Montag, 27. Oktober 2014

திரைக்கடலோடி இலக்கியம் தேடி.. 13





















ஒரு பாமர இரசிகனின் இரசனைக் குறிப்புகள்

-இந்துமகேஷ்




உறவுதரும் மகிழ்வும் பிரிவுதரும் துயரும் கணப்பொழுதுக்குள் தோன்றிமறையும் உணர்வுகள்தாம். ஆனால் அவை நினைவுகளாய் மனதில் பதிந்து நீண்டகாலத்துக்கான உணர்வுகளாய் நம்முள் நிழலாடிக் கொண்டிருக்கின்றன.

சிறுசிறு சம்பவங்களின் கூட்டுத்தொகுப்பாய் ஒழுங்கமைக்கப்பட்ட வாழ்க்கைப் பயணத்தில் நம்மால் மேற்கொள்ளப்படும் காரியங்கள், அவற்றின் பிரதிபலிப்பாய் இன்பத்தையோ துன்பத்தையோ நமக்குத் தந்துசெல்கின்றன.

நாம் பெறும் இன்பதுன்பங்களுக்குக் காரணமானது நமது செயல்கள்தாம் எனினும் அது இன்பத்தைத் தருகிறதா அல்லது துன்பத்தைத் தருகிறதா என்பதைத் தீர்மானிப்பது நமது மனோநிலையைப் பொறுத்தது.

ஒருவருக்கு இன்பமாகத் தோற்றமளிப்பது இன்னொருவருக்குத் துன்பமாகத் தோன்றுவதும், ஒருவருக்குத் துன்பம் தருவதாகத் தோற்றமளிப்பது இன்னொருவருக்கு இன்பமளிப்பதாகத் தெரிவதும் அவரவரது மனோநிலையைப் பொறுத்து அமைவதே.
 
இந்த உலகம் தோன்றிய காலம்முதல் இன்றுவரை உலகவாழ்க்கை என்பது மனித சமுதாயத்தைப் பொறுத்தவரை ஒரேவிதமாகத்தான் இருந்து வருகிறது. வாழ்கின்ற மனிதர்கள் காலத்துக்குக் காலம் வித்தியாசப் படுகிறார்களே தவிர வாழ்க்கை என்பது என்பது ஒரேவிதமாகத்தான் இருந்து வருகிறது.

இரவும் பகலும் எப்படி ஒன்றோடொன்று இணைந்திருக்கிறNதூ அதுபோலவே இன்பதுன்பமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கிறது.
நன்மை தீமைகளும் அவ்வாறே.

தீமைகளைக் களைந்து தான்வாழும் சமுதாயத்தைச் சீர்படுத்தமுயல்வதாய்த் துணியும் மனிதனும் பல சந்தர்ப்பங்களில் அந்தத் தீமைக்கே பலியாகிப் போவதென்பதும் இந்த உலகத்தில் தொடர்கதையாகி விட்டிருக்கிறது.

நல்லவர்கள் வாழ்க்கைமுழுதும் துயரத்திலேயே உழல்வதும் பொல்லாதவர்கள் தமது அட்டூழியங்களாலும் அடாவடித்தனங்களாலும் சமுதாயத்தை அடக்கியாண்டுகொண்டு இன்பமாக வாழ்வதும் கண்ணெதிரே விரிகின்ற காட்சிகளாகிவிட்டன.
உயர்வு தாழ்வு கற்பித்து உலகவாழ்க்கையை நரகமாக மாற்றியமைத்துவிட்ட மனிதர்கள் உச்சாணிக்கொம்பில் உட்கார்ந்துகொண்டு உல்லாசவாழ்க்கை வாழ்வது, நலிந்தவர்கள் மனங்களிலும் ஒருவித நப்பாசையை வளர்த்துவிடுகிறது. நாமும் அவர்களைப்போல்  மாறிவிட்டால் நமக்கும் விடிவு பிறக்குமே என்ற நப்பாசையில் அவர்கள் மேற்கொள்ளும் காரியங்கள் அவர்களை அழிவுப் பாதைக்கே இழுத்துச் செல்கிறது. அதற்கான தண்டனையும் அளவுக்கதிகமாகவே அவர்களுக்குக் கிடைக்கிறது. வாழும்வகை புரியாமல் அவர்கள் விழிபிதுங்கித் தடுமாறுகிறார்கள். 

திரைக்கதைகளில் அதிகமான இடங்களை கதாநாயகன் கதாநாயகி ஆக்கிரமித்தாலும் அதேயளவு முக்கியத்துவத்தை வில்லன் எனப்படும் எதிராளியும் பெற்றுவிடுகிறான். பலசமயங்களில் கதாநாயகனையும்விட அதிகளவு முக்கியத்துவத்தை வில்லன்கள் பெற்றுவிடுவதும்  நிகழ்கிறது.

ஒருமுறை எனது நண்பர் ஒருவர் வேடிக்கையாகச் சொன்னார்:
“ஒரு படத்திலுள்ள கதாநாயகனாக அல்லது வில்லனாக வாழும் சந்தர்ப்பம் உனக்குக் கொடுக்கப்பட்டால் நீ எதைத் தெரிவுசெய்வாய் என்று என்னைக் கேட்டால் எனது தெரிவு வில்லன்தான். ஏன் தெரியுமா? ஒரு மூன்றுமணித்தியாலப் படத்தில் வில்லன் இரண்டு மணிநேரம் சந்தோஷமாக இருந்துவிட்டு இறுதியில் சாகிறான். கதாநாயகனோ வில்லனுடன் மல்லுக்கட்டவும், கதாயநாயகிக்காய் கண்ணீர்வடிக்கவும,; குடும்பத்துக்காக நண்பர்களுக்காக பாடுபடவும் என்று இரண்டரை மணிநேரமாகப் படாத கஷ்டமெல்லாம் பட்டு கடைசியில்  சுபம் என்று காட்டும்போதுதான் சிரிக்கிறான். ஆக அதிக நேரம் அல்லல்படுகிற கதாநாயகனைவிட இருக்கிற நேரத்தில் அதிகநேரம் சந்தோஷமாக இருந்துவிட்டுச் சாகிற வில்லனாக இருப்பது நல்லதல்லவா!?”

- ஒருசிலர் இப்படித்தான் சிந்திக்கிறார்கள்.
ஆனால் பார்வைக்கு வில்லனாகத் தெரிபவர்கள் எல்லோருமே உண்மையில் வில்லன்கள் அல்ல என்பதும் அவர்கள் தம்மை வில்லனாகக் காட்டி நடித்துக்கொண்டிருக்கிறார்கள்  என்பதும்  அவர்களோடு நெருங்கிப் பழகுபவர்களுக்குத் தெரியும். திரைப்படங்களில் வில்லன்களாகப் பெயரெடுத்தவர்களுக்கும் இது பொருந்தும்.

நிஜவாழ்க்கையில் நல்லவர்களாக வாழ்வது கஷ்டமாகவும், கணப்பொழுதில் தீயவர்கள் என்று பெயெரடுப்பது சுலபமாகவும் இருக்கிறது. ஆனால் நடிப்பு என்று வரும்போது நல்லவனாக நடிப்பது சுலபமாகவும் தீயவனாக நடிப்பது கஷ்டமாகவும் உணரப்படுகிறது.
 
ஒரு சமுதாயத்தில் தீமைகளை வளர்த்துவிடும் விடயங்களைத் தமது முகபாவத்தில் வெளிப்படுத்துவதோடு இரசிகர்கள்மனதில் அந்தக் கதாபாத்திரத்தின்மீது ஒருவித வெறுப்பையும் உருவாக்கவேண்டிய பொறுப்பு வில்லன் கதாபாத்திரம் ஏற்கும் நடிகனுக்கு அவசியமானதாகிறது.
எவ்வளவுக்கெவ்வளவு நாம் அந்த வில்லன்மீது வெறுப்புக்கொள்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு தீமைகளின்மீதும் நாம் வெறுப்புக்கொள்ளும் மனோநிலை வளரும்.

வில்லன்களை கதாநாயகன் அடித்துவீழ்த்தும்போது எழுகின்ற ஆரவாரம் அந்த வில்லனின் தீய நடவடிக்கைகளுக்கு வீழ்கின்ற அடிகளாக இரசிகர்கள் உணர்வதால் எழுகின்ற மகிழ்ச்சி ஆரவாரமே. 

தமிழ்த்திரைப்படங்களின் பெரும்பாலான கதாயகர்களும் பலவிதமான வில்லன் பாத்திரங்களையும் ஏற்றிருக்கிறார்கள். தீமைகளால் விளையும் அனர்த்தங்களை அந்தப் பாத்திரங்கள்மூலம் வெளிப்படுத்தியதோடு தமது நடிப்புத் திறனையும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

முன்னணிக் கதாநாயகர்கள் என்று புகழப்படுகிற சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர், ஜெமினி கணேசன், இவர்களோடு முத்துராமன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், என்று தொடர்ந்து ரஜனி காந்த், கமலகாசன், சிவகுமார், விஜயகுமார், சரத்குமார், சத்யராஜ், என்று பெரும்பாலான கதாநாயகர்கள் வில்லன்களாகப் பரிணமித்திருக்கிறார்கள். 

