்த்தால் மட்டுமே படம்பார்ப்பதுண்டு. (எனது 5 அல்லது 6வயதில் என்னை யாழ்ப்பாணம் அழைத்துச் சென்ற என் பெரியண்ணா, “ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி!” என்றொரு படம் பார்க்க என்னையும் கூட்டிப் போயிருந்தாராம். அதில் வரும் ஒரு குகையைப் பார்த்து பயந்து நான் கதற படத்தைப் பாதியிலேயே விட்டுவிட்டு வந்த அண்ணா அதற்குப் பிறகு என்னைப் படம்பார்க்க அழைத்துச் செல்வதில்லை என்று சொல்லிச் சிரிப்பார். நிஜத்திற்கும் நிழலுக்கும் வேறுபாடு தெரியாத பருவத்தில் நான் பார்த்த முதல்படம் "ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி") 


“படம் பார்ப்பது- அதிலும் இளம் பிள்ளைகள் படம்பார்ப்பது- அவர்களைப் பழுதாக்கிப்போடும்!” என்ற பரவலான அபிப்பிராயம் ஊருக்குள் நிலவி வந்தது. வாலிப வயதுக்குரிய கட்டுப்பாட்டை மீறிய சில இளைஞர் யுவதிகள் - அவர்கள் வேறு எந்த வகையில் வரம்பு மீறியிருந்தாலும்- “படம் பார்த்துக் கெட்டுப்போனார்கள்!” என்றே பேசப்பட்டார்கள்.

1960களில்    எனது ஐந்தாம் வகுப்புப் பரீட்சைமுடிந்து வந்த விடுமுறையின்போது கொழும்புக்குப் போகும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. கொழும்பில் நிறையத் தியேட்டர்கள் இருப்பதாக அறிந்திருந்ததால் அங்கே நிறையப் படங்கள் பார்க்கலாம் என்ற ஆர்வத்துடன் போன எனக்கு வீரபாண்டிய கட்டப்பொம்மன், படிக்காத மேதை, தெய்வப்பிறவி என்ற மூன்று படங்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. 





கட்டப்பொம்மன் வெள்ளையர்களால் சிறைப்பிடிக்கப்பட்டபோதும், படிக்காதமேதை அவரது வளர்ப்புத் தகப்பனால் வீட்டைவிட்டுத் துரத்தப்படும்போதும்,
தெய்வப்பிறவி பத்மினி ஒரு காட்சியில் கலங்கி அழும்போதும் என்னையறியாமலேயே என் கண்களிலிருந்து கண்ணீர் புரளத் தொடங்கியிருந்தது. 

படத்தைப் படம் என்று எண்ணாமல், அது ஒரு பொழுதுபோக்கு என்று கருதாமல் அது சமூகத்தில் நடந்த நடக்கின்ற சம்பவங்களையே சித்தரிக்கின்றன என்ற உணர்வோடு அதைப் பார்க்கின்றபொழுதுதான் அதனை வெகுவாக இரசிக்க முடிகிறது. அத்தகைய இரசிகர்களாலேயே திரைப்படங்கள் சம்பந்தமாக பல்வேறு கருத்துக்களும் முன்வைக்கப் படுகின்றன. 

மேலோட்டமாக அதனை ஒரு பொழுதுபோக்காகமட்டுமே பார்க்கின்ற இரசிர்களிடத்தே அது எத்தகைய பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. அதனாலேயே விமர்சகர்களால் தரமற்ற படங்கள் என்று ஒதுக்கப்படுகிற ஏராளமான படங்கள் வசூலை அள்ளிக் குவிக்கின்றன. 
ஒரு சில உயர்தர விமர்சகர்கள் நினைப்பதுபோல் உண்மையிலேயே அவை தரமற்றவைதானா? 

                                       

நல்லதும் கெட்டதும் சேர்ந்தது உலகம். நன்மையும் தீமையும் கலந்தது சமூகம். இன்பமும் துன்பமும் இணைந்தது வாழ்க்கை. 

உலக வாழ்க்கை எப்போதுமே அவலங்கள் நிறைந்ததாகத்தான் இருந்துவந்திருக்கிறது. இதிலிருந்து மகிழ்ச்சியை மட்டும் தேர்ந்தெடுக்க முடிந்த மனிதர் மட்டுமே ஓரளவேனும் நிறைவான வாழ்வைக் கண்டிருக்கிறார்கள்.ஒவ்வொரு காரியத்திலும் குறைகளைமட்டுமே தேடிக்கொண்டிருந்துவிட்டு நிம்மதி பெறாமல் மறைந்து போனவர்கள்தான் இந்த மண்ணில் ஏராளம். இதிலிருந்து நாம் விடுபட்டாகவேண்டும். 

எல்லாத் துறைகளிலுமே குறை நிறைகள் உண்டு. 
ஆனால் அன்றுமுதல் இன்றுவரை குறைமட்டுமே பெரிதாகப் பேசப்படுகிற ஒரு துறை- திரைப்படத்துறைதான். 

இன்று ஒவ்வொரு வீட்டிலும் சமையலறை எவ்வளவு முக்கியமோ அந்தளவு தொலைக்காட்சியும் அவசியம் என்று எண்ணப்படுகிற அளவுக்கு காலம் மாறிப் போயிருக்கிறது. தொலைக்காட்சித் திரைகளை நிறைத்துக்கொண்டிருக்கிற திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர்களும் பேசுபொருளாகிவிட்ட இந்தச் சந்தர்ப்பத்தில்- பெரும்பாலானவர்களிடமிருந்த வருகின்ற ஒரே வகை விமர்சனம்- “திரைப்படங்கள் சீரழிந்து விட்டன!” 
ஆனால்- 
மெய்தானா அது? 
அதுவே மெய்யென்றால் அதனை அகற்றிவிட வேண்டியதுதானே! 
எவராலும் அது முடியாது. ஏனெனில் அவர்களது கருத்தில் உறுதியில்லை. ஆங்காங்கே ஒருசில குறைகள் இருந்தாலும் நிறைகளே ஏராளமாக இருக்கின்றன. 
குறைகளைத் தவிர்த்துவிட்டு நிறைகளை நோக்கி நாம் பயணப்பட்டால் என்ன? 
(திரைக்கடலோடி இலக்கியம் தேடுவோமா?)

















அடுத்த அத்தியாயத்தில் எனக்குப் பிடித்த இரண்டு பக்திப்படங்கள்பற்றி எழுதுகிறேன். 

ஒன்று- நடிகவேள் எம்.ஆர்.ராதா நடித்த இரத்தக்கண்ணீர். 
மற்றது- பத்மஸ்ரீ கமலகாசன் நடித்த அன்பேசிவம். 

என்ன... இவைகள் பக்திப் படமில்லையே சமூகப் படங்கள்தானே என்கிறீர்களா? எனக்கென்னமோ இவைகள் பக்திப் படங்களாகத்தான் தெரிகின்றன. 

பக்தி இலக்கியங்கள் சொல்லவந்த கருத்துக்களை அழகாகச் சொல்லும் இந்த இரண்டு படங்களும் என்வரையில் பக்திப் படங்களே!

(தொடரும்)