ஆனால் தமிழ்த் திரையுலகில் அதிக காலம் நிரந்தர வில்லன்களாகப் பவனிவந்தவர்கள் என்று தனியாக ஓர் நீண்ட பட்டியலே உண்டு. டி.எஸ்.பாலையா, எஸ்வி.ரங்கராவ், பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார், ராமதாஸ், அசோகன், இவர்களோடு வி.எஸ்.ராகவன், தேங்காய் சீனிவான், செந்தாமரை, மலேசியா வாசுதேவன், விஸ்வம், மணிவண்ணன், ஆனந்தராஜ், சரண்ராஜ், ரகுவரன் என்று தொடரும் வில்லன்கள் பட்டியல்.  

வில்லன்களும் பலரகம்.
குடும்பவில்லன்கள், சமுதாய வில்லன்கள், உலகமகா வில்லன்கள் என்று கதைகளுக்கேற்ப இவர்களும் உருப்பெறுவார்கள்:
குடும்பங்களைக் குலைத்து நாசம் பண்ணுவது குடும்ப வில்லன்களின்  வேலையாகவும், சமுதாயச் சீர்கேடுகளை வளர்த்து ஊரைப் பிளவுபடுத்துவது சமுதாய வில்லன்களின் வேலையாகவும், உலகத்தையே ஒட்டுமொத்தமாக அழித்துவிடத் திட்டம் தீட்டுவது உலகமகா வில்லன்களின் வேலையாகவும் இருக்கும்.

இவர்களிடமிருந்து உலகத்தைக் காப்பாற்றப் போராடும் கதாநாயகர்களுக்கு ஒத்துழைப்புத் தரவேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் திரைக்கதைகள் சமுதாயத்தை சீர்படுத்த ஓரளவுக்கேனும் உதவுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. 
“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்துவிடல்!” என்ற வள்ளுவன் வழியே பழைய கதாநாயகர்கள் தீமையை ஒழிக்க நன்மையைப் பயன்படுத்தியதாகக் கதைகள் அமைந்தன. இப்போதோ தீமையைக் கருவறுக்க வன்முறையே வழி என்பதாக உலகம் ஆயுதத்தைக் கையிலெடுத்தபின் உருவாகும் கதைகள் கதாநாயகர்களின் கைகளிலும் ஆயதங்களைக் கொடுத்ததால் வில்லன்கள் அவசியப்படவில்லை. (கடவுள்பாதி மிருகம்பாதி கலந்து செய்த கலவை நான் என்று கதாநாயகனே வில்லனும் ஆகிவிட்டான்.)

வாழ்க்கை நெறியைக் கற்றுத்தருவதில் இலக்கியத்தின் பங்கு மகத்தானது. ஆனால் அதன் அருமையை உணர்வதற்கேற்ப மனிதர்கள் தொகை இருந்ததில்லை என்பதும் இருக்கவில்லை என்பதும் கசப்பானதொரு உண்மை.

எழுத்துவடிவம் பெறுமுன் கர்ணபரம்பரைக் கதைகள் என்று சொல்லப்படும் செவிவழிக் கதைகள் மூலமாக உலாவந்த இலக்கியங்கள் ஒவ்வொரு சமுதாயத்திலும் அதிக இடம் பிடித்திருந்தன. எழுத்தாளர்களுக்குப் பதிலாக கதைசொல்லிகள் அதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து கொண்டார்கள்.

வாசிப்பு வாசனையற்ற மனிதர்களிடத்தேயும் இலக்கியங்களைக் கொண்டுவந்துசேர்க்கும் பெருமைக்குரியவை திரைப்படங்கள் எனில் அது மிகையல்ல.   


Donnerstag, 25. September 2014

திரைக்கடலோடி இலக்கியம் தேடி..12





ஒரு பாமர இரசிகனின் இரசனைக் குறிப்புக்கள்

-இந்துமகேஷ்.






இலக்கியத்தில் பெண்கள் குறித்து பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பல்வகைப்பட்ட விமர்சனங்கள் அவ்வப்போது தலைகாட்டுகின்றன. பெண்நிலைபற்றிய கருத்துக்கள் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப பரிமாறிக்கொள்ளப்படுகின்றன. தமிழ்ச் சமுதாயத்துக்குள் பெண் எப்போதும் உயர்நிலையிலேயே இருக்கிறாள் என்பது உண்மையேயாயினும் ஒருசில விதிவிலக்குகளை உதாரணம் காட்டி பெண்ணடிமைத்தனம் பற்றி அடிக்கடி விவாதங்கள் புரிவது வேடிக்கையானது.

தாய்சொல்லைத் தட்டாதே என்று தாயான பெண்ணைத் தலைவணங்கி வளரும் ஆண்மகன் தாய்க்குப்பின் தாரம் என்றும் மனைவிசொல்லே மந்திரம் என்றும் வாழக் கற்றுக்கொள்கிறான். அன்பின் வசப்பட்ட வாழ்வில் பெண்ணுக்குள் ஆணும், ஆணுக்குள் பெண்ணும் அடங்கிப் போவதென்பது இயற்கையானது.

ஒருவனுக்கு மகளாகவும் ஒருவனுக்கு சகோதரியாகவும் ஒருவனுக்கு மனைவியாகவும் ஒருவனுக்கு தாயாகவும் என்று ஆண்களோடு பின்னிப்பிணைந்த பெண்ணின் வாழ்வுக்கு பாதுகாப்புத் தரவேண்டியது தன் கடமை என்று ஆண் நினைக்கிறானேயன்றி அது அவளை அடிமைகொள்ள முயல்வதாக ஆகாது.

குடும்பவாழ்க்கை என்பது கட்டுக்கோப்பாக இருந்தால்மட்டுமே ஒரு சமுதாயம் சிறந்த சமுதாயமாக அமையமுடியும். ஆணோ பெண்ணோ தான் தன்சுகம் என்று வாழப் பழகிவிட்டால் குடும்பவாழ்க்கை சீர்குலைந்து போகிறது. உறவுகள் தொலைந்துபோகின்றன. ஒவ்வொருவரும் தத்தம் வாழ்வைத் தொலைத்துவிட்டு நிர்க்கதியாகிறார்கள்.

நாம் அன்புசெலுத்தாமல் மற்றவர்களிடமிருந்து அன்பைப் பெற்றுக்கொள்ள முடியாது. அன்பு செலுத்தத் தெரிந்த ஒரு பெண்ணால்மட்டுமே தன் குடும்பத்தை ஓர் ஆலயமாக மாற்ற முடியும். கணவனுக்காக பிள்ளைகளுக்காக என்று வாழும் பெண்கள் ஒரு சிலரது பார்வைக்கு கட்டுப்பெட்டித்தனமாகத் தோன்றினாலும் உண்மையில் அவள் தன் அன்பினால் அவர்களை ஆட்சி செய்கிறாள் என்பதே உண்மை. வெளிப்படையாக குடும்பத் தலைவனே அந்தக் குடும்பத்தை நிர்வகிப்பதுபோலத் தோன்றினாலும் ஆட்சிபுரிபவள் அந்தத் தலைவியே.

இலக்கியத்துப் பெண்கள்போல் சமகாலத்திலும் நாம் ஏராளமான பெண்களைக் காண்கிறோம். நிகழ்காலத்துக்கேற்ப வாழ்க்கைமுறைகளில் மாற்றங்கள் வந்தாலும் நமது சமூகத்துக்குரிய பண்பாடு, பழக்க வழக்கங்கள் என்பனவற்றைப் பக்குவமாகப் பயன்படுத்தி வாழவும் கற்றுக்கொண்டிருக்கிறார்கள் நமது பெண்கள்.

பெரும்பாலான தமிழ்த் திரைப்படங்கள் பெண்களின் பெருமை பேசுவனவாகவே இருக்கின்றன. என்பதை நாம் கவனிக்கலாம். கதாசிரியர்கள் பெரும்பாலும் ஆண்களாகவே இருப்பதால் பெண்ணை வெறும் கவர்ச்சிக்குரியவளாக மட்டுமே சித்தரிக்கிறார்கள் என்றும், அவர்களது பிரச்சினைகள் பேசப்படுவதில்லை என்றும் பரவலான குற்றச்சாட்டுக்கள் அவ்வப்போது எழவே செய்கின்றன.

பெண்மனம் சார்ந்த விடயங்கள் குறித்து கதைகள் எழுதப்படும்போது தாய்மையும் பரிவும் தியாகமும் அதில் முக்கிய இடம் வகிப்பதை நாம் காணலாம்.

“... நாளெல்லாம் பட்டினியாய் இருந்திடுவாள் 
ஒரு நாழிகை நம் பசி பொறுக்கமாட்டாள் 
மேலெல்லாம் இளைத்திடப் பாடுபட்டே 
மேதினியில் நாம் வாழச் செய்திடுவாள்!... ”
என்று தாயின் தியாகம்பற்றிச் சொல்வான் ஒரு திரைக்கவிஞன்.

தனது கடமைகள் இன்னதென்று இயல்பாக அவள் உணர்ந்தபடியே அவள் காரியமாற்றுகிறாள் இதைத்தான் நீ செய்யவேண்டும் என்று யாரும் அவளை நிர்ப்பந்திப்பதில்லை.

பெண் பிறக்கும்போதே தாய்மையின் இயல்போடேதான் பிறக்கிறாள். 
அறிவு தெளிய ஆரம்பித்ததுமே அவளது கைகளில் பொம்மைக் குழந்தைகள் வந்தமர்ந்து விடுகின்றன. பொம்மைக் குழந்தைகளை அழகுபடுத்தவும் அவற்றோடு கதைபேசவும் தாலாட்டவும் அவள் பெரிதும் விருப்பப்படுகிறாள். தானும் அழகாக வளர்ந்து, சூழலையும் அழகுபடுத்தி, தன்னைச் சார்ந்த சகமனிதர்களும் அழகாக இருக்கவேண்டும் என்பதில் அவள் கொள்ளும் விருப்பம் அவளது வாழ்வை மட்டுமல்ல அவள்சார்ந்த மற்றவர்களது வாழ்க்கையையும் வளமானதாக்குகிறது.

இதற்கு மாறாக சுயநலமும், தான் எனும் கர்வமும், அன்புசெலுத்துவதை அடிமைத்தனம் என்று கருதுபவளாகவும் அவள் இருந்துவிட்டால் அவளது வாழ்வோடு அவளைச்சார்ந்த மனிதர்களது வாழ்வும் அர்த்தமற்றுப்போகிறது.

ஒரு பெண்ணின் நிலையிலிருந்து தான் உணர்ந்ததையும் கற்றுக் கொண்டதையுமே ஒரு கதாசிரியன் கதையாகத் தருகிறான். அந்தப் பெண்ணின் கதாபாத்திரத்தை ஏற்றுக்கொள்ளும் நடிகையான பெண்ணும் அந்தப் பாத்திரமாகவே மாறி திரைக்கதையை நிஜமென்று மாற்றிக்காட்ட முயல்கிறாள்.

தமிழ்த்திரையுலகில் முத்திரைபதித்த எண்ணற்ற நடிகையர்கள் மத்தியில் தாம் பங்கேற்ற பாத்திரங்கள் மூலம் என்றும் நிலைத்திருக்கின்ற நடிகையர்கள் வரிசையில், அன்னை -பானுமதி, நானும் ஒருபெண்- விஜயகுமாரி, துலாபாரம்- சாரதா, குலவிளக்கு- சரோஜாதேவி, நீலவானம்- தேவிகா, கைகொடுத்த தெய்வம்- சாவித்திரி, அவளுக்கென்றொரு மனம்- பாரதி, எங்கிருந்தோ வந்தாள்- ஜெயலலிதா, அவள் ஒரு தொடர்கதை- சுஜாதா, சிறை- லட்சுமி, மூன்றாம்பிறை- ஸ்ரீதேவி, நிழல் நிஜமாகிறது- ஷோபா, மொழி- ஜோதிகா, எனத் தொடரும் கதாநாயகிகளும், முக்கிய துணைப் பெண்பாத்திரங்களாக அவ்வப்போது வந்தாலும் நினைவிலே நிற்கிற மண்வாசனை காந்திமதி, முதல்மரியாதை வடிவுக்கரசி, இவர்களோடு, ஏராளமான வித்தியாசமான பெண்களை திரைமுகமாய்க் காட்டியுள்ள ஆச்சி மனோரமா என்று திரையில் வாழும் அத்தனை பாத்திரங்களும் காலம் கடந்தும் வாழத்தக்கவர்கள்.

தமிழ்த்திரையின் ஆரம்பகாலக் கதாநாயகிகள் பலரும் பின்னர்; தாயின் பாத்திரங்களை ஏற்றுக்கொண்டு அந்தப் பாத்திரங்களுக்குச் சிறப்பைத் தந்தார்கள்.
அம்மாக்களாக தமிழ்த்திரையில் வலம்வந்த கண்ணாம்பா, டி.ஆர்.ராஜகுமாரி, எம்.வி.ராஜம்மா, எஸ்.என்.லட்சுமி, பண்டரிபாய், வரிசையில் லட்சுமி, ராதிகா, ரேவதி, சுஜாதா, சரிதா, என்று தொடர்ந்து இப்போது சரண்யா மிகச் சிறந்த அம்மாவாக உலாத்திக்கொண்டிருக்கிறார். 

(நடிகர் நடிகைகள் வயதாகி மறைந்துபோனாலும் அவர்கள் ஏற்றுக்கொண்ட தரமான பாத்திரங்கள் அழியாத காவியங்களாக என்றும் நிரந்தரமாக உயிர்வாழ்ந்துகொண்டிருக்கும் )

பெண்ணை முக்கிய பாத்திரமாகக் கொண்டு எழுதப்பட்ட பெரும்பாலான திரைக்கதைகள் குடும்பக் கதைகளாகவே இருப்பதை நாம் அவதானிக்கலாம்.
குடும்பப் பாங்கான வேடங்களைத் தாங்கிய நடிகைகள் பலர் இரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள் என்றால் அது அவர்கள் ஏற்ற பாத்திரங்களுக்குக் கிடைத்த அங்கீகாரமே.

“குடும்பக் கதைகளா? என்ன குடும்பக் கதைகள்...? வெறும் காதல், தோல்வி, கண்ணீர் என்று சுற்றிச்சுற்றி அரைத்த மாவையே அரைக்கிற கதைகள்..! இவ்வளவும்தான் பெண்ணின் பிரச்சனைகள் என்பதுபோல் சித்தரிக்கின்ற கதைகள்..! உண்மையில் இவைதானா பெண்ணின் பிரச்சினைகள்.. இதற்குமேல் எதுவுமில்லையா..?” என்ற ஒருகேள்வி இந்தப் படங்கள் குறித்துக் கேட்கப்படலாம்.
ஆம். அது அப்படித்தான்.
ஒரு பெண்ணுக்கு ஏற்படும் எல்லாப் பிரச்சினைகளும் இந்த மூன்றுக்குள்ளேயே அடக்கம். காதல் என்பது அவளது பருவத்தோடொட்டிய விடயமாகவும், தோல்வி என்பது அவளது நினைப்புக்களுக்கும் இலட்சியத்திற்குமான பெறுபேறாகவும், கண்ணீர் என்பதே அவளுக்குக் கிடைக்கும் பரிசாகவும் கருதமுடிந்தால் இந்த மூன்றுக்குள்ளேயே அவளது பிரச்சினைகளும் அடங்கிவிட்டதாய்க் கொள்ளலாம். அவளது பிரச்சனைகளிலிருந்து அவள் மீண்டெழுவதற்கான தீர்வினை ஒரு கதை கொண்டிருந்தால் அது சிறந்த கதையாகிறது.

தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகிகளை முதன்மைப்படுத்தி வெளியான பல திரைப்படங்கள் காலம்கடந்தும் பேசப்படுவனவாக இருக்கின்றன. அத்தகைய கதைகளைத் தந்த கதாசிரியர்களும் அந்தக் கதாபாத்திரங்களுடன் காலம்கடந்தும் வாழ்வார்கள்.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், விசு, கே.பாக்கியராஜ் ஆகியோர் பெண்களின் மன உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துவதில் கைதேர்ந்த கதாசிரியர்கள். 




கன்னத்தில் முத்தமிட்டால் மூலம் மணிரத்தினமும், அழகி படத்தின் மூலம் தங்கர்பச்சானும் பெண்களின் மன உணர்வுகளைப் படம்பிடித்திருக்கிறார்கள்.
  


Donnerstag, 11. September 2014

திரைக்கடலோடி இலக்கியம் தேடி... 11





















ஒரு பாமர இரசிகனின் இரசனைக் குறிப்புக்கள்

-இந்துமகேஷ்




“ பிறக்கும்போதும் அழுகின்றாய்
இறக்கும்போதும் அழுகின்றாய்
ஒருநாளேனும் கவலையில்லாமல் 
சிரிக்க மறந்தாய் மானிடனே! ”
(கவிஞர் கண்ணதாசன்- கவலையில்லாத மனிதன்)


மகிழ்ச்சியையும் மன அமைதியையும் எங்கோ தொலைத்துவிட்டு எதிராளிகளைப் பார்ப்பதுபோல் நெருங்கிய உறவுகளையே முறைத்துக்கொண்டு வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கும் மனிதர்களின் தொகை இப்போது அதிகமாகிவிட்டிருக்கிறது.

வெறுப்பும் சலிப்பும்காட்டி மற்றவர்களது மனங்களையும் துன்பத்தில் தள்ளுவதையே நோக்கமாகக் கொண்டவர்களாய் மாறிவரும் சமுதாயத்தில் மகிழ்ச்சி எங்கிருந்து தோன்றும்?

அன்பு என்ற உணர்வே அற்றுப்போனவர்களாய் தாம் தம் நலன் என்று வாழ்பவர்கள் முகத்தில் மலர்ச்சி இல்லை மகிழ்ச்சி இல்லை அதனால் அவர்களது உதடுகளில் சிறு புன்னகைகூட அரும்புவதில்லை.

மருத்துவநிலையங்களில் கூட்டம் அதிகமாகிறது.
”உங்களுக்கு உடம்பில் ஒரு வியாதியும் இல்லை!” என்று கைவிரிக்கிறார் வைத்தியர்.
மருந்து தேடிப்போனவர் ஒப்புக் கொள்வதாயில்லை.
”நன்றாகப் பரிசோதனை செய்து பாருங்கள்!” என்று கெஞ்சுகிறார்.
”உங்களுக்கு மன அழுத்தம்தான்.. வேறொன்றுமில்லை. எப்போதும் சிரித்துச் சந்தோஷமாக இருக்கப் பழகிவிட்டீர்களானால் எல்லாம் சரியாகிவிடும்!?

தலைநிறையப் பிரச்சனைகளைச் சுமந்துகொண்டு அத்தோடு கூடவே உடல்நலமும் குன்றிப்போய் இருப்பவனைப் பார்த்து, “சிரித்துச் சந்தோஷமாக இரு!” என்றால் நடக்கிற காரியமா என்ன?

“எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.. ஆனால் நான்மட்டும்..? எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன்?” என்று சலித்துக் கொள்ளும் மனநோயாளியாக மாறிவிட்டவனிடம் சிரிப்பைக் கற்றுக்கொடுப்பது எப்படி?

வாழும் காலமும் சூழலும் ஒவ்வொருவர் வாழ்விலும் மாற்றத்தைக் கொண்டு வரும் என்பது உண்மைதான். ஆனால் வருகின்ற வேதனைகளையும் சோதனைகளையும் ஒருபுறம் ஒதுக்கித் தள்ளிவிட்டு மற்றவர்களை மகிழ்வித்து தானும் மகிழ்வதுதானே ஒரு மனிதனின் கடமையாக இருக்கவேண்டும்.

எத்தனை துயரங்களுக்கிடையிலும் உதடுகள் இழந்துவிடாத புன்னகையோடு உலாவரும் மனிதர்கள் மற்றவர்களிடத்தே உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் வரவழைக்கிறார்கள்.
ஒருபோதும் அவர்கள் தமது துயரங்களை வெளிக்காட்டிக்கொள்வதில்லை.
“உங்களுக்கு என்னப்பா குறை எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பீர்கள்!” என்று மற்றவர்கள் அவர்களைப் பார்த்து வியப்பார்கள்.
சிரிப்பு ஒன்றே அவர்களிடமுள்ள பெரிய சொத்து.
இந்த உலகம் இன்னும் அழகாகத் தெரிகிறது என்றால் அதற்குக்காரணம் அவர்களது மலர்ந்த முகங்கள்தாம்.

சிரிப்பதைவிட சிரிப்பூட்டுவது என்பது மிகக் கஷ்டமான காரியம்.
அதனை இலகுவாக்கியவர்கள் நகைச்சுவை நடிகர்கள். 
பொழுதுபோக்குக்காகவும், மனஅமைதிக்காகவும் என்று திரையரங்குகளை நிறைக்கும் இரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்துவதோடு அவ்வப்போது சில நல்ல கருத்துக்களை விதைப்பதிலும் திரைக்கதையைவிட நகைச்சுவைக் காட்சிகள் முக்கியத்துவம் பெறுவதுண்டு.

பெரும்பாலான நகைச்சுவைப் பாத்திரங்கள் தம்மை வருத்தியே மற்றவர்களைச் சிரிக்கவைப்பதுண்டு. 

தமிழ்த்திரைப்படங்களின் முதன்மை நகைச்சுவையாளரான கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தாமே பலவிதமாகச் சிரித்து மற்றவர்களைச் சிரிக்கவைத்தார் ஒரு திரைப்படப்பாடல்மூலம்.

“ சிரிப்பு! 
அதன் சிறப்பைச் சீர்தூக்கிப் 
பார்ப்பதே நமது பொறுப்பு.
மனம் கறுப்பா வெளுப்பா என்பதை எடுத்துக் 
காட்டும் கண்ணாடிச் சிரிப்பு -இது 
களையைநீக்கி கவலையைப் போக்கி 
மூளைக்குத் தரும் சுறுசுறுப்பு. 
துன்பவாழ்விலும் இன்பம் காணும் 
விந்தைதருவது சிரிப்பு -அதைத் 
துணையாய்க்கொள்ளும் மக்களின் மனத்தில் 
துலங்கிடும் தனிச் செழிப்பு!



-பாடலைப் பாடிக்கொண்டே விதவிதமான மனிதர்களைப்போல் அவர் சிரித்துக்காட்டும்போது எந்த உம்மணா மூஞ்சியும் வாய்விட்டுச் சிரித்துவிடும்.
நகைச்சுவை உணர்வோடு நல்ல கருத்துக்களை இலகுவாக மனங்களில் புகுத்த முடியும் என்ற அடிப்படை உண்மையைப் புரிந்துகொண்டதால் அவர் நகைச்சுவைவேடங்களையே அதிகம் தாங்கினார்.





இரத்தக்கண்ணீர் படத்தில் வரும் எம்.ஆர்.ராதாவின் பாத்திரப்படைப்பு நகைச்சுவையின் உச்சத்தைத் தொட்டிருந்தது. அளவுகடந்த வேதனையின்போது வெளிப்படும் வார்த்தைகளிலும் நகைச்சுவை உணர்வைக் கலந்திருப்பார் அவர். பெரும்பாலான படங்களில் அவர் வில்லனாக வந்தபோதும் அந்தப் பாத்திரங்களும் நகைச்சுவையைப் பிரதிபலிக்கத் தவறவில்லை.

ஒரு திரைப்படத்தின் கதாநாயகனைப்போல் நகைச்சுவை நடிகரும்
அந்தத் திரைப்படத்தின் இரண்டாவது கதாநாயகனுக்குரிய தகுதியைப் பெற்றிருப்பார்.

என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஸ்.பாலையா, சந்திரபாபு, குலதெய்வம் ராஜகோபால், தங்கவேலு, நாகேஷ், வெண்ணிற ஆடைமூர்த்தி, தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், தயிர்வடை தேசிகன், வீரப்பன், ஓமக்குச்சி நரசிம்மன், சோ, எஸ்வி.சேகர், கவுண்டணி, செந்தில், குமரிமுத்து, மணிவண்ணன், வடிவேலு, விவேக், தாமு, மயில்சாமி, மதன்பாப், வையாபுரி, கஞ்சா கருப்பு, என்று தொடரும் வரிசையில் எண்ணற்ற துணை நகைச்சுவை நடிகர்களும் இணைந்து தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவையை நிறைத்து வைத்திருக்கிறார்கள்.






சிவாஜி,எம்.ஜிஆர்.,ஜெமினி, முத்துராமன், ரஜனி, கமல், சத்யராஜ், பாக்கியராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், ஜெயராம் என்று முக்கியமான கதாநாயகர்களும் அவ்வப்போது நகைச்சுவையை வழங்கத் தவறவில்லை.

பாடல்கள் சண்டைக் காட்சிகள்போல் தமிழ்த் திரைப்படங்களில் நீங்காமல் இடம்பெறுவன நகைச்சுவைக் காட்சிகள். பல படங்களில் சோகமான திரைக்கதையை அதன் மாற்றுவடிவமாக ஒரு கிளைக் கதையை நகைச்சுவையாக மாற்றி அமைத்து படத்தில் இணைத்திருப்பதை அவதானிக்கலாம்.

அடுத்தவீட்டுப்பெண், காதலிக்க நேரமில்லை அறிவாளி, கலாட்டா கல்யாணம், பாமாவிஜயம் அனுபவி ராஜா அனுபவி, மணல்கயிறு, ஆண்பாவம், இம்சை அரசன் 23ம்புலிகேசி, மும்பை எக்ஸ்பிரஸ்,; தெனாலி, பஞ்சதந்திரம், முற்றுமுழுதான நகைச்சுவைப்படங்களாக வெளியானவை.
இவற்றில் காதலிக்கநேரமில்லை இன்றுவரை சிறந்த நகைச்சுவைப் படமாகப் பேசப்படுகிறது.

கல்யாணப்பரிசு தங்கவேலு, திருவிளையாடல் நாகேஷ், மணல்கயிறு எஸ்விசேகர், தெனாலி கமல் தமிழ்த்திரை இரசிகர்களால் என்றும் மறக்கமுடியாத பாத்திரங்கள்.






நகைச்சுவைப் பாத்திரங்களை உருவாக்கும் எழுத்தாளர்கள் வரிசையில் கோபு, வீரப்பன், சோ, எஸ்வி.சேகர், கிறேசிமோகன், பாக்கியராஜ், விசு ஆகியோர் என்றும் மறக்கமுடியாத சிரிப்பூட்டும் பாத்திரங்களை தமிழ்த்திரைக்குத் தந்திருக்கிறார்கள். ஏனைய எழுத்தாளர்களைவிட நகைச்சுவை எழுத்தாளர்கள் தனித்திறமை வாய்ந்தவர்கள் என்றே சொல்லத்தோன்றுகிறது.
சமுதாய நலனோடு அதேசமயம் சகமனிதர்களைப் புண்படுத்தாமல் நகைச்சுவை உணர்வைப் பிரதிபிக்கும் ஆற்றல் கொண்டவர்களால்மட்டுமே நகைச்சுவை எழுத்தாளர்களாகப் பரிமளிக்க முடியும்.

தமிழ்த்திரையுலகம் அத்தகைய திறமைசாலிகளைப் பெற்றிருக்கிறது என்று நாம் தயங்காமல் ஒத்துக்கொள்ளலாம்.







    






Mittwoch, 27. August 2014

திரைக்கடலோடி இலக்கியம் தேடி...10





 















ஒரு பாமர இரசிகனின் இரசனைக் குறிப்புக்கள்.

-இந்துமகேஷ்


வாழ்க்கை என்பது ஒவ்வொருவருக்கும் இறைவனால் வழங்கப்பட்ட வரம்.
எப்படி வாழ்வது என்பது அவரவர் குணாதிசயங்களைப் பொறுத்தது. வாழ்க்கைக்கென்று சில கட்டுக் கோப்புக்களை மனிதசமுதாயம் வகுத்து வைத்திருக்கிறது. அதை உடைத்துக்கொண்டு வெளியேறுபவன் தீயவனாகவும் அதற்குள்ளேயே நின்று வாழ்க்கையை நடாத்துபவன் நல்லவனாகவும் காட்சிதருகிறார்கள்.

நல்லவன் கெட்டவன் என்ற பேதங்கள் அவரவர் செயல்களால் தீர்மானிக்கப்படுகிறது. நல்லவன் என்று புகழப்படுபவனிடத்தில் தீய குணங்கள் எதுவுமே இருந்திருக்காது என்றோ தீயவன் என்று ஒதுக்கப்படுகிறவனிடத்தே நல்ல குணங்கள் எதுவுமே இருக்காது என்றோ இது அர்த்தப்படாது. வாழ்ந்த, வாழும் சூழலைப் பொறுத்து இயல்பு நிலையிலிருந்து மாறுபடுவதென்பது இயற்கையாகவே நடந்துவிடுகிறது. அதிலிருந்து மீண்டு புதிய வாழ்க்கையைத் தொடங்குமுன் பலருடைய ஆயுட்காலம் முடிந்துவிடுகிறது. அவர்கள் வாழும் காலத்தில் இந்த உலகத்தில் அவர்கள் விட்டுச் செல்லும் நன்மை தீமைகளே அவர்களின் வாழ்க்கையைச் சொல்கின்றன.
 
சமுதாயமாக மனிதன் வாழக் கற்றுக்கொண்டாலும் ஒவ்வொரு தனிமனிதனைப் பொறுத்தவரைக்கும் அவனே கதாநாயகன். அவனது துணையாக வருபவள் கதாநாயகி. ஏனைய உறவுகள் யாவும் துணைப் பாத்திரங்கள்தாம்.

அடுத்தவர் வாழ்க்கையில் துணைப் பாத்திரமாக இருப்பினும் ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கையைப் பொறுத்தவரையில் கதாநாயகர்களே.
 
(பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களைவிடவும் துணைப்பாத்திரங்களே மனதில் இடம்பிடித்துக்கொள்வதும் அவ்வப்போது நிகழ்கிறது. வாழ்க்கைப்படகு-முத்துராமன், நெஞ்சிருக்கும்வரை-

வி.கோபாலகிருஷ்ணன், உயர்ந்தமனிதன்;-அசோகன், கண்கண்டதெய்வம்-எஸ்வி.சுப்பையா, என்னதான்முடிவு-டி.எஸ்.பாலய்யா, தண்ணீர்தண்ணீர்-டெல்லிகணேஷ், அர்ச்சனைப்பூக்கள்- பூர்ணம் விஸ்வநாதன், சலங்கைஒலி-சரத்பாபு, ஒரு கை ஓசை-சங்கிலிமுருகன், தாமரைநெஞ்சம்-நாகேஷ், அபூர்வராகங்கள்-ரஜனிகாந்த், 
ஈ-பசுபதி, என நீண்ட பட்டியலில் அடக்கவேண்டிய இன்னும் ஏராளமான கலைஞர்களால் வெளிப்படுத்தப்பட்ட கதாபாத்திரங்கள் தமிழ்த் திரையுலகில்  நிலைத்து, இரசிகர்கள் மனதில் நீங்காமலும் இருக்கிறார்கள்.



கதாநாயகன் என்றதுமே அவன் ஏதோ ஒருவகையில் சிறப்புள்ளவனாகவும் நல்லவனாகவும் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு நமக்கு ஏற்பட்டுவிடுகிறது.
திரைக்கதைகளில் வருகிற கதாநாயகர்கள் இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றி வந்தார்கள்.


தானும் நன்மைகளைப் பரிந்து அதற்கு எதிராக இடையூறாக இருப்பவர்களையும் திருத்தி நல்லவர்களாக்கி அவர்களது வாழ்க்கையையும் செப்பனிட்டு நல்லதொரு சமுதாயம் மலரவேண்டும் என்று பாடுபடுகிற கதாநாயகர்களையே அதிகமாகக் கண்டிருந்த தமிழ்த்திரையுலகம் திடீரென அடிதடிக்கும் குத்துவெட்டுக்கும் தயாராக இருக்கின்ற கதாநாயகர்களை அண்மைக் காலங்களில் உருவாக்கத் தொடங்கியிருக்கிறது.

உலகம் எங்கும் வன்முறைகளையே சந்தித்துக்கொண்டிருக்கும் ஒரு படைப்பாளியின் பேனா அதையே பதிவு செய்ய விழைவதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. ஆனால் அவர்கள் சமுதாய அக்கறையோடு செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டை அவர்கள்மீது வீசுகிறோம்.

வன்முறை வன்முறையைத்தான் பிரசவிக்கும் என்பதையே அவர்கள் காட்ட முனைந்தார்கள். திரைக்கதையின் முடிவையும் அவ்வாறே அமைத்தார்கள்.
(நாயகன், பம்பாய், ரோஜா, மகாநதி, விருமாண்டி, தலைநகரம், வெய்யில், தம்பி, போன்ற படங்கள்)


வன்முறையைக் கையிலெடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்பட்டு அந்த வன்முறையாலே தம்மை இழந்தவர்களின் பட்டியல் மிகப்பெரியது (நிஜவாழ்வில்).

எத்தனையோ நூற்றுக்கணக்கான கதாநாயகர்களும், கதாநாயகிகளும் வன்முறைகளுக்குப் பலியானதும் பலியாகிக்கொண்டிருப்பதும் மனித வரலாற்றில் ஒரு தொடர்கதை.

மனித சமுதாயத்தை மாற்றியமைக்கப் புறப்பட்ட புனிதர்களில் பெரும்பாலானோர்கூட (யேசு, காந்தி, மார்ட்டின் லூதர்) இத்தகைய வன்முறைகளுக்குப் பலியாகிப் போனவர்களே எனும்போது சராசரி மனிதன் எம்மட்டு?

வாழ்வைச் சித்தரிக்கும் திரைப்படங்களில்மட்டும் வன்முறை ஏன் என்று சீற்றம் கொள்வதென்பது சிரிப்புக்கிடமானது.
நிகழ்கால வாழ்வில் எதிர்ப்படும் நிஜங்களைச் சித்தரிக்காமல் வெறும் கற்பனைக் குதிரையோட்டிக்கொண்டிருக்கும் படைப்பாளிகளை வரவேற்க யாரும் தயாராக இல்லை.
திரைக்கதை அமைக்கும் படைப்பாளி இதனை நன்கறிவான். காலமாற்றத்துக்கேற்ப நிஜவாழ்வில் அவன் சந்திக்கும் பாத்திரங்களை திரைக்கதையில் கொண்டுவரும்போது வன்முறையாளர்களான கதாபாத்திரங்கள் அதிகமாய் இடம்பிடித்துக்கொள்கிறார்கள்.

காட்சிப்படுத்தலில் சற்று மிகைப்படுத்தலும் சேர்ந்துவிடும்போது, இப்படியெல்லாமா நடக்கிறது? என்ற கேள்வி இரசிகர்கள் மனதில் தோன்றுகிறது. என்றாலும் வெவ்வேறு வகையான இரசனை உணர்வு உள்ளவர்கள் அதனை ஒரு குறையாகக் கொள்ளாமல் திரைப்படத்தின் ஏனைய பக்கங்களில் (கதையமைப்பு, பாடல்கள், காட்சிப்படுத்தல், நடிப்பு, ஒளியமைப்பு என்று) தங்கள் இரசனையைச் செலுத்துவதன் மூலம் இத்தகைய படங்களும் வரவேற்புப் பெறுகின்றன.

முன்னைய திரைப்படங்களில் உதாரணங்கள்மூலம் வன்முறை வெளிப்படுத்தப்பட்டது.
இரண்டு சமமான மனிதர்கள் மோதிக்கொள்ளும்போது, சிங்கமும் புலியும் மோதிக்கொள்ளும். கதாநாயகியை வில்லன் நெருங்கும்போது புள்ளிமானை சிங்கமோ அல்லது கோழிக்குஞ்சை பருந்தோ கவ்விக்கொள்ளும். சம்பந்தப்பட்ட கதாபாத்திரங்களைவிட்டு மெதுவாக நழுவும் ஒளிப்படக் கருவி நடைபெறும் சம்பவத்துக்கு இணையான வேறொரு இயற்கைக் காட்சியைக் கோர்த்துக் கொள்ளும்.
இதெல்லாம் இப்போது தேவையில்லை.

வர்ணனை சார்ந்த இலக்கியங்களை சுவைப்பதிலிருந்து இரசனைகள் மாறுபட்டு யதார்த்தம் தேடியபோது எல்லாவற்றையும் நேரடியாகச் சித்தரிக்கப்படவேண்டிய கட்டாயத்துக்குள் படைப்பாளி தள்ளப்பட்டான். அதன் விளைவே திரைப்படங்களின் புதிய மாற்றத்துக்கும் காரணமாயிற்று.

வன்முறை, ஆபாசம் என மலினப்பட்டுப் போயிற்று திரைப்படம் என்று வருந்துதில் அர்த்தமில்லை. மாறாக நாம் வாழும் சமுதாயத்தில் மாற்றங்கள் வரும்போது திரைப்படங்களிலும் மாற்றம் தானாக வரும். இத்தகைய மாற்றங்களைப் பிரதிபலிக்கத் தக்க படங்களைத் தயாரிக்கும் ஆர்வமும் விருப்பமும் நமது திரைக்கலைஞர்களுக்கு நிறையவே இருக்கிறது என்பதை அவ்வப்போது அவர்கள் தரும் பேட்டிகளிலிருந்து நாம் காணமுடிகிறது.



Samstag, 23. August 2014

திரைக்கடலோடி இலக்கியம் தேடி... 9




















ஒரு பாமர இரசிகனின் இரசனைக் குறிப்புக்கள்

-இந்துமகேஷ்





உலகத்தரம் என்று ஒன்று.
இது எல்லோர்க்கும் பொது என்ற ஒன்றாக இல்லாமல் பிறநாட்டவன், பிறமொழிபேசுபவன், பிற கலாச்சாரப் பண்புகள் வாய்ந்தவன் என்று அடுத்தவனிலிருந்து நாம் எந்தளவு வித்தியாசப் படுகிறோம் என்பதைக் கணிப்பிடுகிற ஒன்றாக நோக்கப்படுகிறது.

அவனைப்போல் அல்லது அவனைவிட நான் எந்தளவு உயர்ந்தவன் என்று நோக்குகிற மனோபாவம் நமது முன்னேற்றத்துக்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இது நம்மை ஒருவித தாழ்வுச் சிக்கலுக்குள் தள்ளிவிடுகிறது.

நம்மிடமுள்ள தனித்துவத்தை அதன் சிறப்பை மறந்து அடுத்தவனைப் பார்த்து ஆதங்கப்பட ஆரம்பிக்கும்போதுதான் நமது முன்னேற்றமும் தடைப்பட்டுப் போகிறது. ஒருவித மனத்தளர்ச்சிக்குள் நாம் தள்ளப்பட்டுவிடுகிறோம். சாதனை புரியும் தகுதி நம்மிடம் இல்லையோ என்ற சந்தேகம் வலுத்துவிடுகிறது. இவ்வளவுதான் நாம் என்று ஒரு வட்டம் போட்டுக்கொண்டு அதற்குள்ளேயே சுற்றிவரத் தொடங்கிவிடுகிறோம்.

தமிழ்த்திரையுலகமும் இப்படியொரு தாழ்வுச் சிக்கலுக்குள அவ்வப்போது தள்ளப்பட்டுக்கொண்:டே வந்திருக்கிறது. அதனை மீட்டெடுக்க முனைந்தவர்களும் பலவித  சோதனைகளைச் சந்தித்தாகவேண்டியிருந்தது.
வெளிநாட்டுக்காரனைப் பார் எத்தனை அற்புதமாகப் படம் எடுக்கிறான்... நாங்களும் எடுக்கிறோமே.. படமா இது? என்று சலித்துக்கொள்வதில் நாம் சலிப்புக்கொள்வதில்லை.

உலகளாவிய ரீதியில் வெளியாகும் திரைப்படங்கள் என்று கணக்கிட்டுப் பார்த்தால் பல்லாயிரக்கணக்கான திரைப்படங்கள் இதுவரை வெளியாகிவிட்டன.
இதில் எத்தனை திரைப்படங்கள் தரமானவை என்று விமர்சகர்கள் புளுகிக்கொண்டிருக்கிறார்கள்.? பிறமொழிப் படங்களைப் பார்த்து இரசிக்கும் இரசிகர்களின் கணிப்பின்படி எத்தனை படங்கள் தரமானவை என்று கணக்கில் கொள்ளப்பட்டிருக்கின்றன? 
ஒரு நூறு? அல்லது இருநூறு?

வருடாந்தம் ஆயிரக்கணக்கான படங்களைத் தயாரித்துத் தரும் உலகத் திரைப்படத்துறை விரல்விட்டு எண்ணத்தக்க அளவுக்குத்தான் தரமானது என்று பேசப்படும் படங்களைத் தயாரிக்கிறது என்றால் உலகத் திரைப்படத் துறையில் ஒரு பகுதியான தமிழ்ப் படத்துறை எத்தனை படங்களைத் தரமுடியும்.?

தரமான பல படங்கள் வெளிவந்தும் அதைத் தரம் என்று ஒப்புக்கொள்ள மறுக்கிற மனோபாவத்துக்கு உலகத்தரம் என்று பெயரிட்டு அவற்றை ஓரங்கட்டுவதில் நமக்கு நிகரானவர்கள் நாமே.
தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன்போல், யார் என்னசொன்னாலும் தரமான படங்களைத் தயாரித்தே தீருவோம் என்று சளைக்காது பாடுபடும் கலைஞர்களும் தமிழ்த்திரையுலகில் நிறையவே இருக்கிறார்கள். சாதித்துக்கொண்டும் இருக்கிறார்கள்.

பல்வகைப்பட்ட மாந்தர்களின் வாழ்க்கையைச் சொல்லும் இலக்கியங்களின்
ஆரம்பம் அவதாரபுருசர்களைக் கதைமாந்தர்களாகக் கொண்டது. (இராமாயணம், மகாபாரதம், சிலப்பதிகாரம், இன்னோரன்ன கதைகளிலும் இவற்றிலுள்ள கிளைக்கதைகளிலுமுள்ள கதை மாந்தர்கள்)

பிறகு மன்னர்களைக் கதைமாந்தர்களாக்கியது (அக்பர், அரிச்சந்திரா, அம்பிகாபதி, வீரபாண்டிய கட்டபொம்மன், அரசிளங்குமரி, நாடோடி மன்னன், இராஜராஜசோழன் மன்னாதி மன்னன், ஆயிரத்தில் ஒருவன்போன்ற படங்கள்;) 

பிறகு மேல்தட்டு மனிதர்களைக் கதைமாந்தர்களாக்கியது. ( உயர்ந்த மனிதன், எங்க ஊர் ராஜா, பைலட் பிரேம்நாத், மோட்டார் சுந்தரம்பிள்ளை, அபூர்வ ராகங்கள் ) 

பின்னர் நடுத்தரக் குடும்பத்து மாந்தர்கள் ( கல்யாணப்பரிசு, ஆடிப்பெருக்கு, ஆலயமணி, அவள் ஒரு தொடர்கதை,) தொடர்ந்து அடித்தட்டு மக்கள் கதாபாத்திரங்களாயினர். (துலாபாரம், சுவரில்லாத சித்திரங்கள்)

திரையில் இலக்கியம் படைக்க விளைந்தவர்கள் நகரங்களிலிருந்து கிராமங்களுக்கு வந்தார்கள். (பதினாறு வயதினிலே, அலைகள் ஓய்வதில்லை, மண்வாசனை,) 
அவர்களது படக்கருவிகளின் பார்வைக்குள் இயற்கை இலக்கியமாய்ப் படிந்தது. அந்த இயற்கையோடு இரண்டறக் கலந்த மனிதர்கள் கதாபாத்திரங்களாக தமிழ்த் திரைப்படங்களில் வாழ ஆரம்பித்தார்கள்.

முடிந்துபோன காலங்களை மறுபடி மீட்டிப்பார்ப்பதில் உள்ள சுகத்தை உணர்ந்தவர்களாய் அதை இலக்கியமாக்கும் முயற்சியில் ஒரு சிலர் ஈடுபாடுகாட்டியபோது உருவான சில படங்களின் வெற்றி தமிழ்த் திரையுலகில் புதியதொரு மாற்றத்தைக் கொணர்ந்திருக்கிறது என்றே சொல்லலாம். (பாலுமகேந்திராவின் அழியாத கோலங்கள், சேரனின் -ஆட்டோகிராப், தவமாய்த் தவமிருந்து - தங்கர்பச்சானின் - அழகி, பள்ளிக்கூடம்) 

சிறந்த ஒரு நாவலைப் படித்த மனநிறைவை அண்மையில் எனக்குத் தந்த படம்- கல்லூரி.
நடிகர்களாகப் பரிச்சயம் கொள்ளாத முகங்களோடு அந்தக் கதையின் பாத்திரங்களாகவே இன்னும் மனதில் நிழலாடுகிற அந்தக் கதை மாந்தர்கள் ஒருபோதும் மறக்கவே முடியாதவர்களாய் என்னுள் நிலைத்துவிட்டார்கள்.
ஏழ்மைநிலவும் குடும்பங்களிலிருந்து கல்லூரிக் கனவுகளோடு வாழ்வைத்தொடரும் இளைஞர் யுவதிகளை அவர்தம் உணர்வுகளை யதார்த்தம் மாறாது கண்ணெதிரே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது கல்லூரி. மிகைப்படுத்தப்படாது வெளிப்படுத்தப்படும் அந்தத் தோழமை உணர்வும், வெளிப்படுத்தப்படாமலே முற்றுப்பெறுகின்ற காதலும் இந்தக்கதையில் முக்கிய பங்கு எடுத்திருந்தபோதும், நடிக்கிறார்கள் என்ற உணர்வே தோன்றாமல் எல்லாப் பாத்திரங்களும் இயல்பான மாந்தர்களாய் வாழ்ந்து முடித்திருக்கிறார்கள் என்பது இந்தப் படத்தின் சிறப்பு.



கையில் எடுத்ததும் வாசித்து முடித்துவிட்டுத்தான் வைக்கவேண்டும் என்று துடிப்பேற்படுத்துகிற ஓர் இலக்கியமாய், தொடக்கம் முதல் முடிவு வரை அந்தப் பாத்திரங்களோடு உறவாடிக்கொண்டிருக்கவேண்டும் என்ற உத்வேகத்தைத் தருகிறது கல்லூரி.
பாலாஜி சக்திவேல் என்கிற அந்தப் புதிய எழுத்தாளனுக்கென்று தமிழ்த் திரையுலகத்தில் ஒரு தனியிடத்தைத் தந்திருக்கிறது கல்லூரி.























Dienstag, 29. Juli 2014

திரைக்கடலோடி இலக்கியம் தேடி...8


ஒரு பாமர இரசிகனின் இரசனைக் குறிப்புக்கள்.
-இந்துமகேஷ்



„...வீரம் விலைபோகாது விவேகம் துணைக்கு வராவிட்டால்..!
தீட்டிய வாளும் தினவெடுத்த தோள்களிலே
தூக்கிய ஈட்டியும் போதாது தோழர்களே!
இதோ நான் தரும் அறிவாயுதத்தையும் 
எடுத்துக் கொள்ளுங்கள்!“

-மேடையில் கிரேக்கத்துத் தத்துவஞானி சாக்ரடீஸ் பேசிக்கொண்டிருக்கிறார்.
மெய்மறந்து கேட்டுக்கொண்டிருக்கிறது இரசிகர் கூட்டம்.

ஊருக்குள் அவ்வப்போது விழாக்கள் நடக்கும்.
பெரும்பாலான விழாக்களில் இடம்பெறும் முதன்மையான ஒர் அம்சம் -„ஓரங்க நாடகம்.“
அதென்ன ஓரங்கம்?
அந்தச் சொல்லும் அதன் பொருளும் அந்த நேரத்தில் எனக்குத் தெரிந்திருக்கவில்லை.


ஒரு வரலாற்றின் அல்லது ஒரு கதையின் நாடகவடிவத்தின் ஒரு பகுதிதான் அது என்பதைப் பின்னர் தெரிந்துகொண்டேன்.

ஓரங்க நாடகங்கள் மூலம் ஊருக்குள் உலாவந்த அனார்க்கலி, சாக்ரடீஸ், சாம்ராட் அசோகன் சேரன் செங்குட்டுவன், ஒதெல்லோ, சத்தியவான் சாவித்திரி போன்ற கதாபாத்திரங்கள் உள்ளூர் இளைஞர்களின் உணர்ச்சிகரமான நடிப்பில் மேடைகளை அலங்கரித்தார்கள்.


வேற்றுமொழி இலக்கியங்களிலிருந்து தமிழ் வடிவம் பெற்ற பாத்திரங்கள்கூட செந்தமிழ்பேசி சிலிர்க்க வைத்தார்கள்.
இந்தக் கதாபாத்திரங்கள் எல்லாம் தமிழ்த்திரைப்படங்களிலிருந்துதான் வெளிப்பட்டார்கள் என்பதும், இவர்கள் எல்லாம் தமிழ்த் திரைக் கதாசிரியர்களின் கைவண்ணமே என்பதும் பின்னர் நான் தெரிந்துகொண்ட செய்திகள்.

பராசக்தியின் நீதிமன்றக் காட்சியும், வீரபாண்டியக் கட்டபொம்மனின் வெள்ளைக்காரத் துரையுடனான விவாதங்களும் ஓரங்கநாடகங்களாக மாறி அந்தக்கால இளைஞர்களை வீர வசனம் பேசவைத்துக்கொண்டிருந்த போதுதான் இந்த ஓரங்க நாடகங்களும் முகம் காட்டின.

ஒரு முழுநீளத் திரைக்கதைக்குள் கிளைக்கதைகளாய் இத்தகைய ஓரங்க நாடகங்கள்  இடம்பிடித்துக் கொண்டிருந்தன. 

தூயதமிழ் வசனங்களால் இதயங்களைக் கொள்ளையிட்ட இந்தக் கதாபாத்திரங்களில் பெரும்பாலானவை நடிகர்திலகத்தின் மூலமாகவே உயிர்பெற்றிருந்தன.

அனார்க்கலியின் நாயகனான சலீம் (இல்லறஜோதி), தத்துவஞானி சாக்ரடீஸ்(ராஜா ராணி),சாம்ராட் அசோகன் (அன்னையின் ஆணை), ஒதெல்லோ(இரத்தத் திலகம்), சேரன் செங்குட்டுவன் (ராஜா ராணி), சத்தியவான் சாவித்திரி(நவராத்திரி), சகுந்தலையின் நாயகன் துஸ்யந்தன்(எங்கிருந்தோ வந்தாள்), விடுதலைவீரன் பகத்சிங், யூலியஸ் சீசர், (ராஜபார்ட் ரங்கதுரை) என்று அவர் ஏற்ற பாத்திரங்கள் ஏராளம். அந்த ஓரங்க நாடகங்கள் மூலம் என்றுமே மறக்கமுடியாத நிலையில் இன்றும் அவர்கள் நம்மிடையே உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்..







புராண இதிகாசக் கதைகளினின்று சமூகக் கதைகளுக்கு தமிழ்த் திரையுலகம் முன்னிடம் கொடுத்த அந்த ஆரம்பகாலங்களில் பெரும்பாலான கதைகளின் நாயகர்கள் ஒரு படைப்பாளியாகவோ அல்லது நாடகக் கலைஞனாகவோ அல்லது இசைக்கலைஞனாகவோதான் சித்திரிக்கப்பட்டார்கள்.
கலை இலக்கியம் சார்ந்த கதாபாத்திரங்களை முக்கியமானவர்களாகக் கொண்டு கதை பின்னப்படும்போது அவர்களது வாழ்க்கையில் நாடகம் ஒரு பங்கு வகிக்கும். அவர்கள் எழுதுவதாகவோ நடிப்பதாகவோ ஒரு ஓரங்க நாடகம் திரைக்கதைக்குள் நுழைந்துகொள்ளும்.

கே.பாலசந்:தர் எனும் ஒரு அற்புதமான நாடகாசிரியர் பின்னர் திரைக் கதை வசனகர்த்தாவாகவும் இயக்குனர் சிகரமாகவும் உயர்ந்தவர். அவரது நீர்க்குமிழி, எதிர் நீச்சல் மேஜர் சந்திரகாந்த், சர்வர் சுந்தரம் போன்ற பல நாடகங்கள் பின்னர் அவராலேயே திரைவடிவம் பெற்றன. சராசரி மனிதவாழ்வில் இடம்பெறும் சம்பவங்களைக்கொண்டு
பின்னப்பட்ட கதைகளே ஆயினும் நுண்ணிய மன உணர்வுகளை அப்படியே அற்புதமாக வெளிக்கொண்டு வரும் அவரது ஆற்றல் அவரது படைப்புக்களை இரசிகர்களிடத்தே நிலை நிறுத்திவைக்க உதவியது.

அவரது பாத்திரங்களை ஏற்று நடித்த பல புதுமுகங்கள் பின்னாட்களில் பிரபலம் பெற்றதற்கு அவரது பாத்திரப் படைப்புக்களும் ஒரு முக்கிய காரணம்.

தன்னைத்தான் தரமான இரசிகனாக எண்ணிக்கொள்ளும் ஒருவன், „நான் பாலசந்தரின் படங்களைத்தான் விரும்பிப் பார்ப்பேன்“ என்று சொல்லிக் கொள்வதன்மூலம் தன்னை உயர்த்திக்கொண்டு அவருக்கும் சிறப்பைத் தேடிக்கொண்டிருந்தான்.

திரைக்கதைகளில் மிகுந்த கவனம் செலுத்துபவர்களில் கே.பாலசந்தருக்குத் தனியிடம் உண்டு. அவரது கதைகளில் பெரும்பாலானவை  முற்றுப் பெறாதவை. ஒரு கதையின் முடிவிலிருந்து இன்னொரு கதையை நாம் ஆரம்பிக்கலாம் என்று கருதத் தக்கவகையில் அவரது கதைகள் இருக்கும். முடிவை இரசிகர்களிடமே அவர் விட்டு விடுவதும் உண்டு. 

தமிழ்த் திரையுலகில் எத்தனையோ கதைகள் யதார்த்தத்தைப் பிரதிபலித்திருக்கின்றன என்ற உண்மையைப் புரிந்துகொள்ளாமல், அல்லது புரிந்தும் புரியாதவர்களாய் தங்களைக் காட்டிக்கொள்கிற இரசிகர்கள் சிலர், தாங்கள் எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதையோ அல்லது யதார்த்தம் என்று எதைப் புரிந்தகொண்டிருக்கிறார்கள் என்பதையோ தெளிவுபடுத்துவதில்லை.

எத்தனையோ கோடிக்கணக்கான மனிதர்கள் வந்துபிறந்து வாழ்ந்து முடித்துவிட்டுப்போன இந்த உலகத்தில் ஒருசில நூற்றுக்கணக்கானவர்களே பேர்சொல்ல வாழ்ந்திருக்கிறார்கள் என்பதால் மற்றவர்கள் வாழ்வெல்லாம் அர்த்தமற்றதென்று சொல்லிவிட முடியுமா?
எல்லோரும் வாழவே முயற்சித்திருப்பார்கள். வாழ்ந்திருப்பார்கள். 

மர்மக்கதையாய் தொடங்கும் வாழ்க்கை, மாயாஜாலக்கதையாய் கற்பனைகளில்விரிந்து, பல சமயங்களில் சோகக் கதைகளாகவும் சிலசமயங்களில் நகைச்சுவைக் கதைகளாகவும் உருப்பெற்று மறுபடியும் மர்மக்கதையாகவே மடிந்துபோகிறது. இந்த இடைப்பட்ட வாழ்க்கைக் காலம் பெருமளவில் கற்பனைகளிலேயே கரைந்துபோய் விடுகிறது. அந்தக் கற்பனைகளையே திரையுலகம் பிரதிபலிக்கிறது.

கற்பனைகளில் வாழ்க்கையைக் காண்பவனுக்கு அது யதார்த்தம்.
யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளாதவனுக்கு அது கற்பனை.

Sonntag, 8. Juni 2014

திரைக்கடலோடி இலக்கியம் தேடி...7














-ஒரு பாமர இரசிகனின் இரசனைக் குறிப்புக்கள்
-இந்துமகேஷ்.


வாழும் காலத்தைப் பிரதிபலிக்கத் தவறுகிற படைப்புக்கள் அவற்றின் இலக்கியத் தன்மையையும் இழந்துவிடுகின்றன. யதார்த்தத்தைப் பேசுகிற அல்லது யதார்த்தத்தை வெளிக்கொணருகிற கதாபாத்திரங்கள் இலக்கியத் தன்மையைப் பெற்றுவிடுவதால் அவை காலகாலத்துக்கும் நிலைத்து நிற்கின்றன.

கலை, இலக்கியங்கள் எப்போதுமே இரண்டு விடயங்களைத் தம்முள் கொண்டிருக்கின்றன.
ஒன்று- மகிழ்வூட்டுவது. 
மற்றொன்று -மனித சமுதாயத்தை நெறிப்படுத்துவது.
இவற்றில் ஒன்று குறைவுபட்டாலும் அவை வெற்றிபெறுவதில்லை.

மகிழ்வூட்டும் கலையாகிய திரைப்படத்துறை வாழ்க்கையை நெறிப்படுத்தும் தன்மையையும் தன்னுள் கொண்டிருக்கும்போதுதான் அது இலக்கியத்தோடு தன்னை இணைத்துக் கொள்கிறது. வெறுமனே பொழுதுபோக்குக் கலையாகமட்டும் மாறிவிடாமல் அது நின்று நிலைக்கிறது.

திரைத்துறையின் வருகைக்கு முன்னான பண்டைய காலகட்டங்களில் தமிழ் இலக்கியம் பாக்களினூடேதான் வளர்ந்திருக்கிறது.

உரைநடைகளாக இலக்கியங்கள் மாற்றம் பெறுமுன் பாடல்களாகவே இலக்கியங்கள் படைக்கப்பட்டிருந்ததாலோ என்னவோ  ஆரம்பகாலத் தமிழ்த் திரைப்படங்கள் பாடல்களுக்கு அதி முக்கியத்துவம் அளித்திருந்தன. இன்றுவரை அது தொடர்கிறது.
இனியும் அது தொடரும்.

“காதல் வீரம் சோகம் என்று எதைச் சொல்வதானாலும் ஒரு பாட்டு. இது இயற்கைக்கு மீறிய ஒரு காரியமில்லையா? இப்படிச் சந்தர்ப்பங்களில் எல்லாம் ஒருவன் பாடிக்கொண்டா இருப்பான்?” என்று பல மேதாவிகள் இப்போதும் கூப்பாடு போட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
அவர்களின் கூச்சல்களையெல்லாம் ஓரமாக ஒதுக்கிவிட்டு தமிழ்ப்படங்களில் பாடல்கள் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றன.

இசை நமது வாழ்வோடு இணைந்துவிட்ட ஒரு காரியமாகிவிட்டது என்பதே யதார்த்தம்.

நாம் மண்ணில் வந்து வீழ்ந்தபோது அழுகுரலிலேயே கச்சேரியைத் தொடங்கிவிடுகிறோம். அம்மா பாடும் தாலாட்டுப் பாட்டில் கண்ணயர்கிறோம். நம்மைப் படைத்தவனைப் பிரார்த்திப்பதற்கென்று பள்ளிக்கூடத்தில் பாட்டுப் பாடச் சொல்கிறார்கள். தேசியகீதம் என்று தேசத்துக்கு வணக்கம் சொல்லவும் பாட்டு. உள்ளம் கவர்ந்தவனை (அல்லது கவர்ந்தவளை) நினைத்துக்கொண்டு நின்றாலும் நடந்தாலும் குளித்தாலும் மனதினுள் ஆனந்தப்பாட்டு.

எல்லாம்முடிந்து கடைசிப்பயணம் புறப்படும்போது மற்றவர்குரலில் எழும் ஒப்பாரிப் பாட்டு.
பாட்டில்லாமல் வாழ்வாவது?
அதனால்தான் தமிழ்ப் படங்களிலும் பாட்டு.


இத்தனை ஆயிரக்கணக்கான பாடல்கள் உருவாகிவிட்டன.
ஏதேனும் ஒரு பாட்டில் தனது வாழ்வின் ஒரு நிகழ்வையாவது தரிசிக்காதவன் எவனுமே இல்லை என்கிற அளவுக்கு எல்லோர் வாழ்வோடும் திரைப்படப் பாடல்களும் பின்னிப் பிணைந்துவிட்டன.

தமிழின் இனிமையை நாம் சுவைப்பதற்கு தமிழ்த் திரைப்படப் பாடல்கள் வழி வகுத்திருக்கின்றன.
பழந்தமிழ் இலக்கியங்களின் சுவையை பாமரர்களும் சுவைப்பதற்கு வழிசமைத்தவை தமிழ்த் திரைப்படப் பாடல்கள்தாம்.
இதற்கு ஏராளமான உதாரணங்கள் உண்டு.

தமிழ்த்திரைப்படப் பாடல்களில் பெரும்பாலான பாடல்கள் இலக்கியச்சுவை மிகுந்தவையே.
அன்று அமரர் கல்கி அவர்கள் எழுதி இசையரசி எம்.எஸ் சுப்புலட்சுமி அவர்கள் மீரா படத்துக்காகப் பாடிய காற்றினிலே வரும் கீதம் பாடல் அதன் இலக்கியச்சுவையாலேயே இன்றும் இளமைமாறாதிருக்கிறது.
இலக்கியச் சுவைமிகுந்த எண்ணற்ற பாடல்கள் தமிழ்த்திரையுலகில் தமக்கெனத் தனிமுத்திரையைப் பதித்துநிற்கின்றன. 










மரபுக் கவிதைகள் என்ற வகைக்குள் அடங்கும் ஏராளமான பாடல்களைத் தந்த கவியரசு கண்ணதாசன்முதல் புதுக்கவிதை என்ற வகைக்குள் அடங்கும் கவிதைகளைப் பாடல்களாகத் தந்த கவிஞர் வைரமுத்துவரை பிரபலமான கவிஞர்களோடு அவ்வப்போது ஓரிரு பாடல்களைமட்டுமே வரைந்து அழகுபார்க்கும் இளங்கவிஞர்கள்வரை தமிழ்த்திரையுகில் இலக்கியத்தை வளர்த்தெடுத்தார்கள். வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

அழகுதமிழ்ச் சொற்களை அடுக்கிவைத்து எழுத்துக்கோபுரம்கட்டும் திறன்வாய்ந்த பலர் தமிழ்த்திரையுகில் தடம்பதித்தபோதிலும் தனது எழுத்துக்கென்று ஒரு தனிப்பாணியை வகுத்துக்கொண்ட டி.இராஜேந்தர் என்ற கலைஞனை ஒரு தனித்துவமான இலக்கியவாதியாக நான் காண்கிறேன்.

மொழியின் தனித்துவத்தை அதன் வார்த்தைகளாலேயே மற்றவர் மகிழத் தருவதில்; அவருக்கு இணை அவர்தான். அவரது கதாபாத்திரங்கள் பெரும்பாலும் அடுக்குமொழியில் உரையாடுவார்கள். சிலசமயங்களில் அது மிகைபடத்தோன்றினாலும் அவரது மொழி ஆளுமையில் அந்த மிகைப்படுதல் மறைந்துபோய் அதை நாம் இரசிக்க ஆரம்பித்துவிடுவது அவரது எழுத்துக்கான வெற்றியே.
திரைக்கதை வசனம் பாடல்கள் இசை இயக்கம் நடிப்பு என்று பலவிதத்திலும் அவர் தனது பணியை விரிவுபடுத்தினாலும் அவரது பாடல்களின்மூலம் அவர் தன்னை ஒரு இலக்கியவாதியாக நிலை நிறுத்தியிருக்கிறார்.





(ஜெர்மனியிலிருந்து வெளியாகும் வெற்றிமணி பத்திரிகையில்
2008 காலப்பகுதியில் வெளியான எனது கட்டுரைத்தொடர்)